Friday, March 28, 2014

ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்: கடற்படையின் ஜெட்லைனர் கப்பலை தாக்கிய விடுதலைப் புலிகள் .2

20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவந்த விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த இறுதி யுத்தத்தை தொடக்கிய மாதமாக, 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் அமைந்திருந்தது என குறிப்பிட்டிருந்தோம். அந்த மாதத்தில் விடுதலைப் புலிகள் மாவிலாறு அணைக்கட்டு கதவுகளை மூடி தண்ணீர் செல்ல விடாமல் தடுத்ததில், இலங்கை ராணுவம் தமது நடவடிக்கைகளை தொடங்கியது என்றும் கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

ஜூலை மாதத்தில் தொடங்கிய யுத்தம், அந்த மாதத்தின் இறுதி நாளான 31-ம் தேதி, ராணுவம் மாவிலாறில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அணைக்கட்டில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவுக்கு நெருங்கி விட்டதில் முடிந்தது.

மாவிலாறில் யுத்தம் தமக்கு பாதகமாக முடியப் போகிறது என 31-ம் தேதி புரிந்துகொண்ட புலிகள், மறுநாள் ஆகஸ்ட் 1-ம் தேதி, மற்றொரு முனையில் யுத்த முனையை திறந்தார்கள். இலங்கை கடற்படையின் துருப்பு காவி கப்பலை தாக்கி மூழ்கடிக்க திட்டமிட்டார்கள்.

இந்த கப்பல் ஆபரேஷனை புரிந்து கொள்ள, அந்த நாட்களில் இலங்கையின் பகுதிகளில் எவை ராணுவத்தின் கைகளில் இருந்தன, எவை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையின் வடக்கு முனையில் உள்ளது யாழ்ப்பாண குடாநாடு. 1990களிலேயே யாழ்ப்பாண குடாநாட்டை புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ராணுவம், யாழ்ப்பாண குடாநாட்டை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதற்கு கீழே (தெற்கே) முகமாலை என்ற இடத்தில் இருந்து, ஓமந்தை என்ற இடம் வரையுள்ள வன்னிப் பகுதி, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்குள்தான், கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட சில நகரங்கள் உள்ளன.

அதற்கும் தெற்கே, இலங்கையின் மற்றைய பகுதிகள், தலைநகர் கொழும்பு உட்பட, அரசின் கன்ட்ரோலில் இருந்தன.

அதாவது, மேலேயும், கீழேயும் (வடக்கேயும், தெற்கேயும்) அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. நடுவே வன்னி பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.

இதனால், வடக்கே யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ வீரர்கள், விடுமுறைக்கு தெற்கே தமது ஊர்களுக்கு போவது என்றால், தரை வழியாக போக முடியாது. யாழ்ப்பாணத்தில் உள்ள படைகளுக்கு தெற்கே இருந்து சப்ளை அனுப்புவது என்றாலும், தரை வழியே அனுப்ப முடியாது. தரை பாதை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இங்கேதான் வருகிறது, நாம் குறிப்பிட்ட கப்பல் ஆபரேஷன்.

யாழ்ப்பாணத்தில் இருந்து விடுமுறையில் செல்லும் ராணுவத்தினரை கப்பல்களில் ஏற்றி, கிழக்கு கடல் வழியாக திரிகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு செல்வார்கள். அதே கப்பலில், திரிகோணமலையில் இருந்து விடுமுறை முடிந்து பணிக்கு வரும் ராணுவத்தினரையும், சப்ளை பொருட்களையும், யாழ்ப்பாணம் கொண்டு செல்வார்கள்.

திரிகோணமலை துறைமுகம் ராணுவத்திடம் இருந்தது. அதன் அருகேயுள்ள சம்பூர் மற்றும் சில கடற்கரை பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. இணை்டுக்கும் இடையே தூரம் அதிகமில்லை.

இந்த கப்பல் போக்குவரத்து இல்லை என்றால், வடக்கே யாழ்ப்பாணத்தில் இருந்த ராணுவம், நாட்டின் மீதி பகுதியில் இருந்து போக்குவரத்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விடுவார்கள். விமானம் மூலம் ஆயிரக்கணக்காக ராணுவத்தினரை ஏற்றி இறக்குவது சாத்தியமில்லை. கப்பல்தான் ஒரே வழி.

ஜூலை மாதம் மாவிலாறில் யுத்தம் தொடங்கியபோது, பாவனையில் இருந்த கப்பலின் பெயர், ஜெட்லைனர்.

2006-ம் ஆண்டு, ஆகஸ்ட், 1-ம் தேதி. ஜெட்லைனர் கப்பல், யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து ராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு திரிகோணமலையை நோக்கி வந்தது. கப்பலில் சுமார் 1,200 ராணுவத்தினர் இருந்தார்கள். இந்தக் கப்பலுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக, கடற்படையின் 12 வேகப் படகுகள் கப்பலின் இருபுறமும் வந்தன.
இலங்கை கடற்படை, ஜெட்லைனர் கப்பலை இந்தோனேசியாவில் இருந்து வாடகைக்கு அமர்ந்தி அப்போது 1 மாதம்தான் ஆகியிருந்தது. கப்பலை செலுத்திய மாலுமிகள், மற்றும் அதன் கேப்டன், இந்தோனேசியர்கள்.

கப்பல் திரிகோணமலை துறைமுகத்தை அணுகிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் சம்பூர் கடற்கரையில் இருந்து கடல் புலிகளின் சுமார் ஒரு டஜன் தாக்குதல் படகுகள் வேகமாக இந்தக் கப்பலை நோக்கி வரத் தொடங்கின. அத்துடன், சம்பூரில் தரைப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள், ஜெட்லைனர் கப்பலை நோக்கி பீரங்கிகளால் தாக்க தொடங்கினார்கள்.

கப்பலின் இந்தோனேசிய கேப்டனுக்கோ, இலங்கையில் இப்படியான தாக்குதல் நடக்கும் என்று கூறப்பட்டிருக்கவில்லை. அவரும், மற்றைய இந்தோனேசிய மாலுமிகளும் நடுங்க தொடங்கினார்கள். கடல் தாக்குதலில் என்ன செய்வது என அவர்களுக்கு தெரியவில்லை.

ஜெட்லைனர் கப்பலில், இலங்கை கடற்படை சார்பில் கமாண்டிங் ஆபிசராக அன்று பணியில் இருந்தவரின் பெயர், நோயல் கலுபோவில.

கப்பலின் வேகத்தை சடுதியாக அதிகரிக்குமாறு இந்தோனேசிய கேப்டனிடம் உத்தரவிட்டார், கமாண்டர் கலுபோவில. ஜெட்லைனர் கப்பல், வேகமாக செல்வதற்காக அதன் அடிப்பகுதி அலுமினியத்தால் ஆனது. இதனால், கப்பலை வேகமாக செலுத்திச் செல்லலாம். ஆனால், கப்பலின் அடிப்பாகத்தில் குண்டு தாக்கினால், சுலபமாக உடைந்து, மூழ்கி விடும்.

இதற்கிடையே, கடல் புலிகளின் வேகப் படகுகளில் இருந்து, ஜெட்லைனர் கப்பலை நோக்கியும், அதை காவல் காத்து வந்த இலங்கை கடற்படையின் 12 வேகப் படகுகளை நோக்கியும் தாக்குதல்கள் தொடங்கின. கடலில் கடுமையான யுத்தம் தொடங்கியது.

கடல் புலிகளின் தாக்குதலில், இலங்கை கடற்படை வேகப் படகுகளில் இருந்த 5 கடற்படையினர் கொல்லப்பட்டார்கள். 12 பேர் காயமடைந்தார்கள். கடலில் யுத்தம் நடைபெறுவது குறித்து கரைக்கு அறிவிக்கப்பட, இலங்கை விமானப்படையின் MI-24 ரக ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஹெலிகாப்டர்கள் கடலுக்கு மேலே பறந்தபடி, கடல் புலிகளின் படகுகளை தாக்கி, அவை ஜெட்லைனர் கப்பலை நெருங்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. இதற்கிடையே வேகம் எடுத்த ஜெட்லைனர் கப்பல், வழமைக்கு மாறான வேகத்துடன், திரிகோணமலை துறைமுகத்துக்குள் நுழைந்தது. அந்த துறைமுகத்தில் உள்ள ஆஷ்ரஃப் ஜெட்டி இறங்குதுறையில் போய் நங்கூரமிட்டது.

ஜெட்லைனர் சேதமில்லாமல் தப்பித்துக் கொண்டது. கடல் புலிகளின் படகுகளால், திரிகோணமலை துறைமுகத்துக்குள் நுழைய முடியாதபடி கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன.

யுத்தம் அன்று அத்துடன் முடிந்தது. ஆனால், மறுநாள் பெரிய அபாயம் காத்திருந்தது.

2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி, காலை 10 மணி.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டு பகுதியான சம்பூரில் இருந்து, பீரங்கி தாக்குதலை தொடங்கினர். திரிகோணமலை துறைமுகத்தின் நுழைவு பகுதியை நோக்கி அவர்களின் ஆட்டிலரி தாக்குதல்கள் இருந்தன.

முதலில் 5 ஆட்டிலரி ஷெல்கள் புலிகளால் ஏவப்பட்டபோது, அவற்றில் ஒரு ஷெல், திரிகோணமலை துறைமுகத்தின் வாய் (நுழைவு) பகுதியின் நடுவே போய் விழுந்தது. அதையடுத்து, சம்பூரில் இருந்த புலிகளின் பீரங்கி, துறைமுகத்தின் வாய் பகுதியை நோக்கி ஜீரோ செய்யப்பட்டு விட்டதை (Artillery gun was zeroed in the centre of the harbour mouth) புரிந்து கொண்டது இலங்கை கடற்படை.

இதன் அர்த்தம் என்னவென்றால், விடுதலைப் புலிகள் திரிகோணமலை துறைமுகத்தை ப்ளாக் செய்ய திட்டமிடுகிறார்கள். சம்பூரில் இருந்த புலிகளின் பீரங்கி துறையும வாய் பகுதியை குறி வைத்து இருப்பதால், துறைமுகத்துக்குள் கப்பல்கள் ஏதும் நுழைய முடியாது. உள்ளேயிருந்த கப்பல்கள் வெளியேற முடியாது. துறைமுகம் முழுமையாக ப்ளாக் செய்யப்பட்டுவிடும்.

இந்த நிலையில், இலங்கை ராணுவத்துக்கு இருந்த ஒரே சாய்ஸ், அந்த தடையை நீக்குவது. அதற்கு, சம்பூர் பகுதியை புலிகளிடம் இருந்து கைப்பற்றி, தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதற்குமுன், எப்படியாவது துறைமுகத்துக்குள் உள்ள ஜெட்லைனர் கப்பலை வெளியே கொண்டுசெல்ல வேண்டும்.

அன்றிரவு 11.30 மணி.

அந்த அகால நேரத்தில், இலங்கை கடற்படை தளபதி வசந்த கரணகொடவிடம் இருந்து அவசர தொலைபேசி உத்தரவு ஒன்று, ஜெட்லைனர் கப்பல் கமாண்டிங் ஆபிசர் நோயல் கலுபோவிலவுக்கு போனது. இலங்கை ராணுவத்தின் கிழக்குப் பகுதி ராணுவ தளபதிக்கு கூட அறிவிக்கப்படாத ரகசிய உத்தரவை பிறப்பித்தார் வசந்த கரணகொட.

ஒரு ரகசிய நள்ளிரவு ஆபரேஷனுக்கான உத்தரவு அது.

(தொடரும்)

No comments:

Post a Comment