Monday, June 16, 2014

புலிகளின் தலைவர் பிரபாகரனின், மெய்ப்பாதுகாவலர் தேவிகனின் முடிவின் பின்னணி என்ன??: தேவிகன், அப்பன், கோபி மூவர் தலைமையிலான “புதிய புலிகள்” சிறிலங்காவினால் முறியடிக்கப்பட்டது எப்படி??

ஒரு புதிய தகவல் வவுனியாவிலிருந்து கிளம்பியது. காவலில் உள்ள நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, வவுனியா சிறிமா நகரிலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது.

தாய். தந்தை மற்றும் ஆறு மற்றும் நான்கு வயதுள்ள இரண்டு பிள்ளைகள் ஆகிய நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று அங்கிருந்து கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டது. பெற்றோர்கள் இருவரும் கிழக்கு பிராந்திய தமிழர்கள் வவுனியாவில் வசித்து வந்தவர்கள் மற்றும் கிட்டத்தட்ட அந்தப் பகுதிக்கு அந்நியர்களாக இருந்தார்கள்.

அந்த பிள்ளைகள் இரண்டையும் விட்டு வர வேறு யாரும் இல்லாததால் அவர்களும் அழைத்து வரப்பட்டார்கள். பின்னர் அவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் உறவினர்களிடம் கையளிக்கப் பட்டார்கள்.
கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள். அவர்கள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலையைச் சேர்ந்தவர்கள், வவுனியாவில் வாடகைவீட்டில் வசித்து வந்தார்கள்.

அந்த ஆண் சித்தி என்கிற வீரசிங்கம் லோகநாதன், அவரது மனைவி மகேஸ்வரி லோகநாதன். அந்த சுற்றாடலின் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் வவுனியா பிரதேசத்தின் திருநாவற்காடு என்றழைக்கப்படும் இடத்தில் உள்ள சிறு காணித்துண்டு ஒன்றை அவர்கள் தங்கள் பெயரில் வாங்கியிருந்தார்கள்.

அந்த இடத்தில் ஒரு வீடு கட்டுவதற்கான திட்டமும் முன்னெடுக்கப் பட்டிருந்தது.

லோகநாதன் தம்பதியினர் விசாரணையாளர்களிடம் தெரிவித்தது, போர் முடிவடைந்த பின்னர் தாங்கள் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வந்ததாகவும். ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் தனிப்பட்ட முறையில் ஆயித்திய மலைக்கு வந்து அவர்களுடன் தொடர்பு கொண்டதாகவும், மற்றும் அவர் தங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியபோது அதைத் தங்களால் தட்ட முடியவில்லை என்று.

அதன் விளைவாக அவர்கள் கிழக்கிலிருந்து வடக்குக்கு இடம்பெயர்ந்து வவுனியாவில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தர்கள். வாடகை மற்றும் வீட்டுச்செலவினங்களுக்காக அவர்களக்கு மாதாந்தம் 50,000 ரூபா சுவிட்சலாந்தில் உள்ள சந்தோசம் மாஸ்ரர் என்பவரால் வழங்கப்பட்டு வந்தது.

திருநாவற்காட்டில் ஒரு காணித்துண்டும் அவர்களின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டது. அதில் ஒரு வீடு கட்டி அது தயாரானதும் அங்கு செல்ல எண்ணியிருந்தார்கள். வீட்டிற்கான கட்டிடச் செலவையும் சந்தோசம் மாஸ்ரரே ஏற்றிருந்தார், ஆனால் இந்த கட்டிட வேலைகளை லோகநாதன் மேற்பார்வை செய்யவேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டிருந்தது.

அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு அண்மித்ததாகவே அந்த இடம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதன் வெளிப்படையான திட்டம் என்னவென்றால் செயற்பாட்டாளர்களுக்கு மறைந்திருப்பதற்கு வசதியாக அந்த வீட்டை ஒரு மறைவான பதுங்குமிடமாக பயன்படுத்துவதுதான். ஆயுதங்களையும் அருகிலுள்ள காட்டில் மறைத்து வைக்கலாம்.

தேவிகன்
index6

சித்தி என்கிற லோகநாதனிடமிருந்து பெறப்பட்ட மிகவும் பெறுமதியான தகவல் என்னவென்றால், அவர்களை நியமித்த மனிதரைப் பற்றிய அடையாளங்கள்தான். லோகநாதன் குடும்பத்தை வவுனியாவுக்கு இடம் பெயர வைத்த மனிதரான தேவிகன்தான், எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியின் சூத்திரதாரி என்பது தெரிந்தது.

விசாரணைகளில் வெளிவந்த தேவிகன் எனும் பெயர் புலனாய்வாளர்களின் மத்தியில் ஒரு எண்ணத்தை கிளறி விட்டது. அந்தப் பெயர் நன்கு அறிமுகமானதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் நீண்ட காலமாக அவரை தேடி வருவதையும் நினைவுகூர முடிந்தது.

தேவிகனின் உண்மைப் பெயர் சுந்தரலிங்கம் கஜதீபன். தேவிகன் 1979 மே 23ல் பிறந்தவர். அவர் யாழ்ப்பாண மாவட்டம், தென்மராட்சிப் பிரிவு, மந்துவிலைச் சேர்;தவர். 1995ல் அவர் தன்னிச்சையாகவே எல்.ரீ.ரீ.ஈயில் சேர்ந்தார். அவரது பல இயக்கப் பெயர்கள் மற்றும் புனைபெயர்கள் தேவிகள், தெய்வன், vநவநீதன், வல்லன், தேவன் என்பனவாகும்.

அவர், எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனுக்கும், அவரது மனைவி மதிவதனிக்கும் நீண்ட காலம் மெயப்பாதுகாவலராகக் கடமை புரிந்துள்ளார். மேலும் அவர் விமானம் ஓட்டும் உரிமம் ஒன்றைப் பெற்றிருப்பதனால் எல்.ரீ.ரீ.ஈயின் வான்படைப் பிரிவான வான்புலிகளின் விமானத் தாக்குதல்களில் பங்கெடுத்துள்ளார்.

யுத்த காலத்தில் கொலன்னாவ – கெரவலப்பிட்டிய, சாலியபுர,  அனுராதபுர ஆகிய வான் தாக்குதல்களில் தேவிகன் தொடர்பு பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. தேவிகன் ஒரு தற்கொலைப் போராளியும் ஆவார், அவர் கரும்புலிகளின் சத்தியப் பிரமாணமும் எடுத்துள்ளார். அவர் எல்.ரீ.ரீ.ஈயின் உளவுப் பிரிவு, இராணுவ உளவுப் பிரிவு, உயரடுக்கு ராதா படையணி என்பனவற்றில் கடமையாற்றியுள்ளார். அவர் புதிய அங்கத்தவர்களுக்கு பயிற்சி வழங்கும் ஒரு பயிற்சியாளரும் கூட.

மே 2009ல் யுத்தம் முடிவடைந்த பின்னர், தேவிகன் மன்னாரிலிருந்து இரகசியமாக இந்தியாவுக்குச் சென்றார். நோர்வேயிலிருந்த நெடியவனுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் தென்கிழக்காசியாவுக்குச் சென்றார். அதன்பின் அவர் ஐரோப்பாவுக்குச் சென்று அங்கு பல நாடுகள் இடையே சுற்றிவந்தார்.

பின்னர் அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்தார், அங்கு நெடியவன் குழுவினரால் மேற்கொள்ளப்படும் இந்திய, ஸ்ரீலங்கா செயற்பாடுகளுக்கு அவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். எனினும் தேவிகன், விநாயகம் குழுவினருடனும் ஒரு சுமுக உறவை பேணி வந்தார்.

தேவிகன் ஒரு போலிக் கடவுச்சீட்டு மூலமாகவோ அல்லது இரகசியமான நாட்டுப் படகுகள் வழியாகவோ இந்தியாவக்கும் மற்றும் ஸ்ரீலங்காவுக்கும் இடையில் பல முறை சென்று திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார் என நம்பப்படுகிறது.


நழுவித் தப்புகிற நபர்…

புலனாய்வு அறிக்கைகள்  ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவில் நெடியவன் பிரிவினரின் செயல்பாடுகளுக்கு தேவிகன் பொறுப்பாக உள்ளார் எனத் தெரிவிப்பதால், ஸ்ரீலங்கா அதிகாரிகள் தீவில் அவரது வருகையை எதிர்பார்த்து எச்சரிக்கையாக இருந்தார்கள். எனினும் தான் நழுவித் தப்பும் நபர் என்பதை பலமுறை தேவிகன் நிரூபித்துள்ளார்.

பிரித்தானியாவில் வாழும் அவரது சகோதரர் திருமணம் செய்வதற்காக இந்த வருட ஆரம்பத்தில் ஸ்ரீலங்காவுக்கு வந்திருந்தார். அந்த திருமணத்துக்கு தேவிகன் வரலாம் என எதிர்பார்த்து பாதுகாப்பு அதிகாரிகள் திருமணத்தை நெருக்கமாக கண்காணித்து வந்தனர் ஆனால் அந்த சகோதரன் மகிழ்ச்சியான அந்த வைபவத்தை தவிர்த்துக கொண்டார்.

இந்தப் பின்னணியில் ஸ்ரீலங்கா விசாரணையாளர்களுக்கு நிஜமாகவே லோகநாதன் உண்மையைத்தான் சொல்கிறாரா என்கிற சந்தேகம் இருந்துகொண்டே வந்தது. விழிப்புடன் இருந்துவரும் தேவிகன் ஸ்ரீலங்காவை சுற்றிவரும் ஆபத்தான ஒரு முயற்சியில் ஈடுபடுவாரா என அதிகாரிகள் பெரிதும் சந்தேகித்தார்கள்.

தவிரவும் கட்டுநாயக்காவில் அவரது வரவைப் பற்றிய பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. உண்மையிலேயே தேவிகன், ஸ்ரீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பறப்பவராக இருந்தால், அதன் அர்த்தம் அவர் பொய்யான அடையாளத்தை அல்லது கள்ளத்தோணியை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பதாகும். ஆயினும் புகைப்படங்களைக் காண்பித்தபோது லோகநாதனும் மகேஸ்வரியும் அது தேவிகன்தான் என்பதில் பிடிவாதமான உறுதியுடன் தெரிவித்தனர்.

இதன்படி சிலசமயங்களில் தேவியன் என பிழையாக எழுதப்படும் தேவிகனின் பெயரும் வேண்டப்படுபவர்கள் பற்றிய சுவரொட்டிகளில் சேர்க்கப்பட்டது. வான் புலிகளின் சீருடையில் உள்ள ஒரு மனிதரின் புகைப்படமும் அதில் காட்சிக்கு விடப்பட்டது. அவர் வடக்குக்கும் மற்றும் கிழக்குக்கு இடையே நகர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.

இப்போது ஒரு தொகையான வேண்டப்படுவர்கள் பற்றிய சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் அப்பன் மற்றும் கோபி பற்றியும் மற்றொரு தொகையானவற்றில் தேவிகன் பற்றியும் குறிப்பிட வேண்டியதாகி விட்டது. விரைவிலேயே அதிகாரிகள் தேவிகன் பற்றிய புதிய தகவல்களைப் பெற ஆரம்பித்தனர்.

அதில் ஒரு தகவல், வவுனியா கூமன்குளத்தில் உள்ள வீடு ஒன்று மறைவிடமாக பயன்படுத்துவதற்காக கடந்த வருடம் தேவிகனால் கொள்முதல் செய்யப்பட்டது என்பதாகும். அந்த வீடு பன்னிரண்டரை லட்சம் ரூபாவுக்கு பத்மாவதி மகாலிங்கம் என்கிற 64 வயதுடைய பூனகரியை சேர்ந்த ஒரு விதவையின் பெயரில் வாங்கப்பட்டிருந்தது.

34 வயதுடைய தேவிகன் மற்றும் 25 வயதுடைய இளம் பெண்ணாண சசிகலா என்கிற வத்சலா சகாதேவன் ஆகியோர் பத்மாவதியின் பிள்ளைகளாக தெரிவிக்கப் பட்டிருந்தனர். அவர்கள் ஒரு குடும்பம் போல நடித்து அந்த வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.

சிறைக்காவல்…

இப்போது பத்மாவதி மகாலிங்கம் சிறைக்காவலில் உள்ள அதேவேளை, சசிகலா என்கிற பொய்ப் பெயரை பயன்படுத்தி வந்த அந்த இளம்பெண் நவம்பர் 2013ல் இந்தியாவுக்கு சென்றுள்ளார். அவள் கட்டுநாயக்காவிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் சென்றுள்ளாள் என்று விசாரணைகள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு வந்தாறுமூலையை சேர்ந்த சசிகலாவின் உண்மைப் பெயர் வத்சலா சகாதேவன். அவள் 1988 ஒக்ரோபர் 23ல் பிறந்தவள். வத்சலா என்கிற சசிகலா ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.

புலனாய்வாளர்களுக்கு கிடைத்த மற்றொரு தகவலில் தேவிகனுக்கு வவுனியா பேரூந்து நிலையம் அருகில் வியாபார நிலையம் ஒன்று இருப்பதாகவும் அவன் அதை தனது மறைவான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாகவும் தெரிய வந்தது. இது பிரதானமாக விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் என்பனவற்றை விற்பனை செய்யும் ஒரு இடமாகும்.


அந்த நிறுவனத்தின் பெயர் “டாட்டா ஸ்போட்ஸ் கோர்னர்” என்பதாகும், அங்கு கணணி மற்றும் போட்டோ பிரதி சேவைகளும் வழங்கப்பட்டு வந்தன. தொலைபேசி அழைப்பு அட்டைகளும் அங்கு விற்கப்பட்டு வந்தன.

தெய்வன் எனும் பெயரை இங்கு பயன்படுத்தி வந்த தேவிகன் வழக்கமாக அடிக்கடி “டாட்டா ஸ்போட்ஸ் கோர்னருக்கு” சென்று அங்கிருந்து தொலைபேசி மற்றும் கணணி மூலமாக தொடர்பாடல்களை நடத்தி வந்தார். அவர் அங்கு மக்களையும் சந்தித்து வந்தார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் திலீபன் என்கிற ஆசிரியர் “டாட்டா ஸ்போட்ஸ் கோர்னரின்” உரிமையாளராக இருந்து அதை நடத்தி வந்தார். அவர் 2005ல் வவுனியாவுக்கு வந்து வவுனியாவில் உள்ள பல்வேறு பாடசாலைகளிலும் கடந்த வருடங்களில் கல்வி கற்பித்து வந்தார்.

அவர் இந்த விளையாட்டு உபகரணக் கடையை ஆரம்பித்தது, ஒரு பக்க வருமான மார்க்கத்துக்காக மற்றும்  தான் ஆசிரியராக இருப்பதால் தனது செல்வாக்கை பயன்படுத்தி  பாடசாலை பிள்ளைகளுக்கு உற்பத்திகளை விற்கலாம் என்பதும் அதன் நோக்கத்தில் ஒன்று.

தேவிகனால் தான் ஒரு மறைப்பாக பயன்படுத்தப் படுகிறோம் என்பது வெளிப்படையாகவே திலீபனுக்கு நன்கு தெரியும், அதனால் அவரைக் கைது செய்வதற்கு முன்பாகவே அவர் ஓடி விட்டார்.

அவர் இந்த நாட்டை விட்டு இந்தியாவுக்கு  இந்த வருடம் ஏப்ரல் 5ல் விமானம் மூலம் சென்றுள்ளார். அந்த வியாபார நிலையம் இப்போது மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

அயராது  விசாரணைகளை மேற்கொண்ட விசாரணையாளர்கள்  தௌளத்தெளிவாக கண்டு பிடித்தது, “எல்.ரீ.ரீ.ஈயினை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட மனிதர்களில் இந்த முழு நடவடிக்கைக்கும் பின்னால் இருந்து இயக்கிய சக்தி வாய்ந்த இயந்திரம் அப்பனோ அல்லது கோபியோ இல்லை ஆனால் அது தேவிகன்தான் என்கிற உண்மையை”.

புதிய எல்.ரீ.ரீ.ஈ அதன் உருவாக்க கட்டங்களில் ஒரு மூவரணியை அதன் தலைவராக கொண்டிருந்தது.

கோபி உளவுப் பிரிவுக்கு பொறுப்பாகவும் மற்றும் அப்பன் பிரச்சாரங்களுக்கு பொறுப்பாகவும் இருந்துள்ளார். தேவிகன் தாக்குதல் அல்லது செயல்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்துள்ளார்.

தேவிகன் எல்.ரீ.ரீ.ஈயினை புதுப்பிக்கும் நடவடிக்கைகளின் ஒட்டு மொத்தத்துக்கும் பொறுப்பாக இருந்திருக்கிறார். விரைவாகவே இந்த மூவரும் தேவைப் படுகிறார்கள் என்பதை கூறும் துண்டுப் பிரசுரங்கள் வெளியாகின. 42,000 துண்டுப் பிரசுரங்கள் வடக்கு முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன.

வெடிவைத்தகல்லு…

இதன் விளைவாக வடக்கிலுள்ள சாதாரண மக்களிடம் இருந்து இன்னும் அதிகமான தகவல்கள் வெளிவந்தன. கிடைத்த துப்புக்கள் யாவும் பின்பற்றப்பட்டு சரிபார்க்கப்பட்டன.

வட பகுதி வவுனியாவில் உள்ள வெடிவைத்தகல்லு பகுதியில்  இருந்து   ஒரு சாதகமான துப்பு கிடைக்கப் பெற்றது. மரம் வெட்டும் தொழிலாளர்கள், அடர்ந்த காட்டுக்குள் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலரது நடமாட்டங்களைக் கண்டார்கள் என்று கூறப்பட்டது.

ஒரு பெரிய காட்டுப்பாதை, வெடிவைத்தகல்லிருந்து ஊத்துக்குளம் ஊடாக போகஸ்வெ வரை நீட்டிக்கப்பட்டது. காட்டின் ஒரு முனை வவுனியா மாவட்டம் வெடிவைத்தகல்லு பகுதியில் இருந்த அதேவேளை அதன் மறுமுனை அனுராதபுரம் பகுதியில் உள்ள பதவிய பகுதியில் இருந்தது.

தேடப்படும் புலிகளின் மூவர்கள் காட்சியளித்ததாக கூறப்பட்ட காடு, சுமார் 12 – 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது.

ஏப்ரல் 10 -11 ந்திகதி நள்ளிரவில்  ஒரு பிரமாண்டமான இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் விளைவாக  தேவிகன்- அப்பன்- கோபி என்கிற மூவரும் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் இராணுவ வீரர்களால் கொல்லப்பட்டார்கள்.



2009 பெப்ரவரியில் ராதா படையணி தலைவர் ரட்னம் மாஸ்ரரினால் முல்லைத்தீவு மாவட்டம் காரைதுறைப்பற்றில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் கடற்பகுதிக்கு இடம்பெயரும்படி தேவிகனிடம் கேட்கப்பட்டது. அவர் நெடுங்கேணி  காட்டிற்கு எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் சம்மதத்தோடு ஒரு இரகசிய நடவடிக்கைக்காக அனுப்பப் பட்டிருந்தார்.

அந்த நடவடிக்கை எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நெடுங்கேணி காட்டிற்குள் இருக்கும் ஒரு மறைவான தளத்திற்கு இரகசியமாக இடம் பெயர்த்துவது தான். அங்கிருந்து புலித் தலைவரை கிழக்கிற்கு நகர்த்தி தேவைப்பட்டால் வெளிநாட்டுக்கும் கொண்டு போவதுதான் இந்த திட்டம்.

கையிருப்பிலிருந்த திட்டங்களில் பிரபாகரனை, வான் வழியாக வெளியேற்றும் திட்டமும் அடங்கியிருந்தது. தேவிகன் ஒரு பயிற்சி பெற்ற விமானியும் மற்றும் நம்பிக்கையான ஒரு லெப்ரினன் ஆகவும் இருந்ததால் இந்தப்பணிக்கான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது வெளிப்படை.

அத்தகைய ஒரு சம்பவம் ஒருபோதும் நடக்கவில்லை. படைத் தரப்பில் போடப்பட்டிருந்த வளையத்தை ஊடுருவி தனது பாதுகாப்புக்காக கண்டுபிடித்து இப்போது அடைபட்டுக் கிடக்கும் கரையோரத் துண்டின் காவலை உடைத்துக் கொண்டு வன்னி பெருநிலப் பரப்பை அடைவது சாத்தியமற்றது என்பதை பிரபாகரன் உணர்ந்தார்.

எல்.ரீ.ரீ.ஈயின் பெருந் தலைவரும் மற்றும் அவரது மூத்த தளபதிகளும் அங்கு கொல்லப்பட்டதை அனைவரும் நன்கு அறிவார்கள். தனது தலைவரின் வரவுக்காக நெடுங்கேணிக் காட்டில் தேவிகன் காத்திருந்தான். இந்தக் காலகட்டத்தில் தான் இந்தக் காட்டுப்பகுதியின் நிலபபரப்பை பற்றி அவன் நன்கு அறிந்து கொண்டான்.

அதனால்தான் ஐந்து வருடங்கள் கழித்தும் தனது தோழர்களான கோபி மற்றும் அப்பன் ஆகியோருடன் தஞ்சம் தேடி, தனக்குப் பழக்கமான காட்டுக்குள் அவன் வந்து சேர்ந்தான்.

கடைசியில் தனது இறுதி முடிவையும் தனது தோழர்களின் கரங்களுடன் இணைந்து தேடிக் கொண்டான்.

நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனை சார்ந்த…

எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் ஊட்டும் நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனை சார்ந்த இந்த முயற்சி இப்படியாக முடிவடைந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் இது தொடர்பாக தளர்வான முனைகள் இன்னமும் எங்காவது இருக்கிறதா? என்று தேடி அழிக்கும் முயற்சியில் இன்னமும் ஈடுபட்டு வருகிறார்கள்.

தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலர் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். எனினும் எதிர்காலத்தில் கைதானவர்களில் 20 – 25 பேர்கள்மீது வழக்கு தொடரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள்.

மூவரணி புலிகளின் உயிரை எடுத்து முடிவடைந்த இறுதிக்கட்ட நடவடிக்கையில் பங்கேற்ற, எட்டு இராணுவ அதிகாரிகள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் துருப்புக்கள் அடங்கிய குழுவை இராணுவ தளபதி விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

மற்றொரு முன்னேற்றமாக இந்த நடவடிக்கையின் போது தற்செயலாக விபத்தில் கொல்லப்பட்ட வீரரான செல்வராஜா கமலராஜா, மரணத்தின் பின்னர் லான்ஸ் கோப்ரலாக பதவி உயர்த்திக் கௌரவிக்கப்பட்டார். அவரது குடும்பத்துக்காக இராணுவம் அவரது சொந்த இடமான குருநாகலில் ஒரு வீட்டைக் கட்டி வருகிறது.

மற்றொரு விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர் நாயகம் சுவரொட்டிகள் ஒட்டிய மனிதர்களை கண்டுபிடித்த பளை காவல் நிலைய காவல்துறையினரை மிகவும் புகழ்ந்துள்ளார்.

ஒரு வழக்கமான ரோந்து நடவடிக்கையின் போது காவலர்களின் இந்த கண்டுபிடிப்பும் அதைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் காரணமாகத் தான்  எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு தொடர்பான நிகழ்வைப் பற்றி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்ய முடிந்தது.

வடக்கில் அளவுக்கு அதிகமான இராணுவ பிரசன்னம் இருந்த போதும் எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு முயற்சியை கண்டுபிடிப்பதற்கு வழக்கமான காவல்துறை ரோந்து நடவடிக்கை தான் வழியமைத்திருக்கிறது என்பது உண்மையில் விசித்திரமே.

இறுதியாக இந்த புத்துயிர்ப்பு முயற்சியை ஒரேயடியாக அடக்கப்பட்டதுக்கு காரணம் வடக்கில் உள்ள பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவல்களே அன்றி, அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னம் அல்ல. இந்தக் காட்சி சிந்தனைக்கு அதிக விருந்து படைக்கிறது.

வெளிநாட்டில் உள்ள புலிகள் மற்றும் புலிகள் சார்பு சக்திகள் மற்றும் ஸ்ரீலங்காவில் உள்ள அவர்களது சகபயணிகள் ஆகியோர் ஒரு உணர்வை தூண்டிவிட முயன்ற போதிலும் அதற்கு மாறாக ஸ்ரீலங்காவில் உள்ள சரியான சிந்தனையுள்ள தமிழர்கள், எல்.ரீ.ரீ.ஈ திரும்ப வருவது என்றால் அதன் கருத்து பேரழிவு மற்றும் தற்பொழுதுள்ள பரிதாபகரமான நிலையிலிருந்து மீள் எழுச்சி பெற முயற்சிக்கும் ஆதரவற்ற சமூகத்திற்கு தண்டனை வழங்குவதைப் போன்றது என்பதை உணர்ந்துள்ளார்கள்.

இது ராஜபக்ஸ ஆட்சியில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக அல்லது அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று அர்த்தமாகாது.

அதன் உண்மையான அர்த்தம் மக்கள் கடந்த காலத்தில் கசப்பான பாடங்களைக் கற்றுள்ளதால், ஸ்ரீலங்காவில்; எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு எந்த வடிவத்தில் ஏற்பட்டாலும் அதை ஏற்கத் தயங்குகிறார்கள் என்பது தான்.
0002

மீள் எழுச்சி….

ஸ்ரீலங்காவில்; எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு முயற்சி ஒரு பிரச்சினை, அதற்காக இந்த எழுத்தாளர் சமீப காலங்களில் பல பத்திகளை அர்ப்பணித்துள்ளார். இத்தகைய எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பினால் ஏற்படும் விளைவுகள் நாட்டுக்கும் மற்றும் மக்களுக்கும் குறிப்பாகத் தமிழர்களுக்கு பேரழிவாகவே இருக்கும் என்று நான் வலிமையாக உணர்கிறேன்.

ஆர்வமுள்ளவர்களின் தந்திரமான முயற்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடகம் இந்த விவகாரம் எனக்கூறி இதை தள்ளிவிடுபவர்களை பார்க்கும் போது உண்மையில் நெருடலாக இருக்கிறது.

இந்தப் பத்திகளில் நான் ஏற்கனவே சொல்லியிருப்பதைப் போல, எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு முயற்சி பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தால், என்ன நடந்திருக்க கூடும் என்பதை அநேகர் உணரவில்லை. புத்துயிர்ப்பு முயற்சி ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு திறமையாக நடுநிலையாக்கப் பட்டது உண்மையில் நாட்டின் அதிர்ஷ்டமே.

பல்வேறு நாடுகளிலுமுள்ள பல்வேறு வட்டாரங்களுடனும் இந்த முழு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் நோக்கத்துடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்ததால்,கடந்த சில வாரங்கள் உண்மையில் எனக்கு மிகவும் பரபரப்பான வாரங்களாக இருந்தன.

அந்த வட்டாரங்களில் பாதுகாப்பு தொடர்பானவர்கள், அறியப்பட்ட தமிழ் ஆர்வலர்கள், முன்னாள் போராளிகள், வன்னியில் உள்ள மக்கள், எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் குடும்ப அங்கத்தவர்கள், பயங்கரவாத கண்காணிப்பாளர்கள், மற்றும் உலகளாவிய நிறுவனங்களிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் என பல தரப்பட்வர்களும் இருந்தார்கள்.

அந்த தகவல்கள் முழுமையானதோ, அல்லது சுருக்கமானதோ என்பதில் அர்த்தம் எதுவுமில்லாவிட்டாலும், அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து அந்த விவகாரம் பற்றிய நிகழ்வுகளைப் பற்றி ஓரளவுக்கு என்னால் ஒரு கட்டுரையை உருவாக்க முடிந்தது.

அந்தப் பின்னணியில் தான் ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் குறைப்பிரசவ முயற்சியின் உடற்கூற்றியல் என்கிற விரிவான இந்தக் கட்டுரையை நான் எழுதியுள்ளேன்.

மார்ச் 29, 2014ல் டெய்லி மிரர் பத்திரிகையில் நான் முன்னர் எழுதிய கட்டுரையின் பந்தியை திரும்ப எழுதி இந்தக் கட்டுரையை நான் நிறைவு செய்ய விரும்புகிறேன். இந்த சாரம் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் குறைப்பிரசவ முயற்சிக்கு சமாதிகட்டும் மற்றொரு முயற்சியாக செயற்படலாம். இதோ அது:

“கடந்த சில வாரங்களாக ஸ்ரீலங்காவில் நடந்த  சில பரபரப்பான நிகழ்வுகள் விடுதலைப் புலிகள் தொடர்பான  மூன்று முக்கியமான உண்மைகளை பாதுகாப்பு முன்னணிகளிடையே உசுப்பி விட்டுள்ளது.

முதலாவது புலம் பெயர்ந்தவர்களிடையே உள்ள புலிகள் அல்லது புலிகள் சார்பு சக்திகள் எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் வழங்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு ஸ்ரீலங்காவின் வாழ்க்கையை தொடர்ந்து குழப்ப முயல்வார்கள்.

இரண்டாவது  ஸ்ரீலங்கா அரசாங்கம் சர்வதேச தாக்கங்களைப் பொருட்படுத்தாமல் அத்தகைய சவால்களுக்குத் திறமையாகப் பதிலளிக்கும்.

மூன்றாவது நாட்டில் வலுவாக வேரூன்றி உள்ள பாதுகாப்பு அமைப்புகள், முன்னெடுக்கப்படும் எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு முயற்சிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதை நசுக்கும் திறனைக் கொண்டுள்ளன.