Monday, March 31, 2014

இலங்கையில் விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள்: இப்போது என்ன நடக்கிறது? – 2



இலங்கையில் புனர்வாழ்வு முகாம்களில் இணைத்துக் கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் தொடர்பான இந்த ரிப்போர்ட்டின் முதல் பகுதியில் (தவற விட்டிருந்தால் பகுதி ஒன்று பார்க்கவும்), இறுதி யுத்தத்தின் கடைசி மாதங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்கள் பற்றி பார்த்தோம். இந்தப் பகுதியில் இயக்கத்தின் படையணிகளில் (யுத்தம் புரியும் பிரிவுகள்) நீண்ட காலம் இருந்தவர்களின் தற்போதைய நிலைமை பற்றி பார்க்கலாம்.

3) விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நீண்டகால போராளிகளாக இருந்தவர்கள்

இந்தப் பிரிவில் உள்ள கிட்டத்தட்ட அனைவருமே, தாமாகவே விரும்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள். 15 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கத்தில் இருந்தவர்கள் பலர் உள்ளார்கள். இவர்களை சாதாரண வாழ்க்கை வாழும் சமூகத்தில் இணைத்து வாழ வைப்பதில் அதிக சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இந்தப் பிரிவில் உள்ளவர்களிடம் நாம் பேசியவரை, அநேகர் தமது செயல்திறன் (ability) மீது நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகிறார்கள். சிவில் சமூகத்தில் உள்ள பல்வேறு மட்ட தொழில்களில் அல்லது வேலைகளில் தம்மால் இணைந்து கொள்ள முடியும் என்பதில் மிகக் குறைந்தளவு நம்பிக்கையே இவர்களில் பலரிடம் காணப்படுகிறது.

காரணம், நீண்ட காலம் சிவில் சமூக செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி, இயக்கத்தின் முழுநேர ராணுவ டைப் வாழ்க்கை வாழ்ந்தவர்களாகவே இவர்கள் உள்ளார்கள். இவர்களது எண்ணிக்கை சில ஆயிரங்கள். அதில் பெரும்பாலானோர் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். உயர் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.

இந்தப் பிரிவில் உள்ளவர்களில், புனர்வாழ்வு முகாம்களில் பயிற்சிகளை முடித்தவர்கள் பலரிடம்கூட சிவில் சமூக வேலைகளில் தம்மால் ஈடுபட முடியும் என்பதில் பலத்த தயக்கம் காணப்படுகிறது.

எமது அசெஸ்மென்ட்டின்படி, ராணுவம், அல்லது போலீஸ் வேலைகளில் இவர்கள் நன்கு பொருந்துவார்கள். மிகச் சுலபமாக பதவியுயர்வுகள் பெற்று முன்னேறக்கூடியவர்கள் உள்ளார்கள். ஆனால், இலங்கை ராணுவம், அல்லது போலீஸ் வேலைகள் கிடைப்பதற்கான சூழ்நிலை இந்தப் பிரிவில் உள்ள ஆயிரக்கணக்கான பேருக்கு இல்லை.

அதற்கான காரணங்களை ஆராய்ந்தால் இந்த ரிப்போர்ட்டை அரசியலுக்குள் கொண்டுபோக வேண்டியிருக்கும். அதை, விட்டுவிடலாம்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நீண்ட காலம் போராளிகளாக இருந்துவிட்டு, இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான நடுத்தர வயதைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு, அவர்களுக்கு பரிச்சயமான ராணுவ டைப் வேலைகள் பெறுவது இலங்கையில் தற்போது சாத்தியமில்லை என்று எடுத்துக் கொண்டு, மற்றைய ஆப்ஷன்களை பார்க்கலாம்.

மற்றைய ஆப்ஷன்களை ஏன் பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறதா? மிகவும் சிம்பிளான பதில், அவர்களது குடும்பங்களை கொண்டு நடத்த வருமானம் தேவை. அதற்கு தொழில்கள், அல்லது வேலைகள் தேவை. இவர்களில் பலருக்கு சிறிய வயதில் குழந்தைகள் உள்ளனர். பல குடும்பங்களில் கணவன், மனைவி இருவரும் முன்னாள் போராளிகளாக உள்ளார்கள். கணவன், அல்லது மனைவியை இழந்து, குழந்தைகளுடன் வாழ்பவர்களும் உள்ளார்கள்.

நீண்டகால போராளிகளாக இருந்த இவர்களுக்கு தொழில்கள் அல்லது வேலைகள் பெறுவதற்கு மற்றைய ஆப்ஷன்களை ஏன் பார்க்க வேண்டும் என்ற கேள்வி இப்போதும் எழுகிறதா? இல்லை அல்லவா.. சரி. மேலே பார்க்கலாம்
அரசின் புனர்வாழ்வு புரோகிராமில் சுய தொழிலுக்கான சில பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அவை, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளன. காரணம், ஆயிரக்கணக்கானவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். அதற்கு உள்ளது மட்டுப்படுத்தப்பட்ட பட்ஜெட் (2009-ம் ஆண்டில் இருந்து இன்றைய தேதிவரை 1316.63 பில்லியன் – மில்லியன் அல்ல, பில்லியன் – ரூபா செலவிடப்பட்டுள்ளது).

முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு புரோகிராம் மையங்கள், மற்றும் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள், மேலதிக பயிற்சிகள் தேவை என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். புனர்வாழ்வு புரோகிராமில் தொழில் பயிற்சி கொடுக்கப்பட்டு வெளியே விடப்பட்டவர்களில் எத்தனை முன்னாள் போராளிகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி அடிப்படையிலான தொழில்களில் ஈடுபடுகிறார்கள் என்ற தரவுகள், புரோகிராம் தலைமையகத்தில் உள்ளன.

நீங்களே பாருங்கள், தரவுகளை:

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திரிகோணமலை, மீதி கிழக்கு மாகாணம், தெற்கு ஆகிய 8 பகுதிகளில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் தொழில் பயிற்சி கொடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களில், பதிவில் உள்ள முன்னாள் போராளிகளின் களின் எண்ணிக்கை – 7839.

கொடுக்கப்பட்ட பயிற்சிகளின் அடிப்படையில் தொழில் புரிபவர்கள்:

டிரைவர்கள்: 308
மெக்கானிக்குகள்: 114
எலக்ட்ரிஷியன்கள்: 141
வெல்டர்கள்: 86
கட்டுமான வேலை: 580
தச்சு வேலை: 344
தையல் வேலை: 171
மீன்பிடி தொடர்பான வேலைகள்: 451
முடி திருத்தல்: 14
கண்ணிவெடி அகற்றல்: 126

இவர்களைவிட, 204 பேருக்கு அரசுத்துறை வேலைகள் கிடைத்துள்ளன. 263 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டியது. 89 பேர் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களாக உள்ளார்கள். 55 பேர் முன்பள்ளி ஆசிரியர்கள். 313 பேர் மதகுருவாக உள்ளார்கள். 135 பேர் கல்வி பயில்கிறார்கள்.

939 முன்னாள் போராளிகள் விவசாயம் செய்கிறார்கள். 1026 பேர் சொந்தத் தொழில், அல்லது வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்கள். புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியே வந்தவர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 12.

இவை இம்மாதம் (அக்டோபர், 2013) 8-ம் தேதி பெறப்பட்ட தரவுகள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நீண்டகால போராளிகளாக இருந்தவர்கள் பலரால், அவர்களது செயல்திறனுக்கு ஏற்ற வேலைகள் கிடைக்கவில்லை. நாம் தொடர்புகொண்ட பலர், தமிழ் பேசும் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனியார் துறை வேலைகள் பெருமளவில் தமக்கு மறுக்கப்படுகின்றன என்கிறார்கள்.

மற்றைய மாகாணங்கள், அல்லது இலங்கை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சு ஊடாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு (பெரும்பாலும் அரபு நாடுகள், தென் கொரியா) மொழியறிவு பெரிய தடையாக உள்ளது.

வெளி மாகாணங்களில் சென்று தொழில் புரிய, சிலரால் சுமாரான அளவில்தான் சிங்களம் பேச முடிகிறது. இலங்கை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சு ஊடாக வெளிநாடு சென்று தொழில் புரிய, அடிப்படை ஆங்கில அறிவு தேவை. விண்ணப்பித்த முன்னாள் போராளிகளில் பலர், அந்தளவுக்கு ஆங்கில அறிவு கிடையாது என நிராகரிக்கப்பட்டுள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நீண்டகால போராளிகளாக இருந்தவர்கள் பலருடன் நாம் பேசியபோது, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது தொடர்பான மனோதத்துவ பிரச்னை ஒன்று அவர்களுக்கு இருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. அந்த விபரங்களை இந்த ரிப்போர்ட்டின் அடுத்த பகுதியில்,  வெளியிடுகிறோம். (தொடரும்)

இலங்கையில் விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள்: இப்போது என்ன நடக்கிறது? – 1

இலங்கையில் யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிந்தது. இப்போது 4 ஆண்டுகளின் பின், அங்கு நிலவும் சூழ்நிலை பற்றிய தகவல்களில், மிக குறைந்த அளவு தகவல்கள்தான் வெளியே மீடியாக்களில் வெளியாகின்றன. பல தகவல்கள் வெளியாகாமலேயே போய்விடுகின்றன.

இதற்கு காரணம், 30 ஆண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்தபின், அதனால் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு மீடியா டீமின் 10 நாள் டூரில் முழுமையாக கவர் பண்ணிவிட முடியாது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரக் கணக்கான விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும் உள்ளனர்.

இவர்களில் பெரிய சதவீதமானவர்கள் தடுப்பு முகாம்கள், மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். தற்போதும் பல முன்னாள் போராளிகள், விடுதலை தேதியை எதிர்நோக்கி, புனர்வாழ்வு முகாம்களில் உள்ளனர்.

விடுவிக்கப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் பெரும்பாலும் வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக கிழக்கு மாகாணத்திலும், மிக சொற்ப அளவில் நாட்டின் மற்றைய பகுதிகளிலும் உள்ளனர்.

“இனத்துக்காக தமது உயிரை பணயம் வைத்து யுத்தம் புரிந்தவர்கள்” என்று யுத்தம் நடந்த காலத்தில் வெளிநாட்டு தமிழர்களால் போற்றப்பட்ட இவர்கள், தற்போது என்ன ஆனார்கள், எப்படி உள்ளார்கள், இவர்களின் எதிர்காலம் என்ன என்பது குறித்து, மீடியாக்களில் பெரிய கவரேஜ் கிடையாது.

அதற்கு காரணம், நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, குறுகிய காலத்தில் முழுமையான தகவல்களை திரட்ட முடியாது என்பது ஒரு விஷயம். இரண்டாவது, எங்கே யாரை சந்திக்க முடியும் என்று எல்லோருக்கும் தெரியாது. இலங்கையில் சில மாதங்களாக தங்கியிருந்து வெவ்வேறு இடங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த ரிப்போர்ட் தயாரிக்கப்படுகிறது.

நடந்து முடிந்த யுத்தத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்களில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து யுத்தம் புரிந்த முன்னாள் போராளிகள் என்று சொன்னால், ஆச்சரியம் ஏற்படும். ஆனால், அதுதான் உண்மை.

யுத்தம் முடிந்தபின் கைது செய்யப்பட்டு, அல்லது சரணடைந்து தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்டு, தற்போது விடுதலை செய்யப்பட்டு இலங்கையில் வாழும் முன்னாள் போராளிகளில் பலர்கூட, சமுதாயத்தில் கலந்து வாழ முடியாமல் தவிக்கிறார்கள் என்பது, வருத்தத்துக்குரிய உண்மை.

இவர்களில் பலர் சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை எத்தனை பேர் நம்புவீர்களோ, தெரியவில்லை.

சுமார் 90 சதவீதத்துக்கும் அதிகமாக தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில், பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் தமிழர்களுக்கு சொந்தமானவையே. கடந்த 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் போர் புரிந்து, புனர்வாழ்வு முகாமில் இருந்து விடுதலையாகி வெளியே வரும் முன்னாள் போராளிகளை பணியில் அமர்த்த பல தமிழர் வர்த்தக நிலையங்கள் தயாராக இல்லை என்ற உண்மையை நீங்கள் விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.

“துப்பாக்கி தூக்கிய ஆளை பணியில் அமர்த்தினால் நாளை என்னாகுமோ?” என்று பல வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். “இனத்துக்காக தமது உயிரை பணயம் வைத்து யுத்தம் புரிந்தவர்கள்” என்று 5 ஆண்டுகளின் முன் புகழப்பட்டவர்களில் பலரது தற்போதைய நிலைமை இது என்பதையும், எத்தனை பேர் நம்புவீர்களோ, தெரியவில்லை.

யுத்தம் முடிந்தபின், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களில், புனர்வாழ்வு புரோகிராம்களில் சேர்க்கப்பட்டு, தடுப்பு முகாம்களில் இருந்து புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்ட முன்னாள் போராளிகளின் எண்ணிக்கை, இன்றைய தேதிவரை 11,808 பேர்.

இவர்களில் எத்தனை சதவீதமானோர், எந்தெந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் சேர்க்கப்பட்டனர் என்பதை, கீழேயுள்ள வரைபடத்தில் பார்க்கவும்:

rehab-centres-20131021-1கவனியுங்கள். புனர்வாழ்வு புரோகிராம்களில் சேர்க்கப்பட்ட முன்னாள் போராளிகளின் எண்ணிக்கைதான் இது. அதாவது, விடுவிக்கப்பட்டு சமுதாயத்தில் இணைத்துக் கொள்ளப்படலாம் என்று முடிவு செய்யப்பட்டு, அதற்குரிய புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்ட முன்னாள் போராளிகளின் எண்ணிக்கை, 11,808.

இவர்களில், ஒரு பகுதியினர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்டார்கள். மீதி பேர், இன்னமும் புனர்வாழ்வு முகாம்களில், விடுதலை தேதியை எதிர்நோக்கி உள்ளார்கள். (நம்ம உசுப்பேற்றும் அரசியல்வாதிகள், இலங்கைக்கு வெளியே இருந்துகொண்டு, “தமிழர் சேனை தயாராகிறது. ஈழத்தை கைப்பற்ற புறப்படுகிறது பெரும்படை” என்று முழக்கமிட, முழக்கமிட, இவர்களது விடுதலை தேதி தள்ளிப் போவது உண்டு)

‘விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள்’ என்ற பொதுப் பிரிவுக்குள் இந்த 11,808 பேரும் உள்ளடக்கப்பட்டாலும், இவர்கள் அனைவரும் ஒரே மாதிரி ட்ரீட் பண்ணப்பட்டு, ஒரே காலப்பகுதியில் வெளியே விடப்படவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள். ஏன் அப்படி என்ற கேள்வியும் எழுந்திருக்கும்.

அதாவது சிலர் சில மாதங்களிலேயே வெளியே விடப்பட்டுள்ளனர். சிலர் வருடக் கணக்கில் முகாம்களில் வைக்கப்பட்டே விடுவிக்கப்பட்டனர். சிலர் இன்னமும் தடுப்பில் இருந்து விடுவிக்கப்படவில்லை. ஏன் இந்த பாகுபாடு?
 இந்த போராளிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரும், இந்த புனர்வாழ்வு புரோகிராமின் கான்செப்டை தெரிந்து கொண்ட பின்னரும்தான், இந்த பாகுபாட்டுக்கான காரணம் புரிகிறது.

அந்தக் காரணம், ‘விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள்’ என்ற பொதுப் பிரிவுக்குள் இந்த 11,808 பேரும் இருந்தாலும், அவர்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் உள்ளவர்கள் உள்ளார்கள் என்பதை, அவர்களுடன் பேசியபின் தெரிந்து கொள்ள முடிகிறது.

நாம் சந்தித்து பேசிய முன்னாள் போராளிகளில் பெரும்பாலானோர், கீழ்வரும் உப பிரிவுகளில் உள்ளார்கள்.

1) இறுதி யுத்தம் நடைபெற்ற கடைசி நாட்களில், விடுதலைப் புலிகளால் யுத்தத்தில் (விரும்பியோ, விரும்பாமலோ) இணைத்துக் கொள்ளப்பட்ட மிக இளம் வயதினர்.

இவர்கள் அனைவருமே, ஓரிரு நாட்கள் மட்டும் ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட்டோ, அல்லது ஓரிரு மணி நேர ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட்டோ, யுத்தத்தில் இறக்கி விடப்பட்டனர். இவர்கள் தத்தமது குடும்பங்களை பிரிந்து அதிக காலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கவில்லை. பெரும்பாலும், பள்ளிப் படிப்பை விட்டு விலகி அதிக காலம் இருக்கவும் இல்லை.

இவர்கள்தான் முதலில் விடுவிக்கப்பட்டவர்கள். அதுவும் இவர்களில் ஒரு பகுதியினர், 10-ம் ஆண்டு, 12-ம் ஆண்டு பள்ளி படிப்பு படித்துக் கொண்டிருந்தவர்கள், அந்த பொது தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு, அத்துடன் விடுவிக்கப்பட்டார்கள். மற்றையவர்கள் அதன்பின் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். மிகமிக குறைந்த எண்ணிக்கையில் இன்னமும் சிலர் தடுப்பில் உள்ளார்கள் (அப்படி இன்னமும் உள்ளவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தனிப்பட்ட காரணங்கள் உள்ளன)

இந்தப் பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே வந்ததும், சமுதாயத்துடன் இலகுவில் கலந்து கொண்டார்கள். பெரிய சிக்கல் ஏதுமில்லை. அநேகர், பள்ளிப் படிப்பை தொடருகிறார்கள்.

2) இறுதி யுத்தம் நடைபெற்ற கடைசி மாதங்களில் விடுதலைப் புலிகளால் யுத்தத்தில் (விரும்பியோ, விரும்பாமலோ) இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள். இந்தப் பிரிவிலும் பெரும்பாலானோர் இளம் வயதினர்தான் என்றாலும், சிறிய எண்ணிக்கையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களும் உள்ளார்கள்.

மேலே 1-ம் பிரிவில் குறிப்பிடப்பட்டவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே இரண்டு வித்தியாசங்கள் உள்ளன.

முதலாவது, இவர்கள் சற்று அதிக காலம் குடும்பங்களை விட்டுப் பிரிந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்திருக்கிறார்கள். இரண்டாவது, இவர்கள் தமது சொந்த ஊர்களில் வைத்து விடுதலைப் புலிகள் இயக்கங்களில் இணைக்கப்பட்டு, பின்னர், வேறு இடங்களில் யுத்தம் புரிந்து, வேறு இடங்களில் கைது செய்யப்பட்டோ சரணடைந்தோ உள்ளார்கள்.

இந்த நடைமுறை, இவர்களது விடுவிக்கப்பட்டு குடும்பத்தினருடன் இணைக்கப்படுவதில் சில சிக்கல்களை ஏற்படுத்தியது.

இதை சற்று புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், இப்படி சொல்லலாம்: வன்னிப் பகுதியில் முதலில் மன்னார், மற்றும் வவுனியா மாவட்டங்களில் யுத்தம் தொடங்கியது. அங்கே விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த ஒவ்வொரு நகரமும் ராணுவத்திடம் விழ, புலிகளும் ஒவ்வொரு நகரமாக கைவிட்டு பின்வாங்கினார்கள். மக்களும் புலிகளுடன் ஒவ்வொரு நகரமாக இடம்பெயர நேர்ந்தது.

புலிகளும், மக்களும் ஒவ்வொரு நகரமாக கைவிட்டு பின்வாங்கிய பாதை, சிலாவத்துறை, அடம்பன், பாலம்பிட்டி, பெரியமடு, ஆலங்குளம், உயிலங்குளம் என்று தொடங்கி, பல நகரங்களையும், கிராமங்களையும் கடந்து, பூநகரி, மாங்குளம், கொக்காவில், புளியங்குளம், நெடுங்கேணி, சின்னப்பரந்தன், முள்ளியவளை, இரணமடு, பரந்தன், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், ராமநாதபுரம், முரசுடோட்டை, ஆனையிறவு, தர்மபுரம், உடையார்கட்டுகுளம், முல்லைத்தீவு, விசுவமடு, சாலை, தேவிபுலரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு என்று போய், முள்ளிவாய்க்காலில் முடிந்தது.

இந்தப் பாதையில் பல நகரங்களையும், கிராமங்களையும் மேலே குறிப்பிடவில்லை. அவ்வளவு பெரியது பட்டியல்.

இதில், ஒரு நகரத்தில் புலிகள் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டவர் ஒரு திசையில் பயணிக்க, அவரது குடும்பத்தினர் வேறு திசையில் பயணிக்க, அந்தப் பயணத்தின்போது, அதே குடும்பத்தை சேர்ந்த மற்றொரு உறுப்பினரை வேறு ஒரு நகரத்தில் வைத்து புலிகள் இயக்கத்தில் இணைத்துக் கொள்ள…

இப்படியான சூழ்நிலையில் உள்ள முன்னாள் போராளிகள், சில ஆயிரம் பேர் உள்ளார்கள். இவர்களிலும் சுமார் 60 சதவீதமானவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளார்கள்.

இந்த 2-ம் பிரிவில் உள்ள முன்னாள் போராளிகளில் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தவர்களை அவர்களது குடும்பங்களை தேடிப்பிடித்து இணைப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. இதில் மற்றொரு சோகம், சில நூறு முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர் எங்கே உள்ளனர், அல்லது, இன்னமும் உயிருடன் உள்ளார்களா என்பது தெரியவில்லை.

சில முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு முகாம்களில் உறவினர்கள் யாரும் வந்து பார்க்கவே இல்லை. இது தற்போதும் புனர்வாழ்வு முகாம்களில் உள்ள அவர்களின் மனதை பாதிக்கும் விஷயமாக உள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் மீதி உப பிரிவில் உள்ளவர்கள் பற்றிய விபரங்களை இந்த ரிப்போர்ட்டின் அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாம்.

அந்த உப பிரிவுகளில், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நீண்டகால போராளிகளாக இருந்தவர்கள், தளபதிகளாக இருந்தவர்கள், மிகச் சிறுவயதில் இணைந்ததால் தமது ஊர் எதுவென்றே தெரியாதவர்கள், யுத்தத்தில் உடல் ஊனமுற்றவர்கள், நேரடியாக யுத்த முனையில் போர் புரியாமல் புலிகள் இயக்கத்தில் வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்தவர்கள் என வெவ்வேறு பிரிவில் உள்ளவர்களை, அடுத்தடுத்த பாகங்களில் விரிவாக பார்க்கலாம்.

(தொடரும்)

Friday, March 28, 2014

ஈழப் போரின் இறுதி நாட்கள்: புலிகளுடன் பேசும் போன் வைத்திருந்த ‘ஆர்மி அங்கிள்’16


கொழும்பு, பம்பலபிட்டிய என்ற இடத்தில் உள்ள கார் பார்க்கிங்குக்கு சந்திக்க வருமாறு அழைக்கப்பட்ட ‘ஐயா’ என்ற சங்கேதப் பெயருடைய விடுதலைப்புலிகள் தொடர்பாளர், விலையுயர்ந்த ‘பிரான்ட் நேம்’ கோட்-சூட் அணிந்து, காரிலிருந்து இறங்கினார் என கடந்த அத்தியாயத்தை முடித்திருந்தோம்.

கார் பார்க்கிங்கில் மறைந்திருந்த இலங்கை உளவுத் துறையினர் வெளிப்பட்டு ஐயாவை கைது செய்தனர்.

இவரை விசாரித்தபோது, அதுவரை இலங்கை உளவுத்துறையால் கைது செய்யப்பட்டவர்களில், மிக முக்கிய தகவல்கள் அதிகம் வைத்திருந்த ஒருவர் இவர்தான் என தெரியவந்தது. இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து கொல்லப்பட்ட லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை ஆபரேஷனில், பிரதான திட்டமிடல் செய்தவரும் இவர்தான என்றும் தெரியவந்தது.

ஐயா கைது செய்யப்பட்டது, இலங்கையில் இறுதி யுத்தம் முடிவுக்கு வருவதற்கு 8 நாட்களின்முன், மே மாதம் 10-ம் தேதி (2009).

அந்த இறுதி நேரத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே மீது மனித வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடத்தி, யுத்தத்தை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தபோதுதான், அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் கைது செய்யப்பட்ட தினத்தில் இருந்து 4 நாட்களில் மே, 14-ம் தேதி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே G-11 மாநாட்டில் கலந்துகொள்ள ஜோர்தான் சென்று இறங்குவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அவர் ஜோர்தான் செல்வதற்காக கொழும்பு விமான நிலையம் செல்லும்போதே, பெரிய தற்கொலை தாக்குதல் நடத்தி அவரை கொல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

அதுவரை அகப்பட்டுக்கொண்ட விடுதலைப் புலிகளின் கொழும்பு இணைப்பாளர்களுக்கும், ஐயாவுக்கும் இடையே இருந்த மிகப் பெரிய வேறுபாடு, அவரது தோற்றம் மற்றும் நடையுடை பாவனைகள்.

கொழும்பு ஹை-சொஸைட்டி குடும்பத்தை சேர்ந்த இளைஞர் போல தோற்றமளித்த ஐயா, விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரில் பவனிவந்து கொண்டிருந்தவர். எப்போதும், பெரிய பிசினெஸ் எக்ஸகியூட்டிவ் போல உடையணிந்து நடமாடிய அவர்மீது யாருக்கும், எந்த சந்தேகமும் ஏற்பட்டிருக்கவில்லை.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில், கொழும்புவில் வீதிதோறும் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, பலத்த ராணுவ சோதனை நடைபெறுவது வழக்கம். தடுக்கப்படும் நபரின் அடையாள அட்டையில் இருந்து அவர் தமிழர் என்று தெரியவந்தால், அவரிடமிருந்த அனைத்துப் பொருட்களையும் அக்குவேறு ஆணிவேறாக சோதனையிட்டு விட்டே அனுப்புவார்கள்.

ஐயாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோது, கொழும்புவின் எந்தவொரு வீதித் தடை சோதனையிலும் அதுவரை தமது காரை சோதனையிட்டதே இல்லை என்றார்.

அவரது ஆடம்பர காரையும், அதற்குள் இருந்த அவரது ஹை-சொஸைட்டி தோற்றத்தையும் பார்த்த ராணுவத்தினர், அவர் யாரோ மிகப் பெரிய புள்ளி என கருதி, அடையாள அட்டையை காண்பிக்கும்படிகூட கேட்டதில்லையாம்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமது ஆடம்பர காரின் சீட் அடியே, மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு தேவையான வெடிப்பொருட்களையும், தற்கொலை அங்கிகளையும், சுலபமாக கொழும்புவின் எந்தப் பகுதிக்கும் எடுத்துச் செல்ல முடிந்ததாக விசாரணையில் ஐயா தெரிவித்தார்.

கொழும்புவில் நடந்த பல தற்கொலை தாக்குதல்களின்போது, மனித வெடிகுண்டாக வெடித்து சிதறப்போகும் கரும்புலி தற்கொலை அங்கி அணியாமல் ராணுவ செக் பாயின்ட்களை கடந்து செல்ல, பிளாஸ்டிக் வெடிகுண்டு பொருத்தப்பட்ட தற்கொலை அங்கிகளை தமது காரில் எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு வந்ததாகவும் ஐயா தெரிவித்தார்.
த்தம் முடிவதற்கு சில தினங்களுக்கு முன், அதுவும் ஜனாதிபதி ராஜபக்ஷேவின் வெளிநாட்டு பயணத்துக்கு முன் ஐயா அகப்பட்டது, யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகள் வைத்திருந்த மாஸ்டர் பிளானை கவிழ்த்து விட்டது.

யுத்தத்தை நிறுத்துவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷேவை கொல்வதற்கு, சிங்கள ராணுவ அதிகாரி ஒருவரே (அந்த நேரத்தில் ‘ஆர்மி அங்கிளின்’ நிஜ பெயர், ஐயாவுக்கும் தெரிந்திருக்கவில்லை) காரணமாக இருக்கப் போகிறார் என்ற தகவலை, உளவுத்துறை விசாரணையாளர்களிடம் தெரிவித்தார் ஐயா.

திகைத்துப் போன உளவுத்துறை, அவசரகதியில் ‘ஆர்மி அங்கிளை’ தேடத் தொடங்கியது.

இந்த ஆர்மி அங்கிளும் இரண்டு செல்போன்களை வைத்து இயக்கிக் கொண்டிருந்தார். விடுதலைப் புலிகளின் தொடர்பாளர்களுடன் பேசும் போனில், மற்றவர்களுடன் பேசுவதில்லை. இதனால், உளவுத்துறையினர் தமது கண்காணிப்பில் வைத்திருந்த போன் இலக்கம் எப்போதும் சுவிட்ச் ஆஃப் என்ற நிலையிலேயே இருந்தது.

ஜனாதிபதி ராஜபக்ஷேவின் வெளிநாட்டு பயணத்துக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்க, ஆர்மி அங்கிள் அகப்படவில்லை.

பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரில் ஒருவராக அந்த ஆர்மி அங்கிள் இருக்கலாம். அவரது பதவி நிலை என்னவென்றும் தெரியாது. பாதுகாப்பு பணிக்கு பொறுப்பாகவுள்ள உயரதிகாரியாக கூட இருக்கலாம். உத்தரவிடும் அதிகாரியாக இருக்கலாம். ராணுவ உளவுத்துறையை சேர்ந்தவராக இருக்கலாம். ஏன், விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவத்தினரின் மேலதிகாரியாககூட இருக்கலாம்.

ஜனாதிபதி ராஜபக்ஷேவை கொல்லும் விடுதலைப் புலிகளின் திட்டத்துக்கு ஆர்மி அங்கிள் முக்கியமானவர் என்று அய்யா கூறிவிட்ட நிலையில், ஜனாதிபதி வெளிநாடு செல்ல வேண்டிய நாள் நெருங்க, நெருங்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தது உளவுத்துறை.

நீர்கொழும்புவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி தொடர்பாளருடன் இந்த ஆர்மி அங்கிள் ஒருமுறை போனில் பேசியபோது, அந்த போன் ரத்மலான டவருக்கும், ஹொமகம டவருக்கும் இடையே எங்கிருந்தோதான் வந்தது என்பதை தவிர வேறு தடயம் ஏதுமில்லை.

அவர் பேசிய போன் இலக்கத்துக்குரிய சிம் கார்டும், போலிப் பெயரில் எடுக்கப்பட்டிருந்தது.

இப்போது அந்த போன் இலக்கத்தை ட்ரேஸ் பண்ண பதிவு செய்து விட்டதால், மற்றொரு தடவை அந்த இலக்கத்தில் இருந்து அவர் பேசினால், இடத்தை லொகேட் பண்ண முடியும். ஆனால் ஆர்மி அங்கிளோ, அந்த போனையே சுவிட்ச் ஆன் பண்ணுவதாக இல்லை. விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்காக மட்டுமே அந்த போனை அவர் உபயோகித்தார்.

இதனால், அடுத்த போன் வரும்வரை உளவுத்துறை பதட்டத்துடன் காத்திருந்தது.

இதற்கிடையே ஆர்மி அங்கிள் தன் பங்குக்கு முட்டாள்தனமான காரியம் ஒன்றை செய்துவிட்டார்.

எக்கச்சக்கமாக மது அருந்தும் நபர் அவர். ஒரு நாள் இரவு பார் ஒன்றுக்கு சென்று மது அருந்திவிட்டு, விடுலைப் புலிகளை அழைக்கும் போனை சுவிட்ச் ஆன் செய்து, டாக்சி ஒன்றை வரவழைத்து அதில் ஏறி வீட்டுக்குச் சென்றார் அவர்.

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் உளவுத்துறையின் கஸ்டடியில் இருந்தார் ஆர்மி அங்கிள். அவரது பெயர், லெப்டினெட் கர்னல் ரஞ்சித் பெரேரா என்று தெரிந்தது.

அவரை விசாரித்தபோது, ஏற்கனவே ஜனாதிபதி ராஜபக்ஷேவை கொலை செய்வதற்கு, தற்கொலை அங்கி அணிந்த கரும்புலியை அழைத்துச் சென்ற சம்பவங்கள் தெரியவந்தன.

அவற்றில் ஒன்றில், மனித வெடிகுண்டாக வெடிக்க தயாராக இருந்த கரும்புலிக்கு, தற்கொலை அங்கிக்கு மேல் இலங்கை ராணுவ சீருடை அணிவித்து, ராணுவ சிப்பாயாக, தமது ராணுவ ஜீப்பில் அழைத்துச் சென்றிருந்தார் அவர்! (தொடரும்….)

ஈழப் போரின் இறுதி நாட்கள்: புலிகளின் போன் தொடர்பு ஸ்டைலை பிடித்தது உளவுத்துறை! 15


கொழும்புவில் எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி நடத்தியவர் மூலம் விடுதலைப்புலி இணைப்பாளர்களில் ஒருவரை பிடித்துவிட்ட இலங்கை உளவுத்துறை, அவருக்கு வந்த ‘ஆர்மி அங்கிளின்’ போன் அழைப்பை ட்ரேஸ் செய்தபோது, ‘ஆர்மி அங்கிள்’, கொழும்புவில் ரத்மலானவுக்கும், ஹொமகமவுக்கும் இடையிலுள்ள ஏரியா ஒன்றில் இருந்து பேசுவது தெரியவந்தது. -கடந்த அத்தியாயத்திலிருந்து…

விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுடன் தொடர்பில் இருந்த இந்த சிங்கள ராணுவ அதிகாரியை (‘ஆர்மி அங்கிள்’) தேடும் முயற்சியில் ஒரு டீம் ஈடுபட, மற்றொரு உளவுப்பிரிவு டீம், நீர்கொழும்பில் அகப்பட்ட விடுதலைப்புலி இணைப்பாளரை (இவர் தற்போது, இலங்கை சிறையில் உள்ளார்) தொடர்ந்து விசாரிக்க தொடங்கியது.

வன்னியில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முடிவுக்கு வர தொடங்கிய அந்த நேரத்தில், நீர்கொழும்பில் சிக்கிய இந்த இணைப்பாளரிடம் இருந்து பல முக்கியமாக தகவல்கள் இலங்கை உளவுப் பிரிவுக்கு கிடைத்தது. அதுவரை அவர்களுக்கு புரியாமல் இருந்த பல புதிர்களுக்கு இவர் மூலம் விடை கிடைத்தது.

அதில் முக்கியமானவற்றில் ஒன்று, கொழும்புவில் நடந்த தாக்குதல்களுக்கு உத்தரவுகள் எங்கிருந்து வருகின்றன என்ற விபரம்.

புலிகளின் உளவுப்பிரிவை சேர்ந்த இவர், “கொழும்பில் செய்யப்பட வேண்டிய வேலைகள் குறித்து எனக்கு போனில் உத்தரவுகள் வரும். அதை உடனடியாக நிறைவேற்றுவேன்” என்றார்.

“உத்தரவுகள் வன்னியில் எந்த இடத்தில் இருந்து, யாரிடம் இருந்து வருகின்றன?”

“இப்போதெல்லாம் வன்னியில் இருந்து உத்தரவுகள் வருவதில்லை. எனக்கு உத்தரவுகள் லண்டனில் இருந்து வருகின்றன” என்றார் இவர்.

இலங்கை உளவுத்துறைக்கு கடைசி நேரத்தில் கிடைத்த முக்கிய தகவல் இது. அதுவரை வன்னியில் இருந்து வரும் சில போன் அழைப்புகளை ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த இலங்கை உளவுத்துறைக்கு, உத்தரவுகள் லண்டனில் இருந்து வருகின்றன என்ற விபரம் தெரிந்தது அப்போதுதான்.

அது மட்டுமல்ல. விடுதலைப் புலிகளின் உளவுத்துறை வைத்திருந்த ஒரு தகவல் தொடர்பு வடிவம் (communication pattern), இலங்கை உளவுத்துறைக்கு தெரியவந்ததும் அப்போதுதான்.

அது என்ன?

லண்டனில் இருந்து தொடர்பு கொள்ளும் நபர், கொழும்புவில் எந்த இடத்தில், எப்போது ‘ஆர்மி அங்கிளை’ சந்திக்க வேண்டும் என்று இவருக்கு சொல்வார். அதேநேரத்தில், இவரது போன் இலக்கமும் ‘ஆர்மி அங்கிளிடம்’ கொடுக்கப்பட்டு இருந்தது.

லண்டன் நபரை ஆர்மி அங்கிளால் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், நீர்கொழும்பில் இருந்த இவரை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவிப்பார். இவர் லண்டனுக்கு தகவலை பாஸ் செய்வார். ஆனால், இவர் எக்காரணம் கொண்டும் ஆர்மி அங்கிளை தொடர்பு கொள்ள மாட்டார்.

இது ஒருவிதமான, ‘ஒரு முனை உடைக்கப்பட்ட’ முக்கோண தகவல் தொடர்பு பரிமாற்றம்.

எப்படியென்றால், A வெளிநாட்டில் (இந்த கேஸில் லண்டனில்) இருப்பார். அவர் கொழும்புவில் இருக்கும் B, மற்றும் C என இருவரிடம் தொடர்பில் இருப்பார். B, மற்றும் C-க்கு, A-யுடன் தொடர்பு இருக்கும். B, C-யை தொடர்பு கொள்வார். ஆனால், C எப்போதும் B-யை தொடர்பு கொள்ள மாட்டார். A-க்கு B,C இருவருடைய நிஜ பெயர் தெரிந்திருக்கும். C-க்கும் B-க்கும் இவருடைய பெயர் அவருக்கு தெரியாது. அவருடைய பெயர் இவருக்கு தெரியாது. சங்கேதப் பெயர்கள்தான் (ஆர்மி அங்கிள் போல)

இதேபோல வேறு முக்கோண தொடர்புகளிலும் இவர்கள் இருப்பார்கள். வேறு புதிய நபர்களும் இருப்பார்கள்.

இந்த தொடர்பு பட்டர்னை புரிந்துகொண்ட இலங்கை உளவுத்துறைக்கு, மற்றொரு விஷயமும் புரிந்தது. அது என்னவென்றால், இவர்களிடம் அகப்பட்ட நீர்கொழும்பு நபருக்கு, கொழும்புவில் இருந்து இயங்கும் மற்றொரு விடுதலைப் புலி இணைப்பாளருடன், மற்றொரு முக்கோண தொடர்பு இருக்க வேண்டும்.

உடனே இந்த கோணத்தில் நீர்கொழும்பு நபர் விசாரிக்கப்பட்டார். அப்போது, அவர் மற்றொரு முக்கோண தொடர்பிலும் உள்ள விஷயம் தெரியவந்தது.

அந்த முக்கோண தொடர்பின் பிரதான முனை மற்றொரு வெளிநாட்டில் (லண்டன் அல்ல) இருந்தது. அதன் மற்ற இரு முனைகளில் இந்த நீர்கொழும்பு நபர் ஒருவர். அப்படியானால், மூன்றாவது நபர்?

உளவுத்துறை விசாரணையில், இந்த மூன்றாவது நபர் யார் என்பதை சொன்னார், நீர்கொழும்பு நபர்.

இந்த மூன்றாவது நபருக்கு கொடுக்கப்பட்டிருந்த சங்கேதப் பெயர், அய்யா.

இந்த முக்கோணத்தில், நீர்கொழும்பு நபர் B, அய்யா C. அதாவது, நீர்கொழும்பு நபரால் அய்யாவை தொடர்பு கொள்ள முடியும்!

உடனே செயல்பட்ட இலங்கை உளவுத்துறை, நீர்கொழும்பு நபரிடம் போனை கொடுத்து அய்யாவை தொடர்பு கொள்ள சொன்னார்கள். கொழும்புவில் பம்பலபிட்டிய என்ற இடத்தில் உள்ள குறிப்பிட்ட கார் பார்க்கிங் ஒன்றுக்கு அய்யாவை வருமாறு அழைத்தார் நீர்கொழும்பு நபர். இருவரும் மறுநாள் காலை அந்த கார் பார்க்கிங்கில் 9 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடாகியது.

மறுநாள், அந்த கார் பார்க்கிங் முழுவதிலும் இலங்கை உளவுத்துறையினர் மறைந்திருக்க..,

நீர்கொழும்பு நபர் காத்திருக்க…,

சரியாக 9 மணிக்கு, பளபளப்பான சொகுசு கார் ஒன்று வந்து நிற்க…,

அதிலிருந்து விலையுயர்ந்த ‘பிரான்ட் நேம்’ கோட்-சூட் அணிந்து, காரிலிருந்து இறங்கினார்… அய்யா! (தொடரும்…)

ஈழப் போரின் இறுதி நாட்கள்: விடுதலைப் புலிகளின் கடைசி நேர கொழும்பு திட்டம்! 14


கொழும்புவில் எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி நடத்தியவர் போன் செய்து, விடுதலைப்புலி இணைப்பாளர்களில் ஒருவரை, நீர்கொழும்புவில் உள்ள இடம் ஒன்றை குறிப்பிட்டு, “இன்று மாலை 5 மணிக்கு அங்கு இருப்பேன். வாருங்கள், பேசலாம்” என்றார் என்பதுடன் கடந்த பாகத்தை முடித்திருந்தோம்.

மாலை 5 மணிக்கு முன்னரே அந்த இடம் முழுவதிலும் இலங்கை உளவுத்துறை SIS-ஐ சேர்ந்தவர்கள் சிவில் உடைகளில் தயாராக இருந்தார்கள்.

உளவுத்துறையினரின் பாதுகாப்பில் இருந்த எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சிக்காரர் அங்கு கொண்டுவரப்பட்டார். போனில் குறிப்பிட்ட இடமான உணவு விடுதி ஒன்றில் அவர் அமர்ந்து கொண்டார். அந்த உணவு விடுதியின் மற்றைய டேபிள்களில் கஸ்டமர்கள் சிலர் அமர்ந்து உணவு உண்டுகொண்டு இருந்தனர். அவர்களும் உளவுத்துறையின் ஆட்கள்.

5 மணிக்கு சாதாரண நபர்போல உணவு விடுதிக்குள் நுழைந்தார், விடுதலைப்புலி இணைப்பாளர். எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சிக்காரரை பார்த்ததும், அவரது டேபிளுக்கு வந்து எதிரே அமர்ந்து கொண்டார். எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சிக்காரர், தமது பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்தார்.

அதுதான் சிக்னல்.

மறுகணமே, புதிதாக வந்தவர்மீது உளவுத்துறையினர் பாய்ந்து, ஆளை கீழே விழுத்தி அசைய விடாமல் செய்தனர். அவர் சயனைட் குப்பியை எடுத்து கடித்துவிட கூடாது என்பதற்காக செய்யப்பட்ட நடவடிக்கை அது. புதியவரின் பாக்கெட்டில் சயனைட் குப்பி கிடைத்தது. அது அவரிடம் இருந்து அகற்றப்பட்டதும், கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது, தாம் யார் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இவர் எப்படி சிக்கிக் கொண்டார் என்று பாருங்கள்:

கொழும்புவில் கரும்புலிகளின் (தற்கொலைப்படை) இணைப்பாளராக இருந்த அவர், இயக்க வேலைகளுக்காக பயன்படுத்த வேண்டிய செல்போனில் இருந்து எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சியை தொடர்பு கொண்டதில் சிக்கிக் கொண்டார்.

இவரது போன் நம்பரை எப்படி இலங்கை உளவுத்துறை தெரிந்து கொண்டது என்பதை பாருங்கள்:

வெளிநாடு ஒன்றில் இருந்து இயங்கிய மற்றொரு விடுதலைப்புலி இணைப்பாளர், தமது போனை அந்த நாட்டு உளவுத்துறை ஒட்டுக்கேட்கிறது என்ற விஷயம்கூட தெரியாமல், தமது சொந்த போனில் இருந்து இவருக்கு போன் பண்ணி, இவரது போன் இலக்கத்தை அந்த நாட்டு உளவுத்துறை அறியும்படி செய்தார்.

அந்த நாட்டில் 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களால் அந்த நாட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கருதிய அந்த நாட்டு உளவுத்துறை, ‘சீக்கிரம் புலிகளின் அத்தியாயத்தை முடிப்பதற்காக’ தம்மிடம் இருந்த விடுதலைப் புலிகளின் கொழும்பு இணைப்பாளரின் போன் இலக்கத்தை இலங்கை உளவுத்துறை SIS-க்கு கொடுத்தது.

இவர் இலங்கை உளவுத்துறையிடம் சிக்கிக் கொண்டது, எப்போது தெரியுமா? 2009-ம் ஆண்டு, மே மாதம் 7-ம் தேதி! அதிலிருந்து 10 நாட்களில், இலங்கை, வன்னியில், விடுதலைப் புலிகளின் இறுதி யுத்தம் முடிந்தது.  
இந்த இறுதி நாட்களில், வன்னியில் இலங்கை ராணுவம் புலிகளை முழுமையாக சூழ்ந்துவிட்ட நிலையில், கொழும்புவில் பெரிய குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டால், அதன் அதிர்வில் ராணுவ நடவடிக்கை தாமதப்படுத்தப்படும் என்பதால், வன்னியில் இருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனும், உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மானும், கொழும்புவில் தாக்குதல் ஒன்றை – இலங்கை முழுவதையும் அதிர வைக்கும் தாக்குதல் ஒன்றை – நடத்த உத்தரவிட்டிருந்தனர்.

2009 மே 14-ம் தேதி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே (தாக்குதலில் சிக்காமல்) ஜோர்தானில் போய் இறங்கியபோது...
2009 மே 14-ம் தேதி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே (தாக்குதலில் சிக்காமல்) ஜோர்தானில் போய் இறங்கியபோது…

‘இலங்கை முழுவதையும் அதிர வைக்கும் தாக்குதல்’ என்பது என்ன தெரியுமா?

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவின் கதையை முடிப்பது!

2009-ம் ஆண்டு மே, 14-ம் தேதி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே G-11 மாநாட்டில் கலந்துகொள்ள ஜோர்தான் சென்று இறங்குவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

அவர் ஜோர்தான் செல்வதற்காக கொழும்பு விமான நிலையம் செல்லும்போதே, பெரிய தற்கொலை தாக்குதல் நடத்தி அவரை கொல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

அதாவது, முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன், கொழும்புவில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய தாக்குதல் இது.

அதில் தொடர்புடைய புலிகளின் கொழும்பு இணைப்பாளர்களில் ஒருவர்தான், தாக்குதலுக்கு 7 நாட்களுக்கு முன், ஒரு செல்போன் இலக்கத்தால், இலங்கை உளவுத்துறையிடம் நீர்கொழும்புவில் சிக்கிக் கொண்டார்.

நீர்கொழும்புவில் சிக்கிக் கொண்டவரிடம் விசாரணை நடைபெற்றது.

அப்போது அவர் மிக முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்தார். “விடுதலைப் புலிகளின் உளவுத்துறை, கொழும்புவில் முக்கியமான ஒருவரை அறிமுகம் செய்து வைத்தது. அவரது உதவியுடன்தான் இலங்கை ஜனாதிபதி மீதான தாக்குதல் நடைபெற உள்ளது” என்றார் அவர்.

அந்த முக்கியமான நபர் யார் தெரியுமா? இலங்கை ராணுவத்தை சேர்ந்த ஒரு சிங்கள அதிகாரி.

இந்த விபரத்தை கேட்டு ஆடிப்போன இலங்கை உளவுத்துறை, அந்த ராணுவ அதிகாரி யார் என்பதை, நீர்கொழும்புவில் சிக்கிக் கொண்டவரிடம் விசாரித்தது.

“அவரை தெரியும். ஆனால் அவரது பெயரோ, ராணுவத்தில் அவரது பதவி நிலையோ தெரியாது. நாங்கள் அவரை ‘ஆர்மி அங்கிள்’ என அழைப்போம்” என்ற பதில் வந்தது.

(அடுத்தடுத்த நாளில் இந்த ‘ஆர்மி அங்கிள்’ சிக்கினார். அவரது பெயர், லெப்டினென்ட் கர்னல் ரஞ்சித் பெரேரா. விடுதலைப் புலிகளுடன் இவர் சரளமாக தமிழ் பேசிய காரணம், இவர் பிறந்து வளர்ந்தது, இலங்கையில் பண்டாரவளை என்ற இடத்தில். இந்திய தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி அது)

“ஆர்மி அங்கிள் யார்?” என இலங்கை உளவுத்துறை தலையை பிய்த்துக் கொண்டிருந்தபோது, நீர்கொழும்புவில் சிக்கிக் கொண்டவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

உடனே உளவுப் பிரிவை சேர்ந்தவர்கள், அவரின் கையில் போனை கொடுத்து, பேசச் சொன்னார்கள். இவரும் சந்தேகம் ஏற்படாதவண்ணம் பேசினார்.

மறுமுனையில் பேசியவர், சாட்சாத் ‘ஆர்மி அங்கிள்’!

“பெரியப்பா ஜோர்தான் போகும் வழியில், நீங்கள் சொல்லியதை செய்யலாம்” என்றார், ஆர்மி அங்கிள்! ‘பெரியப்பா’ என்பது, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவை குறிக்கிறது என்பதை உடனே புரிந்து கொண்டது, இலங்கை உளவுத்துறை.

இந்த போன் அழைப்பை உடனடியாக ட்ரேஸ் செய்தபோது, ‘ஆர்மி அங்கிள்’, கொழும்புவில் ரத்மலானவுக்கும், ஹொமகமவுக்கும் இடையிலுள்ள ஏரியா ஒன்றில் இருந்து பேசுவது தெரியவந்தது. (தொடரும்….)

ஈழப் போரின் இறுதி நாட்கள்: வெளிநாட்டு உளவுத்துறை கொடுத்த விடுதலை புலியின் போன் இலக்கம்! 13


இலங்கையில் இறுதி யுத்தம் மும்மரமாக நடந்து கொண்டிருந்தபோது, இலங்கை உளவுத்துறை SIS-க்கு, வெளிநாட்டு உளவுத்துறை ஒன்றிடம் இருந்து உளவுத் தகவல் ஒன்று வந்தது. வெளிநாட்டு உளவுத்துறை, வெறும் தகவலை மட்டும் கொடுக்கவில்லை. கொழும்புவில் இருந்த விடுதலைப்புலிகளின் இணைப்பாளர் பயன்படுத்திய போன் இலக்கத்தையும் கொடுத்தது.

இலங்கை உளவுத்துறையினர் இந்த செல் போன் இலக்கத்தை தொடர்பு கொள்ள முயன்றபோது, மறுமுனையில் யாரும் பேசவில்லை.

இது விடுதலைப் புலிகளின் வழமையான பாணி என்பது இலங்கை உளவுத்துறைக்கு தெரியும். கொழும்புவில் ஊடுருவியிருந்த விடுதலைப் புலிகள், தமது இயக்க வேலைகளுக்கு ஒரு பிரத்தியேக போன் வைத்திருப்பார்கள். சொந்த பாவனைக்கு வேறு போன் வைத்திருப்பார்கள். இயக்க பாவனைக்கான போனில், தமக்கு தெரிந்த, பரிச்சயமான இலக்கத்தில் இருந்து அழைப்பு வராவிட்டால், பேச மாட்டார்கள்.

இதனால், வெளிநாட்டு உளவுத்துறையிடம் இருந்து, விடுதலைப்புலி இணைப்பாளரின் செல் போன் இலக்கம் கிடைத்தும், உடனடி பலன் ஏதும் கிட்டவில்லை இலங்கை உளவுத்துறைக்கு.

அந்த இலக்கத்துக்குரிய சிம் கார்ட் யாருடைய பெயரில் எடுக்கப்பட்டது என்று பார்த்தபோது, போலி பெயர், மற்றும் முகவரியில் எடுக்கப்பட்ட சிம் என்று தெரிந்தது. அதிலும் பயனில்லை.

அந்த இலக்கத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட போன் அழைப்புகள் பற்றிய தகவல்களை பெற்று அவற்றை செக் பண்ணினார்கள்.

இன்-கம்மிங், மற்றும் அவுட்-கோயிங் கால்கள், இரண்டும் சேர்த்து மொத்தம் 74 இருந்தன. இதில் 70 கால்கள் வெளிநாடுகளுக்கு போனவை, அல்லது, வெளிநாட்டில் இருந்து வந்தவை. 4 லோக்கல் கால்கள். இந்த 4 கால்களுமே மிஸ்ட்டு கால்கள். அவை இரு லோக்கல் இலக்கங்களை அழைத்த கால்கள்.

ஒரு லோக்கல் இலக்கத்துக்கு ஒரு கால், மற்றொரு இலக்கத்துக்கு மூன்று கால்கள். இரண்டு இலக்கங்களுமே, ஓரிரு எண்கள் மாறுபடும், நெருக்கமான இலக்கங்கள்.

இந்த இரு லோக்கல் இலக்கங்களையும் ஆராய்ந்தது இலங்கை உளவுத்துறை.

இவற்றில் ஒரு இலக்கம், தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட அழைப்பு என தெரிந்தது. அதை விட்டுவிட்டு மற்றைய இலக்கத்தை பார்த்தால், அது ஒரு எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி அலுவலகத்தின் இலக்கம்.

இதுதான், உளவுப் பிரிவுக்கு கிடைத்த முதலாவது தடயம்.

அந்த போன் இலக்கத்துக்குரிய எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சியை உளவுத்துறை கண்காணித்ததில், அதன் உரிமையாளர் வெளிநாடு சென்றிருப்பது தெரிந்தது.

விடுதலைப்புலி இணைப்பாளரின் போனில் இருந்து அழைப்புகள் வந்தபோது, எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர், இலங்கையில் இல்லை என்பதை, இமிகிரேஷன் இலாகா முலம் உறுதி செய்து கொண்டது உளவுத்துறை. அதுதான், விடுதலைப்புலி இணைப்பாளரின் அழைப்பு, மிஸ்ட்டு காலாக போயிருந்தது என்பது புரிந்தது.

எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளரின் பெயரை, இமிகிரேஷன் பிளாக் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டது உளவுத்துறை.
தையடுத்து இந்த நபர் வெளிநாட்டில் இருந்து கொழும்பு வந்து இறங்கியபோது, விமான நிலைய இமிகிரேஷனில் தடுக்கப்பட்டார். இமிகிரேஷன் அதிகாரிகளிடம் இருந்து தகவல் வரவே, விமான நிலையம் சென்று அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது, உளவுத்துறை.

எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளரை, விடுதலைப்புலி இணைப்பாளர் அழைத்த (அவரது சொந்த) இலக்கத்தில் இருந்து, வெளிநாட்டு உளவுத்துறை கொடுத்த செல் போன் இலக்கத்தை அழைக்க வைத்தார்கள், உளவுத்துறையினர்.

இப்போது, மறுமுனையில் போன் எடுக்கப்பட்டது. (காரணம், விடுதலைப்புலி இணைப்பாளருக்கு தெரிந்த, பரிச்சயமான இலக்கம் அது!)

உளவுத்துறையினர் சொல்லிக் கொடுத்தபடியே பேசினார், எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர். தாம் வெளிநாடு சென்றிருந்ததாகவும், இப்போது நாடு திரும்பி, தமது போனில் பதிவாகி உள்ள மிஸ்ட்டு கால்களை தொடர்பு கொள்வதாகவும் சொன்னார் அவர்.

மறுமுனையில் பேசியவர், “என்னை இந்த இலக்கத்தில் அழையுங்கள்” என மற்றொரு போன் இலக்கத்தை கொடுத்தார்.

இவர் விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்பது ஓரளவுக்கு உறுதியானது. அவர் கொடுத்த மற்ற இலக்கத்தை அழைத்தார், எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர். முதலில் பேசிய அதே நபர், மறுமுனையில் பேசினார்.

இந்த அழைப்புகள், இலங்கை உளவுத்துறை SIS-ன் அலுவலகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டன. அந்த அலுவலகத்தின் கன்ட்ரோல் ரூமில், செல் போன்களை ட்ராக் செய்யும் வசதி இருந்தது.

அதில் இருந்து, எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளருடன் பேசியவர் வைத்திருந்த இரு செல்போன்களும், நீர்கொழும்பு (நிகொம்போ) பகுதியில் இருந்து பேசப்படுவதை, உளவுத்துறை தெரிந்து கொண்டது.

“என்ன விஷயம்?” என எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர் கேட்டபோது, மறுமுனையில் பேசியவர், “அவசரமான இரண்டு பேரை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இது அவசரம்” என்றார்.

கொழும்பு நகரில் தங்கியுள்ள விடுதலைப்புலிகளில் யாராவது மீது, போலீஸ் சி.ஐ.டி, அல்லது உளவுத்துறையினரின் பார்வை பட்டுவிட்டால், உடனே அந்த நபரை எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவது என்பதும், விடுதலைப் புலிகளின் நடைமுறை என்பதை, உளவுத்துறை தெரிந்து வைத்திருந்தது.

“சரி. அனுப்பி வைக்கலாம். அது பற்றி பேச உங்களை எங்கு சந்திக்கலாம்?” என்று கேட்டார், எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர்.

மறுமுனையில் பேசியவர் (நிஜமாகவே விடுதலைப்புலி இணைப்பாளர்களில் ஒருவர்), நீர்கொழும்புவில் உள்ள இடம் ஒன்றை குறிப்பிட்டு, “இன்று மாலை 5 மணிக்கு அங்கு இருப்பேன். வாருங்கள், பேசலாம்” என்றார். (தொடரும்…)

ஈழப் போரின் இறுதி நாட்கள்: விடுதலைப் புலிகளின் கொழும்பு ஆபரேஷன் சிக்கிய கதை 12


இலங்கை ராணுவத்துடன் நடந்த சுமார் 30 ஆண்டுகால யுத்தத்தின்போது, ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்ட போதெல்லாம், புலிகள் கையாண்ட முக்கிய தந்திரம், தெற்கே சிங்களப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்புவிலும் எதிர்பாராத இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க வைப்பதுதான்.

தற்கொலை தாக்குதல்கள் மூலம் வெடிக்கும் வெடிகுண்டுகளால் பலத்த சேதம் ஏற்படும். அல்லது, இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர் கொல்லப்படுவார். அதையடுத்து, இலங்கை ராணுவம் அடக்கி வாசிக்க தொடங்கும். புலிகளுக்கு தம்மை பலப்படுத்திக் கொள்ள அவகாசம் கிடைக்கும்.

1990களில் இருந்தே நடந்துவந்த நடைமுறை இது. புலிகளின் உளவுத்துறையின் ஒரு பிரிவும், தற்கொலை போராளி பிரிவான கரும்புலிகளும் இணைந்து நடத்திய குண்டுவெடிப்புகள் அவை.

இறுதி யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகள் ஒவ்வொரு நகரமாக கைவிட்டு பின்வாங்கி சென்றுகொண்டிருந்தபோதும், இந்த தந்திரம் கடுமையாக முயற்சிக்கப்பட்டது. ஆனால், முன்பு கிடைத்தது போன்ற வெற்றிகள் புலிகளுக்கு கிடைக்கவில்லை.

இறுதி யுத்தம் நடந்தபோது நடந்த சம்பவங்களை கவனமாக பார்த்தீர்கள் என்றால், யுத்தத்தின் இறுதி மாதங்களில், சிங்களப் பகுதிகளிலோ, கொழும்புவிலோ எந்தவொரு குண்டும் வெடிக்கவில்லை என்பதை கவனிக்கலாம். அந்த காலப்பகுதியில் எந்தவொரு தற்கொலை தாக்குதலும் நடக்கவில்லை.

சில தமிழ் மீடியாக்களில், “விடுதலைப் புலிகள், தற்கொலை தாக்குதல் நடத்தி வெளிநாடுகளின் அதிருப்தியை சம்பாதிக்க விரும்பாத காரணத்தாலேயே, அவற்றை முழுமையாக நிறுத்திவிட்டு, நேரடியாக சண்டைபோட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கிச் சென்று, அனைத்தையும் முழுமையாக இழந்தார்கள்” என விளக்கம் கொடுக்கிறார்கள்.

அவர்களை பொறுத்தவரை அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.

நிஜமாக நடந்தது என்னவென்றால், இறுதி யுத்தத்தின் இறுதி மாதங்களில் கொழும்புவில் விடுதலைப்புலிகளால் திட்டமிடப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்கள் ஏதையும், அவர்களால் நடத்த முடிந்திருக்கவில்லை. காரணம், கொழும்புவில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திய இணைப்பாளர்கள் ஒவ்வொருவராக இலங்கை உளவுத்துறையினரிடம் அகப்பட்டுக் கொண்டார்கள்.

அவர்களில் பலர், தற்போதும் இலங்கை சிறைகளில் உள்ளார்கள். உரிய அனுமதி பெற்று சென்று அவர்களை சந்தித்து கேட்டால், விளக்கமாக சொல்வார்கள். இப்போது இந்த விவகாரங்கள் எதுவும் ரகசியம் கிடையாது.

இறுதி யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. அதற்கு சில மாதங்களுக்கு முன்னரே விடுதலைப் புலிகள் தமது நிலைமை மிக மோசம் என்பதை புரிந்து கொண்டிருந்தார்கள். யுத்தத்தை நிறுத்தினால்தான், தம்மை பலப்படுத்திக்கொள்ள முடியும் என்பதை புரிந்து கொண்டார்கள். இதற்குமுன், போர் நிறுத்தத்தை கொண்டுவர உதவிய வெளிநாடுகள், கழுவிய நீரில், நழுவிய மீனாக இருந்தன.

இதனால், கொழும்புவில் பெருமளவில் குண்டுகள் வெடித்து நாட்டையே அதிரவைத்தால்தான், முன்னேறும் ராணுவத்தை தடுத்து நிறுத்த முடியும் என்ற நிலை.

இலங்கையின் தெற்கு பகுதியில், முக்கியமாக கொழும்புவின் புறநகர பகுதியில், பல இடங்களில் விடுதலைப்புலிகளால் வெடிகுண்டுகளும், ஆயுதங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை வெடிக்க வைப்பதற்காக தற்கொலை தாக்குதல்கள் செய்ய அனுப்பி வைக்கப்பட்ட கரும்புலிகளும், கொழும்புவின் வெவ்வேறு பகுதிகளில் மக்களோடு மக்களாக கலந்து போய் இருந்தார்கள்
இந்த கரும்புலிகள், தாமாக மறைவிடத்துக்கு போய், வெடிகுண்டு ஒன்றை எடுத்துச் சென்று வெடிக்க வைப்பது என்பதல்ல நடைமுறை.

தற்கொலை தாக்குதல் செய்ய தயாராக இருந்த கரும்புலிகளுக்கே, வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த மறைவிடங்கள் தெரியாது. வன்னியில் இருந்த புலிகளின் உளவுப்பிரிவு தலைமைக்கும், இந்த கரும்புலிகளுக்கும் இடையே இணைப்பாளர்களாக இருந்த சிலருக்கு மட்டுமே, இந்த மறைவிடங்கள் தெரியும்.

இந்த இணைப்பாளர்களே, வன்னி யுத்த களத்துக்கு வெளியே நடந்த தாக்குதல்களுக்கு முதுகெலும்பு போன்றவர்கள்.

எப்படியென்றால், கொழும்புவில் இருந்த இந்த இணைப்பாளர்களிடம்தான் வன்னியில் இருந்து கரும்புலிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் தங்குவதற்காக வெவ்வேறு மறைவிடங்களை ஏற்பாடு செய்வது இந்த இணைப்பாளர்களே. அத்துடன், வன்னியில் இருந்து வெடிப் பொருட்கள் வருவதும் இந்த இணைப்பாளர்களுக்குதான். வெடிப் பொருட்களை கொழும்புவின் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைப்பதும், இந்த இணைப்பாளர்களே.

அதன்பின், வன்னியில் இருந்து உத்தரவு வரும், குறிப்பிட்ட பிரமுகரையோ, இலக்கையோ தாக்கும்படி.

அந்த தாக்குதலை நடத்த உரிய இடத்தை தேர்ந்தெடுப்பது, மறைவிடத்தில் உள்ள கரும்புலி ஒருவரை தயார் செய்வது, வேறொரு மறைவிடத்தில் உள்ள வெடிகுண்டை கரும்புலியிடம் கொடுப்பது, உடலில் குண்டு பொருத்தப்பட்ட கரும்புலியை, தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தில் கொண்டுபோய் சேர்ப்பது எல்லாமே, இந்த இணைப்பாளர்களின் கையில்தான்!

மொத்தத்தில், வன்னியில் இருந்தவர்களுக்கு, கொழும்புவில் கரும்புலிகளின் மறைவிடங்கள் எங்கே என்று தெரியாது. கொழும்புவில் இருந்த கரும்புலிகளுக்கு, கொழும்புவில் வெடிகுண்டுகள் இருந்த மறைவிடங்கள் எங்கே என்று தெரியாது. அனைத்தும் தெரிந்தவர்கள், இந்த இணைப்பாளர்கள்.

இப்படியான இணைப்பாளர்கள்தான், இறுதி யுத்தத்தின் இறுதி மாதங்களில் கொழும்புவில் ஒவ்வொருவராக சிக்கிக் கொண்டார்கள்!

இறுதி யுத்தம் மும்மரமாக நடந்து கொண்டிருந்தபோது, இலங்கையின் உளவுத்துறை SIS-க்கு (State Intelligence Service), வெளிநாட்டு உளவுத்துறை ஒன்றிடம் இருந்து உளவுத் தகவல் ஒன்று வந்தது.

(இலங்கை உளவுத்துறை SIS, பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு. முன்பு National Intelligence Bureau என்ற பெயரில் செயல்பட்ட அமைப்புதான், SIS என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் தற்போதைய டைரக்டர், சந்திரா வாஹிஸ்த)

வெளிநாட்டு உளவுத்துறை, தமது நாட்டில் இருந்த விடுதலைப்புலிகள் செயல்பாட்டாளர் ஒருவருடைய போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது, வெளிநாட்டு விடுதலைப்புலிகள் செயல்பாட்டாளரிடம் இருந்துதான், கொழும்புவில் உள்ள இணைப்பாளர்களுக்கு உத்தரவுகள் போவதை, வெளிநாட்டு உளவுத்துறை தெரிந்து கொண்டது.

இந்த காலப்பகுதியில் (2009-ம் ஆண்டு ஆரம்பம்), அந்த வெளிநாட்டுக்கு அவர்களது நாட்டில் விடுதலைப் புலிகளால் பலத்த இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. அந்த நாட்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வந்தது.

அதை தடுக்க முயன்றால், அரசியல் ரீதியாக குறிப்பிட்ட வெளிநாட்டு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும்.

இதனால், ஆர்ப்பாட்டங்களை வெளிப்படையாக தடுக்காமல், இதற்கெல்லாம் மூல காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை, இலங்கையில் முடித்து விடுவது நல்லது என்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

அந்த அடிப்படையிலேயே, தமது நாட்டில் இருந்து, கொழும்புவில் உள்ள இணைப்பாளர் ஒருவருக்கு உத்தரவுகளை கொடுக்கும் வெளிநாட்டு செயற்பாட்டாளர் தொடர்பான உளவுத் தகவலை, இலங்கை உளவுத்துறை SIS-க்கு கொடுத்தது, வெளிநாட்டு உளவுத்துறை.

வெளிநாட்டு உளவுத்துறை, வெறும் தகவலை மட்டும் கொடுக்கவில்லை. கொழும்புவில் இருந்த விடுதலைப்புலிகளின் இணைப்பாளர் பயன்படுத்திய போன் இலக்கத்தையும் கொடுத்தது. “கொழும்புவில் உள்ள இந்த இலக்கத்தில் இருந்து அழைத்துதான், உத்தரவுகளை பெற்றுக் கொள்கிறார்கள்”(தொடரும்..)

ஈழப் போரின் இறுதி நாட்கள்: நந்திக்கடல் விவகாரத்தில் வசமாக சிக்கினார் ரஷ்ய உளவாளி! 11`


விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான இறுதி யுத்தம் நடைபெற்ற கடைசி நாட்களில், மீடியாக்களில் நிஜ தகவல்கள் எப்படி மறைக்கப்பட்டன என்பதற்கான ஒரு சில உதாரணங்களை கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

யுத்தத்தின் இறுதி நாளில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நந்திக்கடல் பகுதியில் கொல்லப்பட்டார் என்ற செய்தியை  இலங்கை அரசு அறிவித்தது. அதற்கு முதல் வாரம் நாம் வெளியிட்ட ‘பரபரப்பு வீக்லி’ வார பத்திரிகையின் கவர் ஸ்டோரி என்ன தெரியுமா?

பெரிய எழுத்துக்களில் ‘நந்திக்கடல்’ என்பது மட்டுமே கவர் ஸ்டோரியின் தலைப்பு!

மே 15-ம் தேதியிடப்பட்ட பத்திரிகையில் வெளியான அந்தக் கட்டுரையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்த முனையில் இருந்து தப்பிப்பது என்றால், அதற்கு ஒரே வழி, நந்திக்கடல் ஓரமாக தப்பிப்பதுதான். அதற்கும் அதிக நாட்கள் அவகாசம் கிடையாது. வேறு எந்த வழியிலும் வெளியேற முடியாது. பிரபாகரன் தப்பிப்பது என்றால், இலங்கை ராணுவத்தின் 53-ம் டிவிஷன் படைப்பிரிவு நிற்கும் இடத்தில்தான் முயற்சித்து பார்க்க சான்ஸ் அதிகம். இதனால், நந்திக்கடல் ஓரமாக அடுத்த சில தினங்களில் முக்கிய சம்பவங்கள் நடைபெறலாம்” என எழுதியிருந்தோம்.

நாம் மே 15-ல் அப்படி எழுதியிருக்க, அதிலிருந்து ஒரு வாரத்துக்குள், மே 19-ம் தேதி, இலங்கை ராணுவத்தின் 53-ம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4-ம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு, லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது, நந்திக்கடல் ஓரம், கோரைப் புற்களில் சிக்கிய நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

eelam-war-20131226-3
சாம்பிளுக்கு நம்ம பத்திரிகை..

அந்த நாட்களில் எமது ‘பரபரப்பு வீக்லி’ வார பத்திரிகைக்கு அதிக எதிர்ப்பை ஏற்படுத்திய கட்டுரை அது.

‘யுத்த முனையில் இருந்து பிரபாகரன் தப்பிக்க முயற்சி’, ‘வேறு வழியில்லை’ என்ற சொற்பதங்களை உபயோகிப்பது தமிழின துரோகம் என சிலர் எகிறினார்கள். யுத்த முனையில் இருந்து வெவ்வேறு தொடர்புகள் மூலம் நாம் வெளியிட்ட நிஜ நிலைமையை அல்லது ரியாலிட்டியை அப்படியான சிலர், ‘பொய் பிரசாரம்’ என்றார்கள்.

யாருக்காக பொய் பிரசாரம் செய்தோம் என்பதில்தான் இவர்களில் ஆளாளுக்கு குழப்பம்.

சிலர், நாம் இலங்கை அரசின் ஊதுகுழல் என்றார்கள். சிலர், நாம் இந்திய உளவுத்துறை ‘ரா’வின் ஆள் என்றார்கள். சிலர், சி.ஐ.ஏ. ஏஜென்ட் என்றார்கள்.

இந்த அரிய உண்மைகளை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்? எல்லா உளவுத்துறைகளிலும் இவர்கள் இன்பார்மர்களை வைத்திருக்கிறார்களா?

சேச்சே.. அதெல்லாம் கிடையாது. இந்த உளவுத்துறைகள் பற்றியெல்லாம் விலாவாரியாக எழுதிக்கொண்டு இருந்த ஒரே தமிழ் மீடியா நாம்தான் என்பதில் இருந்து, சும்மா ஜிகுஜிகுவென்று எடுத்து விட்டார்கள்.

இவர்கள் எல்லோரது பட்டமளிப்புகளை விட மகா கொடுமை, ‘ஈழ தேசிய இணையதளம்’ என தம்மை கூறிக்கொள்ளும் ஒரு மீடியா, எமக்கு கொடுத்த பட்டம்தான். அதில் ‘ஆய்வுக்கட்டுரை’ எழுதிய ‘ஆய்வாளர்’ ஒருவர், “இந்த ஆள் ரிஷி, ரஷ்ய உளவுத்துறை கே.ஜி.பி. (KGB) ஏஜென்ட்” என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.

“அடப்பாவி, இதை இவர் எங்கே பிடித்தார்?” என யோசித்து பார்த்தபோது, புரிந்தது. ‘பரபரப்பு வீக்லி’ வார பத்திரிகையில், 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் நாம் ரஷ்ய உளவுத்துறை கே.ஜி.பி.யின் ஆபரேஷன் பற்றிய தொடர் கட்டுரை ஒன்றை வெளியிட்டுக் கொண்டிருந்தோம். அதே காலப்பகுதியில், இலங்கை பாதுகாப்பு அமைச்சு ரஷ்யாவிடம் வாங்க முயன்றுகொண்டிருந்த மிக்-29 போர் விமானங்கள் பற்றியும், ஏற்கனவே வன்னியில் குண்டுவீசிக் கொண்டிருந்த ரஷ்ய மிக்-27 விமானங்கள் பற்றியும் விலாவாரியாக எழுதிக்கொண்டு இருந்தோம்.

கே.ஜி.பி. ஆபரேஷன், மிக்-27, மிக்-29 எல்லாவற்றையும் சேர்த்து போட்டு கலக்கி, “ரிஷி, சாதாரண ஆள் கிடையாது. ஆசாமி, ரஷ்ய உளவுத்துறை கே.ஜி.பி. (KGB) ஏஜென்ட்” என்று போட்டுத் தாக்கி விட்டார் அதை எழுதிய புத்திசாலி ஆய்வாளர்.

நான் மீடியா துறையை விட்டு விலகுமுன் அதை எழுதிய மேதாவியை ஒருமுறையாவது கண்ணால் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் இன்னமும் உள்ளது. “அண்ணே.. ரஷ்ய உளவுத்துறை கே.ஜி.பி. 1991-ம் ஆண்டே கலைக்கப்பட்டு விட்டது. அதன்பின் FSB (ரஷ்ய உள்ளக உளவுத்துறை, SVR (ரஷ்ய வெளிநாட்டு ஆபரேஷன் உளவுத்துறை) உருவாகின. 1991-ல் கலைக்கப்பட்ட உளவுத்துறைக்கு 2009-ல் என்னை உளவாளியாக்கி பெருமை சேர்த்திங்க.. ரொம்ப டாங்ஸ் அண்ணாச்சி!”

ஈழ இறுதி யுத்தம் தொடர்பாக எந்த தகவலும் தெளிவாக இல்லாமல், இன்னமும் குழப்பம் நீடிப்பதற்கு, மீடியாக்களில் சுதந்திரமாக செயல்பட முடியாமல் இருந்த நிலைதான் காரணம். அதுவும் அந்த நாட்களில் ‘பரபரப்பு வீக்லி’ வார பத்திரிகை போன்ற அச்சு மீடியா என்றால், முணுக் என்பதற்குமுன் வீதியில் போட்டு எரித்து விடுவார்கள். இப்போது எலக்ட்ரானிக் மீடியாக்களில் எழுதுவது பிரச்னையில்லை.

சுருக்கமாக சொன்னால், நம் வீட்டு கொல்லைக்குள் நின்று எட்டிப் பார்த்தால், முழு உண்மையும் தெரியவராது. மற்றைய தரப்பில் இருந்தும் தகவல் வர வேண்டும். அதற்கு எல்லா தரப்பிலும் தொடர்புகள் இருக்க வேண்டும். கருணாநிதியும், ஜெயலலிதாவும் அரசியல் செய்வதுபோல ஆளையாள் முகத்தை திருப்பிக்கொண்டு போனால், இதில் காரியமாகாது. நேரில் இறங்கி விசாரிக்க வேண்டும்!

‘ஈழ யுத்தம் இறுதி நாட்கள்’ தொடரில், இலங்கை கிழக்கு மாகாணத்தில் நடந்த சில தாக்குதல்கள் பற்றி எழுதியிருந்தோம். கிழக்கில் புலிகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், சிங்களப் பகுதிகளிலும், கொழும்புவிலும் புலிகளின் உளவுப் பிரிவு சில குண்டுவெடிப்புகளை செய்ய முயன்றது.
விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்துடன் நடத்திய நீண்டகால யுத்தத்தில், பிரதான தந்திரமாக இருந்தவற்றில் இந்த குண்டுவெடிப்புகள் முக்கியமானவை.

யுத்தத்தில் புலிகளுக்கு பின்னடைவு ஏற்படும் போதெல்லாம், தெற்கே சிங்களப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்புவிலும் எதிர்பாராத இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும். பலத்த சேதம் ஏற்படும். அதையடுத்து, இலங்கை ராணுவம் அடக்கி வாசிக்க தொடங்கும். புலிகளுக்கு தம்மை பலப்படுத்திக் கொள்ள அவகாசம் கிடைக்கும்.

1990களில் இருந்தே நடந்துவந்த நடைமுறை இது. புலிகளின் உளவுத்துறையின் ஒரு பிரிவும், தற்கொலை போராளி பிரிவான ‘கரும்புலிகளும்’ இணைந்து நடத்திய குண்டுவெடிப்புகள் அவை.

இறுதி யுத்தத்தின்போதும், இந்த தந்திரம் முயற்சிக்கப்பட்டது. ஆனால், முன்பு கிடைத்தது போன்ற வெற்றிகள் புலிகளுக்கு கிடைக்கவில்லை.

அதுவும் யுத்தத்தின் இறுதி மாதங்களில், சிங்களப் பகுதிகளிலோ, கொழும்புவிலோ எந்தவொரு குண்டும் வெடிக்கவில்லை. எந்தவொரு தற்கொலை தாக்குதலும் நடக்கவில்லை.

யுத்தம் முடிந்தபின் இலங்கை ராணுவ அதிகாரி ஒருவரை பேட்டி கண்டபோது, “யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவதற்கு 1 மாதத்துக்கு முன்பு ஏப்ரலில் தலைநகர் கொழும்புவில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு ஒன்று நடத்தப்பட்டு இருந்தால், எந்த வெளிநாட்டு தலையீடும் இல்லாமல் யுத்தம் நின்று போயிருக்கும். ஆனால் புலிகளால் கொழும்புவில் தாக்குதல் எதையும் செய்ய முடியவில்லை” என்றார்.

அதுவும், யுத்தத்தின் இறுதி நாட்களில், தமக்கு அழிவு நிச்சயம் என்று புரிந்துவிட்ட நிலையிலும், ‘கொழும்புவில் தற்கொலை தாக்குதல்’ என்ற இறுதி ஆயுதத்தை புலிகளால் பயன்படுத்த முடியவில்லை. கொழும்புவிலும், அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலும் தரையில் செய்ய முடியாத தாக்குதல்களை, வான்புலிகள் விமானம் மூலம் செய்ய முயன்றார்கள். அவையும், இலக்குகளில் சரியாக விழவில்லை.

யுத்தம் இறுக்கமாக தொடங்கிய நிலையில், பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை காட்சியில் இருந்து நீக்குவதற்காக புலிகள் கடும் முயற்சி செய்தனர். இந்த இருவர் மீதும் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அவையும் சரியாக நடக்கவில்லை. தற்கொலைத் தாக்குதலில் இருந்து இருவருமே தப்பித்துக் கொண்டனர். சரத் பொன்சேகா படுகாயமுற்று, சிங்கப்பூர் வரை சென்று சிகிச்சை பெற்று வந்து யுத்தத்தை நடத்தினார். கோட்டாபய ராஜபக்ஷ, சிறு காயத்துடன் தப்பித்துக் கொண்டார். இந்த இருவரில் ஒருவர் உயிரிழந்திருந்தால்கூட, யுத்தத்தின் போக்கு மாறியிருக்கலாம்.

முன்பு தெற்கு இலங்கையில் புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புகளையும், தற்கொலைத் தாக்குதல்களையும், கடைசி நேரத்தில் ஏன் புலிகளால் செய்ய முடியாது போனது? அதற்கு என்ன காரணம்? புலிகள் முயற்சிக்கவே இல்லையா?

இப்போது யுத்தம் முடிந்தபின், இலங்கை ராணுவ உளவுப்பிரிவு, தேசிய உளவுப்பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளை பேட்டி கண்டதில் அவர்களிடம் இருந்து கிடைக்கும் பதில், “தெற்கே வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த புலிகள் கடுமையாக முயற்சித்தார்கள். ஆனால் குண்டுவெடிப்புகளை செய்வதற்காக புலிகளால் தெற்கே அனுப்பி வைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக சிக்கிக் கொண்டார்கள்” என்பதுதான்.

புலிகளின் உளவுத்துறை மற்றும் கரும்புலிகள் பிரிவை சேர்ந்த இவர்கள் எப்படி சிக்கிக் கொண்டார்கள் என்ற விபரங்களை இப்போது தெரிந்துகொள்ள முடிகிறது. இவர்களை பிடித்த அதிகாரிகளிடம் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகிறது. அப்போது கைது செய்யப்பட்டு இலங்கை தடுப்பு காவலில் உள்ள புலிகளின் உளவுத்துறை மற்றும் கரும்புலிகள் பிரிவை சேர்ந்த சிலருடன் பேசவும் முடிந்தது.

தற்போது தெரியவந்த விஷயங்களில் மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இவர்களில் சிலர், மிக சாதாரண காரணங்களால், அல்லது கவனக்குறைவால் சிக்கிக் கொண்ட சம்பவங்களும் உண்டு!

இந்த ‘ஈழ யுத்தம் இறுதி நாட்கள்’ தொடரில் நாம் எழுதிவரும், கிழக்கு மாகாணத்தில் யுத்த சம்பவங்கள் நடந்த அதே நேரத்தில், புலிகள் கொழும்புவில் குண்டு வெடிப்புகளை நடத்த ஆட்களை அனுப்பி வைத்தார்கள். கிழக்கே யுத்தம் நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில்தான், தெற்கே ஒவ்வொருவராக சிக்கிக் கொள்ள தொடங்கினார்கள் என்பதால், அந்த ஆபரேஷன்களை அடுத்த சில அத்தியாயங்களில் பார்த்துவிட்டு, மீண்டும் யுத்த முனைக்கு செல்லலாம்.

எமக்கு தெரியவந்த தகவல்களில், சில விசித்திரமான சம்பவங்களும் உள்ளன.

வெறும் சந்தேக கேஸில் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களில் ஒருவரை வெளியே கொண்டுவர, ‘பெரிய அளவில்’ முயற்சிக்கப்போய், “ஆகா.. இவரில் ஏதோ விஷயம் உள்ளது” என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி, ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் உண்டு. எந்த முயற்சியும் செய்யாமல் விட்டிருந்தால், இரண்டு மணி நேர சந்தேக கேஸ் விசாரணையை முடித்துக்கொண்டு ஆளை வெளியே விட்டிருப்பார்கள்.

தெற்கே விபசார விடுதி நடத்தும் ‘மேடம்’ ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஒருவர் சிக்கி, அவர் மூலம் சங்கிலித் தொடராக வேறு சிலர் சிக்கிய சம்பவமும் உண்டு. பெரிய லிங்க் அது. தகவல் கொடுத்த விபசார விடுதி ‘மேடம்’, கொடுத்த தகவலுக்காக இலங்கை உளவுப் பிரிவின் பணப்பரிசும் பெற்றார். அதன்பின் இப்போதும், ஒரிஜினல் தொழிலான விபசார விடுதியையே நடத்துகிறார்.

புலிகளால் வெடிப்பொருள் ஏற்றி அனுப்பப்பட்ட லாரி ஒன்றின் பின் பாடியில் (ட்ரெயிலர்) வெளிப்புற நீளத்துக்கும், உட்புற நீளத்துக்கும் இடையே சில செ.மீ. வித்தியாசம் இருந்ததால் ஏராளமான வெடிப்பொருள் சிக்கிய சம்பவமும் உண்டு. அதனுடன் தொடர்பாக பலர் சிக்கியதும் நடந்தது.

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி ஒன்றின் மூலம், ஒரு குரூப் சிக்கியது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவை தற்கொலை குண்டுவெடிப்பின் மூலம் கொல்ல போடப்பட்ட திட்டம் ஒன்று சிக்கிய சம்பவமும் உண்டு. அந்த திட்டத்தில் தொடர்பு கொண்ட சிங்கள ராணுவ அதிகாரி ஒருவரும் சிக்கினார் என்பது உபரி தகவல்...(தொடரும்)

ஈழப் போரின் இறுதி நாட்கள்: புலிகளின் இறுதி யுத்தம் மூடுமந்திரமாக இருந்தது ஏன்? 10


இலங்கை கிழக்கு மாகாணம் திரிகோணமலை மாவட்டம் மூதூர் பகுதியில் விடுதலைப் புலிகள் தொடங்கிய (ஆம். சண்டையை தொடங்கியது அங்கிருந்த புலிகள்தான் என்பதை தற்போது, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளிடம் இருந்தே உறுதி செய்துகொள்ள முடிகிறது) சண்டையில் முதல் இரு நாட்கள் புலிகளுக்கே வெற்றி என்பது போன்ற போக்கு காணப்பட்ட நிலையில், நாம் கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்ட செல்வநகர் யுத்தத்திலேயே முதல் தடவையாக புலிகள் இழப்புக்களை சந்திக்க தொடங்கினர்.

செல்வநகர் முகாமில் இருந்து ரோந்து வந்த ராணுவத்தினரை வீதி மறைவிடங்களில் இருந்து புலிகள் தாக்கியதுவரை, போரின் போக்கு புலிகளுக்கு சாதகமாக இருந்தது. ஆனால், தாக்குதலுக்கு உள்ளான ராணுவத்தினர், மறைவிடங்களை தேடி ஓடிவிட, அவர்களை தேடி புலிகள் வீதிக்கு வந்ததுதான் பெரிய தவறு.

சண்டை நடந்த இடத்துக்கு செல்வநகர் ராணுவ முகாமில் இருந்து மேலும் ராணுவத்தினர் வரலாம் என்ற சாத்தியத்தை புலிகள் கணக்கில் எடுக்கவில்லை. அதனால்தான் தமது மறைவிடங்களை விட்டு வெளியே வீதிக்கு வந்தார்கள். ஆனால், செல்வநகர் ராணுவ முகாமில் இருந்து மேலதிகமாக 15 ராணுவத்தினர், தாக்குதல் நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்கள் தாக்குதல் நடந்த இடத்துக்கு வந்தபோது, புலிகளின் நின்றிருந்த இடத்துக்கு பின்புறமாக வந்து சேர்ந்தனர். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்த புலிகளை மிக தெளிவாக பார்க்க முடிந்தது.

ராணுவத்தினர் புலிகளுக்கு பின்னால் இருந்த இடத்தில் கவர் எடுத்துக் கொண்டு சுடத் தொடங்கினார்கள்.

10 நிமிடங்களுக்கு உட்பட்ட நேரத்தில், 15 ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், சுமார் 40 புலிகள் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். இறுதி யுத்தத்தில் புலிகளுக்கு ஏற்பட்ட தோல்வியின் ஆரம்பம், இங்குதான் தொடங்கியது.

செல்வநகர் ராணுவ முகாமில் இருந்து ரோந்து வந்த ராணுவத்தினரை கடைவீதியில் வைத்து தாக்கிய புலிகளின் படையணிக்கு தலைமை தாங்கியவர், ராணுவ முகாமை கண்காணிக்க யாரையும் அனுப்பியிருக்கவில்லை. அப்படி அனுப்பியிருந்தால், இரண்டாவது டீம் சண்டை நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டபோது, கண்காணிக்க அனுப்பப்பட்டவர் தகவல் கொடுத்திருப்பார். கடைவீதியில் 40 பேர் உயிரை விட்டிருக்க தேவையில்லை.

இந்த சண்டையில் ராணுவ தரப்பில் வெறும் 2 பேர்தான் கொல்லப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். புலிகள் தரப்பில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. இதுதான் இறுதி யுத்தத்தில் புலிகளுக்கு ஏற்பட்ட முதலாவது, ‘சேதத்துடன் கூடிய’ தோல்வி.

இதில் உயிரிழந்த சுமார் 40 புலிகளைவிட, அந்த இயக்கத்துக்கு ஏற்பட்ட பெரிய சேதம் என்ன தெரியுமா?

இந்த சண்டை பற்றி மீடியாக்களில் வெளியான அரைகுறை செய்திகள்தான்! (அல்லது பாதி மறைக்கப்பட்ட செய்திகள்)

இறுதி யுத்தத்தில் நடந்துகொண்டிருந்தபோது மீடியாக்களில் வெளியான செய்திகளை நீங்கள் படித்திருக்கலாம். யுத்தம் முடிவதற்கு சில வாரங்களுக்கு முன்புவரை, விடுதலைப் புலிகள் ஜெயித்துக் கொண்டு இருப்பது போன்ற செய்திகளே தமிழ் மீடியாக்களில் வெளியானதை கவனித்திருக்கலாம்.

ஆனால் திடீரென, எல்லாமே தலைகீழாக மாறின. புலிகள் முள்ளிவாய்க்கால் பகுதியில் முடக்கப்பட்டார்கள் என்ற செய்தி வெளியானது.

இதனால் ஏற்பட்ட குழப்பங்கள் ஏராளம். ஆரம்பத்தில் இருந்து செய்திகளை படித்துக் கொண்டிருந்த பலருக்கு, யுத்தத்தின் போக்கு தலைகீழாக மாறியதில் மனதில் ஏற்பட்ட தாக்கம் பெரியது. சிலர் அந்த தாக்கத்தில் இருந்து இன்னமும் விடுபடவில்லை. வேறு சிலரின் வாழ்க்கையே மாறியது.

ஆனால் நிஜத்தில், யுத்தத்தின் போக்கு தலைகீழாக மாறவில்லை. இறுதி யுத்தம் ஆரம்பத்தில் இருந்தே (சுமார் 4 அல்லது 5 சந்தர்ப்பங்களை தவிர) புலிகளுக்கு சாதகமற்ற நிலையிலேயே போய்க்கொண்டு இருந்தது.

ஆனால் வெளியே காண்பிக்கப்பட்ட பிம்பம் வேறு. 90 சதவீத தமிழ் மக்கள் நம்பியதும் அதைத்தான்.

இந்த நிலை, அநேக தமிழ் மீடியாக்களால் ஏற்பட்டது, அல்லது ஏற்படுத்தப்பட்டது.

விடுதலைப்புலிகளின் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பது, வெளியே தெரியாத மூடுமந்திரமாக இருப்பதன் காரணம் அதுதான். யுத்தம் முடிந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதை பலரும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இருப்பதன் காரணமும் அதுதான்.

யுத்தத்தில் தமது மகனையோ, மகளையோ, சகோதரனையோ, சகோதரியையோ இழந்த பலருக்கு, அவர்கள் ஏன் இறந்தார்கள், எப்படி இறந்தார்கள் என்பது தெரியாது! யுத்தம் தோல்வியில் முடிந்தது ஏன் என்று தெரியாது. யுத்தத்தில் என்ன நடந்தது என்பதும் தெரியாது. 30 வருடங்களுக்கு மேல் பலமான நிலையில் இருந்த விடுதலை புலிகள் இயக்கம், திடீரென சுவிட்ச் போட்டதுபோல காணாமல் போனது ஏன் என்ற காரணமும் தெரியாது.

யுத்தத்தால் இழப்புகளை சந்தித்தவர்களுக்கு, அதற்கான காரணத்தை தெரிந்துகொள்வது அனைத்து உரிமைகளும் உள்ளன. ஆனால், எங்கிருந்து, யாரிடமிருந்து தெரிந்து கொள்வது?

கிழக்கில் நடந்த யுத்தம் பற்றிய இந்த அத்தியாயத்தில், அதிலிருந்து சற்றே விலகி, இந்த யுத்தம் பற்றிய செய்திகளை தமிழ் மீடியாக்கள் ஏன் அரைகுறையாக தந்தன என்பதை பார்த்துவிட்டு செல்லலாம்.

அத்தியாயத்தின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட செல்வநகரில் நடந்த சண்டையையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

மறுநாள் வன்னியில் இருந்து இந்த யுத்தம் பற்றிய தகவல்கள் தமிழ் மீடியாக்களுக்கு கொடுக்கப்பட்டன (தகவல் கொடுத்தவர் இன்னமும் இலங்கையில் இருக்கிறார்). அதில், செல்வநகர் சண்டையின் முதல் பகுதிதான் கொடுக்கப்பட்டது.

அதாவது, “ரோந்து வந்த ராணுவத்தினரை புலிகள் மறைந்திருந்து தாக்கியதில் இரு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மற்றைய ராணுவத்தினர் மறைவிடங்கள் தேடி ஓடினர்” என்பதுதான் செய்தி.

அதன்பின் மற்றொரு டீம் வந்து சுட்டதில் 40 புலிகள் உயிரிழந்த தகவல், மறைக்கப்பட்டது. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செய்திப் பிரிவு, அந்த தகவலை வெளியிட்டது. ஆனால், “அதெல்லாம் பொய் பரப்புரை” என்றன தமிழ் மீடியாக்கள்.

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி, வன்னியில் இருந்த பொதுமக்களும் அதை நம்பினார்கள்.

துதான், யுத்தத்தின் இறுதிப் பகுதிவரை நடந்தது. “கிழக்கு மாகாணத்தில் புலிகள் தாக்கியதில் ராணுவத்துக்கு பலத்த சேதம், ராணுவம் பின்வாங்கி ஓடியது” என்று தமிழ் மீடியாக்களில் தினமும் செய்திகள் வெளியாகின. ராணுவம், கிழக்கு மாகாணத்தை முழுமையாக கைப்பற்றிவிட்டு, வடக்கே வன்னிவரை வந்தது.

“மன்னாரில் புலிகள் போட்டுத் தாக்குகிறார்கள், ராணுவம் அலறுகிறது” என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ராணுவம் மன்னார் மாவட்டத்தையே கைப்பற்றிவிட்டு, கிளிநொச்சி மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தனர். அதன்பின் மன்னார் மாவட்டம் பற்றி எந்த தமிழ் மீடியாவும் மூச்சு விடவில்லை.

‘மன்னாரில் அலறிய ராணுவம்’ எப்படி மன்னாரை கடந்து, கிளிநொச்சிவரை வந்தது என யாரும் கேள்வி கேட்டதில்லை.

இப்படியே ஒவ்வொரு இடமாக நடந்து, கிளிநொச்சியையும் கைவிட்டு புலிகள் முல்லைத்தீவுக்குள் வந்தபோது, ‘தந்திரோபாய பின்வாங்கல்’ என்றன தமிழ் மீடியாக்கள். “ராணுவத்தை முழுமையாக முல்லைத்தீவுக்குள் இழுத்துவிட்டு அடிக்கப் போகிறார்கள் புலிகள்” என்பதாக ஒரு மாயை தமிழ் மக்களிடையே உருவாக்கப்பட்டது.

இதில் தமிழ் ‘யுத்த ஆய்வாளர்களின்’ அட்டகாசங்கள், சொல்லி மாளாது. “இலங்கை ராணுவம் தோல்வியின் விளிம்பில் நிற்கிறது” என்பதே அவர்களது ஆய்வின் சாராம்சமாக முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது!

இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், வெளிநாட்டு தமிழ் மீடியாக்களில் வெளியான இந்த செய்திகள்தான் இணையதளங்கள் மூலமாக வன்னிக்குள் இருந்த புலிகளாலும் படிக்கப்பட்டன. புலிகளின் உயர்மட்ட தலைவர்களுக்கு, யுத்தத்தின் நிலைமை தெரிந்திருந்தது. ஆனால், புலிகள் உறுப்பினர்களில் இரண்டாம் மட்டமும் அதற்கு கீழும் இருந்தவர்களுக்கு யுத்தத்தில் என்ன நடக்கிறது என்று, வெளிநாட்டு தமிழ் மீடியாக்கள் வெளியிடும் செய்திகள் மூலமே தெரிய வேண்டியிருந்தது.

யுத்தத்தின் இறுதி நாட்களில், ராணுவத்தின் 55-வது படைப்பிரிவு கடற்கரையோரமாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் நகர்ந்து கொண்டிருக்க, 53-வது, 58-வது படைப்பிரிவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவை நோக்கி கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்க, 59-வது படைப்பிரிவு ஒட்டுசுட்டான் பகுதியை நெருங்கி விட்டது.

அப்போது யுத்தத்தில் நிலைமை அறிவதற்காக ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்த புலிகளின் இரண்டாம் மட்ட தலைவர் ஒருவரை போனில் தொடர்பு கொண்டோம். அவருக்கு தமது பகுதிக்கு அருகே ராணுவம் வந்துவிட்டது என்ற தகவலே தெரிந்திருக்கவில்லை. “ஒட்டுசுட்டானை ராணுவம் சூழ்ந்துவிட்டதே… நீங்கள் தாக்குதலை தொடங்கி விட்டீர்களா?” என நாம் விசாரித்தபோது அவர், “ராணுவம், மாங்குளம் பகுதியில் நிற்கிறது. அங்கே புலிகள் அவர்களை தடுத்து நிறுத்தி யுத்தம் புரிகிறார்கள்” என்றார்.

“எமக்கு கிடைத்த தகவலின்படி, ராணுவம் உங்களுக்கு மிக அருகே வரை வந்துவிட்டது” என்று நாம் கூறியதை அவர் நம்பவில்லை. ராணுவம் மாங்குளத்தில் நிற்பதாக அவர் கூறிய நேரத்தில், ஒட்டுசுட்டான் புலிகளின் காவலரணில் இருந்து வெறும் அரை கிலோ மீட்டர் தொலைவில் நின்றிருந்தது 59-வது படைப்பிரிவு.

ஒரே நாளில் ஒட்டுசுட்டான் ராணுவத்திடம் வீழ்ந்தது.

யுத்தம் முடிவுக்கு வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புவரை, வெளிநாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில், “புலிகள் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள், அல்லது, தந்திரமாக ராணுவத்துக்கு வலை விரிக்கிறார்கள்” என்ற நம்பிக்கையை மீடியாக்கள் ஏற்படுத்தி வைத்திருந்தன. எந்த தமிழ் மீடியாவும், ராணுவத் தரப்பில் இருந்தும் செய்திகளை பெற்றதாக நாம் அறியவில்லை.

நாம் புலிகளிடம் தகவல் பெற்றதுபோல, ராணுவத்துடனும் தொடர்பில் இருந்தோம். இரு தரப்பு செய்திகளையும், வேறு சில வழிகளில் உறுதி செய்துகொண்டபின், ரியாலிட்டியை எழுதியதில், நம்மவர்கள் சிலரிடம் இருந்து எமக்கு ‘துரோகி’ பட்டம் துரிதமாக வந்து சேர்ந்தது.

2008-ம் ஆண்டு இறுதியில் நடந்த சம்பவம் ஒன்று.

அதுவரை தொடர்ந்து பின்வாங்கிக் கொண்டிருந்த புலிகள், ராணுவம் கிளிநொச்சியை வந்து அடைந்ததும், திருப்பித் தாக்குவார்கள். யுத்தத்தின் திருப்புமுனை அதுதான் என தமிழ் மீடியாக்கள் கூறிக்கொண்டு இருந்தன.

2008 டிசெம்பர் இறுதி வாரத்தில் ராணுவத் தரப்பில் இருந்து எமக்கு கிடைத்த தகவலின்படி, 57-வது படைப்பிரிவு, கொக்காவில், அக்கராயன்குளம் பகுதிகளை கைப்பற்றிவிட்டு, வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அதிரடிப் படைப்பிரிவு-1 (பின்னாட்களில் 58-வது படைப்பிரிவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது) கிளிநொச்சியை நெருங்காமல் பூநகரியில் இருந்து பரந்தனை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அவர்கள் பரந்தனை கைப்பற்றிவிட்டு, தெற்கு நோக்கி திரும்பினால், வடக்கே அதிரடிப் படைப்பிரிவு-1, தெற்கே 57-வது படைப்பிரிவு என பாக்குவெட்டிக்குள் சிக்கிய பாக்கு போன்ற நிலை கிளிநொச்சிக்கு ஏற்படும்.

இந்த நிலையில் எமது புலிகள் தரப்பு சோர்ஸ் ஒன்றிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, புலிகள் தமது ஆட்டிலரி பீரங்கிகள் சிலவற்றை கிளிநொச்சியில் இருந்து கிழக்கு நோக்கி நகர்த்துகிறார்கள் என தெரியவந்தது. புலிகள் அவற்றை புதுக்குடியிருப்பு நோக்கி கொண்டு செல்கிறார்கள் என ஊகித்தோம்.

அந்த நாட்களில் எமது பத்திரிகை (பரபரப்பு வீக்லி) செவ்வாய்க்கிழமைகளில் கனடாவில் வெளியாகும். 2008 டிசெம்பர் 30-ம் தேதி வெளியான பத்திரிகையின் கவர் ஸ்டோரி, ‘அடுத்த சில தினங்களில் ராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றும்’ எனறு வெளியானது.

செவ்வாய் கனடாவில் வெளியாகும் பரபரப்பு வீக்லி பத்திரிகை மறுநாள் புதன்கிழமை லண்டன், பாரிஸ், சூரிச் மற்றும் ஐரோப்பிய நகரங்களில் கிடைக்கும். டிசெம்பர் 30-ம் தேதி வெளியான பத்திரிகை லண்டனில் விற்பனைக்கு வந்தபோது, அதை விற்பனை செய்யும் சில வர்த்தக நிலையங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

எமது பத்திரிகையின் சில பிரதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. அவற்றை வாங்க கடைகளுக்கு சென்ற வாசகர்கள் தடுக்கப்பட்டனர்.

இந்த எதிர்ப்பு, இரு தினங்கள் (டிச.31, ஜன.1) மட்டுமே நீடித்தது. காரணம், ஜனவரி 2-ம் தேதி, கிளிநொச்சி நகரம், ராணுவத்திடம் வீழ்ந்தது.

இதுதான் மீடியாக்களின் நிலைமை! மற்றொரு சம்பவத்தை பாருங்கள்.

யுத்தத்தின் இறுதி நாளில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நந்திக்கடல் பகுதியில் கொல்லப்பட்டார் என்ற செய்தியை  இலங்கை அரசு அறிவித்தது. அதற்கு முதல் வாரம் வெளியான ‘ஒரு முக்கிய வீக்லி’ பத்திரிகையின் கவர் ஸ்ரோரி என்ன தெரியுமா? (தொடரும்)

ஈழப் போரின் இறுதி நாட்கள்: வன்னியில் புலிகளின் சில தளபதிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம் 9


இது நடந்த நேரத்தில், இலங்கை ராணுவம் உடனடி யுத்தம் ஒன்றுக்கு தயாராக இருக்கவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்த நேரம் அது. புலிகள் தாக்குதல் தொடுப்பார்கள் என ராணுவம் ஊகிக்கவில்லை. அதனால், புலிகள் தாக்குதலை தொடங்கிய உடனேயே, ராணுவம் அனைத்து இடங்களிலும் அலர்ட் ஆகவில்லை.

மூதூரில் புலிகள் நடத்திய தாக்குதலை சமாளித்து, தமது முகாம்களை மீட்கவே, ராணுவத்துக்கு 4 நாட்கள் பிடித்தது. புலிகளை மூதூரில் இருந்து வெளியேற்ற, 700 கடற்படையினரை மூதூருக்கு கொண்டுவர வேண்டியிருந்தது. அந்த நிலையிலும், அதற்கு அருகில் இருந்த ராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படவில்லை.

மூதூரில் இருந்து பின்வாங்க தொடங்கிய புலிகள் தோப்பூரில் இருந்த இலங்கை ராணுவத்தின் இலகு இன்ஃபென்டரி 7-வது படைப்பிரிவின் தலைமை கேம்ப் மீது தாக்குதல் நடத்தினர். மூதூரில் இருந்து பின்வாங்கிய புலிகள், எதற்காக தோப்பூர் வரை சென்றார்கள் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை.

செல்வநகர் ராணுவ முகாமில் இருந்த ராணுவத்தினர், புலிகள் தமது 152mm ஆட்டிலரி பீரங்கிகளை வீதியால் கொண்டு செல்வதை கண்டார்கள். அதை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்த தேவையான பலம், செல்வநகர் ராணுவ முகாமில் அப்போது இருக்கவில்லை. எனவே, பேசாமல் வேடிக்கை பார்த்துவிட்டு, இந்த தகவலை ராணுவ தலைமையகத்துக்கு அறிவித்ததோடு நிறுத்திக் கொண்டார்கள்.

இந்த நேரத்தில், தோப்பூர் ராணுவ முகாமுடன் அட்டாச்ட் ஆக இருந்த ராணுவ உளவுத்துறை ஆள் ஒரு தகவலை கொண்டு வந்தார்.

அப்போது தோப்பூர் இலகு இன்ஃபென்டரி 7-வது படைப்பிரிவு முகாமுடன் அட்டாச்ட்டாக ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்த இருவர் இருந்தனர். அவர்களில் செனிவிரட்ன என்பவர் ஒருவர். தமிழ் பேசக்கூடிய அவர், தோப்பூரில் வசித்த மக்கள் மத்தியில் நடமாடிக் கொண்டு இருந்தவர்.

இந்த செனிவிரட்ன ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என தோப்பூர் மக்கள் தெரிந்து கொண்டிருக்கவில்லை. ராணுவத்துக்கு உணவுப் பொருட்களை சப்ளை செய்யும் ஒரு கான்ட்ராக்ட் சப்ளையர் என்றே அவர் அங்கு அறியப்பட்டிருந்தார்.

புலிகள் மூதூரில் இருந்து முழுமையாக பின்வாங்கிய தினத்தன்று இரவு, அவர் ஒரு உளவுத் தகவல் கொண்டு வந்தார். அந்த தகவல் என்னவென்றால், தோப்பூருக்கு அருகேயுள்ள கிராமங்களில் இருந்த அனேக தமிழர்கள், தமது கிராமங்களை விட்டு வெளியேற தொடங்குகிறார்கள் என்பதே.

அவர்களிடம் விசாரித்தபோது, “மூதூரில் சண்டை நடந்ததுபோல இங்கும் நடக்கலாம் என்ற ஊகத்தில் வெளியேறுகிறோம்” என்ற பதில் வந்ததாம். அதற்கு செனிவிரட்ன கொடுத்த விளக்கம், “இவர்கள் ஊக அடிப்படையில் வெளியேறவில்லை. இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்த போகிறோம் என்று புலிகள் இவர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்”

இந்த தகவலும், கொழும்பில் இருந்த ராணுவ தலைமையகத்துக்கு போய் சேர்ந்தது. அவர்கள் அங்கே இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன், கிழக்கு மாகாணத்தில் சம்பவங்கள் கடகடவென நடக்க தொடங்கின.

செனிவிரட்ன தகவல் கொண்டுவந்த மறுநாளே, கட்டப்பறிச்சான் ராணுவ முகாமின் காவலரண் (சென்ட்ரி) மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். இந்த காவலரண் கட்டப்பறிச்சான் ராணுவ முகாமுக்கு வெளியேயுள்ள சிறிய பாலம் ஒன்றில் இருந்தது.

அந்த தாக்குதலில், காவல் பணியில் இருந்த சில ராணுவத்தினர் காயமடைந்தனர். அதையடுத்து, காவலரணை கைவிட்டுவிட்டு, முகாமுக்குள் ஓடி வந்தார்கள் அவர்கள்.

அது நடந்தபோது, தோப்பூர் இலகு இன்ஃபென்டரி 7-வது படைப்பிரிவு ராணுவ முகாமின் பொறுப்பு அதிகாரியாக இருந்தவர், லெப். கர்னல் செனகா விஜேசூர்யா.

பழைய சம்பவங்களை யுத்தம் முடிந்தபின் நினைவுகூர்ந்த விஜேசூர்யா, “யுத்த நிறுத்தம் முடிந்து, மீண்டும் யுத்தம் தொடங்குவதற்கான ஆரம்ப அறிகுறிகள் இவை என்பதை அந்த நிமிடத்தில் நான் புரிந்து கொண்டேன்” என்றார்.

“எமது காவலரண் தாக்கப்பட்ட விஷயத்தை ராணுவ தலைமையகத்துக்கு அறிவிப்பதற்கு முன்னர், எமது ராணுவ முகாமின் அதிகாரத்தில் கீழ் வந்த சிறிய ராணுவ முகாம்களுக்கு உடனடியாக ‘ரெட் அலர்ட்’ அனுப்பினேன். ‘எந்த நிமிடத்திலும் உங்கள் முகாம், புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகலாம். 24 மணி நேரமும் உஷாராக இருங்கள்’ என்ற எச்சரிக்கை கொடுத்துவிட்டே, தலைமையகத்துக்கு, காவலரண் தாக்கப்பட்டது பற்றி ரிப்போர்ட் செய்தேன்” என்றும் கூறினார் செனகா விஜேசூர்யா.

இவர் ரெட் அலர்ட் அனுப்பி சில மணி நேரத்தில், செல்வநகர் ராணுவ முகாமில் இருந்து, தோப்பூர் ராணுவ முகாம் ரேடியோ கன்ட்ரோல் ரூமுக்கு ஒரு தகவல் வந்தது
ரெட் அலர்ட் கிடைத்ததை அடுத்து, செல்வநகர் ராணுவ முகாமில் இருந்து சிறிய யூனிட்டை சேர்ந்த சிலர், ராணுவ முகாமுக்கு வெளியே ரோந்து செல்ல அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ராணுவ முகாமில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவுவரை சென்ற நிலையில், அவர்கள்மீது விடுதலைப் புலிகள் தாக்குகின்றனர்” என்பதுதான் அந்த மெசேஜ்.

இதையடுத்து செனகா விஜேசூர்யா, “அவர்களது உதவிக்கு மேலதிக ராணுவத்தினரை அந்த இடத்துக்கு அனுப்புங்கள்” என்ற உத்தரவை பிறப்பித்தார்.

அப்போது செல்வநகர் ராணுவ முகாமில் இருந்த ராணுவத்தினரின் மொத்த எண்ணிக்கை வெறும் 60 பேர்தான். அவர்களில் சுமார் 15 பேர் ரோந்து சென்றிருந்த நிலையில் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர். முகாமில் மீதமாக இருந்தவர்களில், மேலும் 15 பேர், தாக்குதல் நடந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலேயுள்ள தகவல்கள், ராணுவ தரப்பில் விசாரித்தபோது கிடைத்தவை. இதே நேரத்தில் புலிகள் தரப்பில் என்ன நடந்தது?

அப்போது, கிழக்கு மாகாணத்தில் இருந்த புலிகளில் ஓரிருவர், இப்போது கூறிய தகவல்களை பார்க்கலாம்.

மூதூர் ராணுவ முகாம், மூதூர் டவுன் ஆகியவற்றை புலிகள் கைப்பற்றியபோது, சுமார் 150 புலிகளே அந்த சண்டைகளில் ஈடுபட்டிருந்தனர். ராணுவ முகாமை தாக்குவதற்கு முதல், சம்பூரில் இருந்து ராணுவ முகாமை நோக்கி ஆட்டிலரி தாக்குதல்கள் நடத்தப் பட்டதால், ஒரே நாளில் ராணுவ முகாமும், டவுனும் புலிகளின் கைகளில் வீழ்ந்தன.

700 கடற்படையினரை தரையிறக்கிய பின், தொடர்ந்து நடந்த சண்டையில், புலிகளால் மூதூர் டவுனை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், மூதூரை கைவிட்டு பின்வாங்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம், தாக்குதல் நடந்து 2-ம் நாள், சம்பூரில் இருந்த புலிகள் ஆட்டிலரி தாக்குதல் நடத்துவதை நிறுத்தி விட்டனர். அதற்கான உத்தரவு, வன்னியில் இருந்து வரவில்லை. வன்னியில் இருந்து வந்த ஒரே உத்தரவு, “தற்போது எங்கெங்கே இருக்கிறீர்களோ, அந்தந்த இடங்களை விட்டு நகராமல், அவற்றை தக்க வைத்துக் கொள்ளுங்கள்” என்பதே.

இதனால், மூதூரில் கடற்படையினரின் எண்ணிக்கை 700க்கும் அதிகமாக உள்ள நிலையில், மேலதிக போராளிகளை சம்பூரில் இருந்து, மூதூருக்கு அனுப்பவில்லை. வெடிப்பொருள் சப்ளையும் அங்கிருந்து வராது என்று தெரியவந்தது. இதனால், மூதூரை முழுமையாக கைவிட்டு பின்வாங்கும் முடிவு எடுக்கப்பட்டது.

அப்படி பின்வாங்கியபோது, அருகில் உள்ள மினி ராணுவ முகாம்களை தாக்குவது என்ற முடிவு, ஆன்-த-ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவு எங்கிருந்தும் வரவில்லை. இந்த 150 பேரும், தமக்கிடையே அணி அணியாக பிரித்துக்கொண்டு, சிறு ராணுவ முகாம்களை தாக்க கிளம்பினர்.

அப்படிக் கிளம்பிய அணிகளில் ஒன்றுதான், கட்டப்பறிச்சான் ராணுவ முகாமின் காவலரண் மீது தாக்குதல் நடத்தியது. மற்றொரு அணி, செல்வநகர் ராணுவ முகாமில் இருந்து ரோந்து செய்ய கிளம்பிய 15 பேர் அடங்கிய ராணுவ அணியை தாக்கியது.

கிழக்கு மாகாணத்தில் இப்படியாக சண்டை தொடங்கி நடந்து கொண்டிருக்க, கிழக்கில் உள்ள புலிகளுக்கு உத்தரவு கொடுக்க வேண்டிய வன்னியில் என்ன நடந்து கொண்டிருந்தது?

அப்போது கிழக்கு மாகாண புலிகளுடன் தொடர்பை வைத்திருந்த வன்னியில் இருந்த புலிகள், இப்போது கூறிய தகவல்களை பார்க்கலாம்.

கிழக்கு மாகாணத்தில் சண்டை நடந்த விபரங்கள் வன்னிக்கு ரேடியோ மூலம் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. “மூதூரை கைவிட்டு பின்வாங்குகிறோம்” என்ற தகவல் வன்னியை வந்தடைந்தபோது, புலிகளின் தளபதிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.

அந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கையில், “கட்டப்பறிச்சான் ராணுவ முகாம் மீது தாக்குகிறோம்” என்று ஒரு தகவல் வந்தது.

இந்த தகவல் வன்னியில் இருந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம், அப்படியொரு உத்தரவு வன்னியில் இருந்து போகவில்லை.

“தாக்குதலில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளீர்கள்?” என்று வன்னியில் இருந்து கேட்கப்பட்டபோது, சுமார் 20 பேர் கட்டப்பறிச்சானில் நிற்பதாக தகவல் வந்தது.

“மூதூரில் சுமார் 150 பேர் இருந்தீர்களே.. இப்போது கட்டப்பறிச்சானில் 20 பேர் நின்றால், மீதி ஆட்கள் எங்கே?” என்று கேட்கப்பட்டபோது கிழக்கில் இருந்து வந்த பதில், “மீதி ஆட்கள் வெவ்வேறு அணிகளாக செல்வநகர், பன்சால்வத்த, 64-வது மைல் போஸ்ட் ராணுவ முகாம்களை தாக்க போயிருக்கிறார்கள்” என்ற பதில் வந்தது.

இந்த தகவலும், வன்னியில் இருந்தவர்களுக்கு புதிதாக இருந்தது! எங்கிருந்து இந்த உத்தரவுகள் போகின்றன என்ற குழப்பம், புலிகளின் தளபதிகள் சிலருக்கு ஏற்பட்டது.

வன்னியில் அப்படியொரு குழப்ப நிலை இருக்க, சண்டை நடந்த கிழக்கில் நடந்தது என்ன?

செல்வநகரில் தாக்கிய புலிகளின் அணி, வீதியோரங்களில் இருந்த பில்டிங்குகளில் (சிறிய கடைகள்) மறைந்து நின்றபடி தாக்குதல் நடத்தியபோது, வீதியில் வந்த ராணுவம் அடி வாங்கியது. இரண்டு பேர் அந்த இடத்தில் கொல்லப்பட, வேறு சிலர் காயமடைந்தனர். இதையடுத்து ராணுவத்தை சேர்ந்தவர்கள் மறைவிடங்களுக்குள் பாய்ந்து கவர் எடுத்துக் கொண்டனர்.

வீதியில் இருந்து ராணுவம் மறைந்துவிட, தமது மறைவிடங்களில் இருந்து வெளியே வந்த புலிகள் ராணுவம் பாய்ந்து மறைந்த இடங்களை நோக்கி சுட்டபடி முன்னேறினர்.

இந்த நிலையில்தான், நாம் மேலே குறிப்பிட்டது போல, செல்வநகர் முகாமில் இருந்து மேலதிகமாக 15 பேர், தாக்குதல் நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தாக்குதல் நடந்த இடத்துக்கு வந்தபோது, புலிகளின் நின்றிருந்த இடத்துக்கு பின்புறமாக வந்து சேர்ந்தனர்.  துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்த புலிகளை மிக தெளிவாக பார்க்க முடிந்தது.

புதிதாக வந்த ராணுவ அணி, உடனே சுடத் தொடங்கியது. அந்த நிமிடத்தில் இருந்து அங்கு, சண்டையின் போக்கு மாறியது. (தொடரும்)

ஈழப் போரின் இறுதி நாட்கள்: புலிகள் தாக்குதல் நடத்த மூதூரில் உத்தரவிட்டது யார்? 8


மூதூர் கடற்படை தளத்தை கைப்பற்ற விடுதலைப் புலிகள் செய்த முயற்சியை ஒரு ஒற்றை மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர் தடுத்து நிறுத்தியதை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். மறுநாள் காலை கடற்படையை சேர்ந்த 700 பேர் கடல் மார்க்கமாக வந்து சேரும்வரை, இந்த ஒற்றை மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர், கடற்படை தளம் புலிகளின் கைகளில் விழாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

மூதூர் கடற்படை தளத்துக்கு கடல்வழியாக வந்திறங்கிய 700 கடற்படையினரும், ஒரே ஷாட்டில் வரவில்லை. ஐந்து பிரிவுகளாக, வெவ்வேறு நேரங்களில் வந்து இறங்கினார்கள்.

அதில் முதலாவது செட் கடற்படையினர் வந்து மூதூரில் தரையிறங்கியபோது, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியான சம்பூரில் இருந்து தாக்குதல் நடத்துவதா என்பதில் அங்கிருந்த விடுதலைப் புலிகளிடையே குழப்பம் நிலவியது. காரணம், வன்னி தலைமையில் இருந்து தெளிவான உத்தரவுகள் ஏதும் வரவில்லை.

இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும். மூதூர் மீது முதலில் தாக்குதல் தொடுத்தபோது, லோக்கலில் இருந்த புலிகளின் தளபதிகள் தாங்களே முடிவு எடுத்து தாக்க தொடங்கினார்கள். மூதூர் ராணுவ முகாமையும், மூதூர் டவுனையும் கைப்பற்றியது அப்படித்தான். அதன்பின், கடற்படை தளத்தை கைப்பற்றும் நோக்குடன் தாக்க தொடங்கினார்கள்.

அதுவரை புலிகள் தரப்பில் பெரிதாக சேதம் ஏதுமில்லை. அதனால், தாக்குதல் அதுபாட்டுக்கு நடந்து கொண்டிருந்தது.

ஆனால், மூதூர் கடற்படை தளத்தில் இருந்து ஒரு ஒற்றை மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர் சம்பூரை நோக்கி வெடிக்க தொடங்கியபோது, சம்பூரில் புலிகளுக்கு கணிசமான அளவில் அழிவுகள் ஏற்பட தொடங்கின. அதுவும், கடற்படையின் மல்ட்டி பேரல் ராக்கெட் லோஞ்சர், இரவு முழுவதும் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ராக்கெட்டுகளை ஏவிக்கொண்டு இருந்தது.

இந்த நிலையில் சம்பூரில் இருந்த புலிகளின் பொறுப்பாளர், வன்னியில் இருந்த தமது தொடர்பாளரை தொடர்புகொண்டு, அடுத்து என்ன செய்வது என்று கேட்டார். சம்பூரில் கணிசமான அளவில் அழிவுகள் ஏற்பட்டதால், மேலிட அனுமதியுடன் மீதியை தொடர்வது என சம்பூரில் முடிவு செய்யப்பட்டதே இதற்கு காரணம்.

ஆனால், வன்னியில் இருந்த தொடர்பாளரால் சரியான பதில் கொடுக்க முடியவில்லை. அதன்பின் விடுதலைப் புலிகளின் தளபதி சொர்ணத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், “மேலிடத்தில் கேட்டு சொல்கிறேன். அதுவரை தற்போது பிடித்த இடங்களை விடாமல் வைத்திருங்கள்” என்றார்.

கடற்படையினர், மூதூர் கடற்படை தளத்தில் வந்து இறங்க தொடங்கியபோது, “அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா” என, மீண்டும் சொர்ணத்திடம் கேட்கப்பட்டது. அதற்கும், “மேலிடத்தில் கேட்டு சொல்கிறேன்” என்ற பதில்தான் கிடைத்தது.

ஏன் இந்த குழப்பம்? அப்போது வன்னியில் இருந்த தளபதிகள் இருவரிடம் சமீபத்தில் இதுபற்றி கேட்டபோது, “கிழக்கில் என்ன செய்வது என்பதில் வன்னி தலைமைக்கு குழப்பம் இருந்தது உண்மை” என்றார்.

என்ன காரணம்?

அந்த முன்னாள் தளபதி தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், மாவிலாறு அணைக்கட்டை மூடும் உத்தரவு, வன்னியில் இருந்து போகவில்லை. அணைக்கட்டு மூடப்பட்டபின் ஏற்பட்ட மோதல்கள்தான், சில ஆண்டுகள் இடம்பெற்ற யுத்த நிறுத்தத்தின் பின் தொடங்கிய முதலாவது யுத்தமாக மாறியது. அதாவது, அந்த யுத்தம் முன்கூட்டியே திட்டமிடப்படாமல், இயல்பாகவே தொடங்கிவிட்டது.

அது அப்படியே தொடர்ந்து, மூதூர் ராணுவ முகாமையும், டவுனையும் கைப்பற்றும் அளவுக்கு போய் விட்டது. இவை அனைத்துமே கடகடவென ஓரிரு நாட்களுக்குள் நடந்துவிட்டன. அதன்பின் என்ன செய்வது என்று திட்டம் ஏதுமில்லை.

மூதூர் கடற்படை தளத்தில் கடற்படை 700 பேரை தரையிறக்க தொடங்கிய தகவல் கிடைத்ததும், வன்னியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது
லிகளின் தலைவர் பிரபாகரன், தமிழ்செல்வன், சூசை, பொட்டம்மான் உட்பட வேறு சில தளபதிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், சொர்ணம் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அவருடைய ஆலோசனை கேட்கப்பட்டது
ளபதி சொர்ணத்தின் கருத்து, “மூதூரை முழுமையாக பிடித்துவிட்டு, அதன்பின் என்ன செய்வது? அப்படியே தொடர்ந்து மற்றைய இடங்களை பிடிக்க முடியாதபடி உள்ளது அங்குள்ள புவியியல் தன்மை. மூதூரை முழுமையாக பிடித்தால், மூதூருக்கு உள்ளேதான் நிற்க வேண்டும். ராணுவம் மேலதிக படைப்பிரிவுகளுடன் வந்தால், பிடித்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள, சம்பூரில் இருந்துதான் போராளிகளை கொண்டுவர வேண்டும்.

அப்படி செய்தால், சம்பூரில் பலமிழக்க வேண்டியிருக்கும். ராணுவம் தாக்கினால், சம்பூரை இழக்க நேரிடும். மூதூரை கையில் வைத்திருப்பதைவிட, சம்பூரை கையில் வைத்திருப்பது நல்லது” என்ற ரீதியில் இருந்ததாம்.

மற்றொரு ஆப்ஷன், வன்னியில் இருந்து மேலதிக போராளிகளை கிழக்கே திரிகோணமலை மாவட்டத்துக்கு அனுப்புவது. அது சாத்தியம் இல்லை என தமிழ் செல்வன் சொல்ல, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு, “இப்போது அங்கே (கிழக்கில்) எந்தெந்த இடங்களில் (புலிகள்) நிற்கிறார்களோ, அங்கேயே நிற்கட்டும். நிலைமையை பார்த்து, பின்னர் முடிவு செய்யலாம்”

இதையடுத்தே, கிழக்கில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான உத்தரவு, வன்னியில் இருந்து போகவில்லை.

மூதூர் கடற்படை தளத்தில் வந்து இறங்கிய 700 கடற்படையினரும், எவ்வித எதிர்ப்பும் இன்றி வந்து இறங்க முடிந்தது. அங்கிருந்த புலிகள் மீது தாக்குதல் நடத்தினர் அவர்கள். மூதூரில் மொத்தம் 4 நாட்கள் சண்டை நடந்தது. அதன் முடிவில் அங்கிருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்க நேர்ந்தது.

மூதூரில் இருந்து பின்வாங்க தொடங்கிய புலிகள் பேசாமல் சம்பூருக்கு திரும்பியிருந்தால், மூதூரில் நடந்ததுடன் யுத்தம் ஒருவேளை முடிந்திருக்கலாம். அப்போது யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தது. யுத்த நிறுத்த கண்காணிப்பு (வெளிநாட்டு) குழுவும் கிழக்கு மாகாணத்தில் இருந்தது. இதனால், ஒரு பேச்சுவார்த்தை மூலம், மீண்டும் அவரவர் இடங்களில் இருந்திருக்கலாம்.

ஆனால், அப்படி நடக்கவில்லை.

மூதூரில் இருந்து பின்வாங்க தொடங்கிய புலிகள், அதற்கு அருகில் உள்ள மற்றைய இடங்களில் தாக்குதல்களை நடத்த தொடங்கினார்கள். இதற்கு யார் உத்தரவு கொடுத்தார்கள் என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகிறது. ஆனால், இந்த நடவடிக்கைதான், கிழக்கு மாகாணத்தில் சண்டை பெரிதாக வழிவகுத்தது.

இலங்கை ராணுவத்தின் இலகு இன்ஃபென்டரி 7-வது படைப்பிரிவின் தலைமை கேம்ப், தோப்பூரில் இருந்தது. மூதூரில் இருந்து பின்வாங்க தொடங்கிய புலிகள் அந்த கேம்ப் மீது தாக்குதல் நடத்தினர். மூதூரில் இருந்து பின்வாங்கியவர்கள் எதற்காக தோப்பூர் வரை சென்றார்கள் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை.

தோப்பூர் மீது தாக்குதல் நடத்திய அதே நேரத்தில், அதற்கு அருகில் உள்ள ராணுவ முகாம்களை நோக்கியும் புலிகள் சிறுசிறு குழுக்களாக செல்ல தொடங்கினார்கள்.

தோப்பூருக்கு அருகே வேறு 4 இடங்களில், ராணுவத்தின் மினி முகாம்கள் இருந்தன. அந்த இடங்கள்: செல்வநகர், பன்சால்வத்த, 64-வது மைல் போஸ்ட், கட்டபறிச்சான். இவை மினி ராணுவ முகாம்கள் என்று குறிப்பிட்டோம். இவற்றில் அதிக ஆட்பலம் கிடையாது. உதாரணமாக, புலிகள் தாக்க சென்றபோது கட்டபறிச்சான் முகாமில் வெறும் 45 ராணுவத்தினரே இருந்தனர். மற்றைய முகாம்களிலும் அப்படித்தான்.

செல்வநகர் ராணுவ முகாமில் இருந்த ராணுவத்தினர், மற்றொரு காட்சியை கண்டார்கள்.

புலிகள் தமது 152mm ஆட்டிலரி பீரங்கிகளை வீதியால் கொண்டு செல்வதை அவர்களால் பார்க்க முடிந்தது. அந்த ஆட்டிலரி பீரங்கிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க கடற்புலிகளின் படகுகள், கடலேரியில் பீரங்கிகள் செல்லும் திசையிலும், வேகத்திலும் நகர்ந்து கொண்டிருந்தன. (தொடரும்)

ஈழப் போரின் இறுதி நாட்கள்: இலங்கை ராணுவம் திறமை ஏதும் இல்லாமலே ஜெயித்தார்களா? 7


மூதூர் கடற்படை தளத்தில் இருந்த மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சரை (MBRL) கடற்படை பயன்படுத்தலாம் என்று தெரியவந்தவுடன், உடனே கடற்படை தளபதி வசந்த கரணகொட தொடர்பு கொண்டது, கடற்படை உளவுப்பிரிவின் திரிகோணமலை தளபதியை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.

அந்தக் காரணம் என்னவென்றால், இது நடந்த காலத்தில், இலங்கை ராணுவத்துக்கும், கடற்படைக்கும் லேசான உரசல் இருந்தது (இதை அவர்கள் தற்போது ஒப்புக்கொள்கிறார்கள்). கடற்படை தளங்களை விடுதலைப்புலிகள் தாக்கும்போது, ராணுவம் பெரிதாக உதவிக்கு வருவதில்லை. அதே நேரத்தில், அந்த தாக்குதல்களின் போது கடற்படை விடுதலைப் புலிகளை திருப்பி தாக்கினால், அதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவிக்கும்.

“கடற்படையின் ஏரியா கடலில்தான். தரையில் தாக்குதல் நடத்துவது ராணுவத்தின் பொறுப்பு. அப்படியிருக்கையில் கடற்படை தரையில் உள்ள விடுதலைப் புலிகளின் இலக்குகளை தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என ராணுவம் போர்க்கொடி தூக்கும்.

அப்போது கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரணகொட, “சுருக்கமாக சொன்னால், கடற்படை மீது தரையில் தாக்குதல் நடத்தினால், அவர்கள் (ராணுவம்) உதவிக்கு வர மாட்டார்கள். ஆனால், நாங்கள் (கடற்படை) தரையை நோக்கி திருப்பி தாக்கினால், அடுத்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், தமது உரிமையை நாம் பறித்துக் கொண்டதாக புகார் செய்வார்கள்” என பழைய நடைமுறையை நினைவுகூர்கிறார்.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதி யுத்தம் புலிகளுக்கு தோல்வியில் முடிந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் பல காரணங்களை தமிழ் மீடியாக்கள் எழுதுவதில்லை (எழுத விரும்புவதில்லை, அல்லது விஷயம் தெரியாது)

விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வெல்லும் வகையில் இலங்கை ராணுவத்தில் திறமைசாலிகள் இருந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள அநேக தமிழ் மீடியாக்களின் வீம்பு விடுவதில்லை.

“புலிகள் தோற்றது எப்படி?” என்று கேட்டால், 64 நாடுகள் ஒன்று சேர்ந்து புலிகளை அழித்தார்கள் என்று ஒரு கணக்கு சொல்வார்கள். அதெல்லாம் கப்சா. ஆப்கானில் அமெரிக்கப் படைகள் நேட்டோ நாடுகளின் ராணுவங்களுடன் இணைந்து யுத்தம் புரிந்ததுபோல இலங்கையின் இறுதி யுத்தம் நடக்கவில்லை.

களமுனைகளில் நின்றது, இலங்கை படைகள் மட்டுமே. (இந்திய ராணுவமும் போர்முனையில் நின்றது என்ற கதையில், நாம் அறிந்தவரை உண்மை கிடையாது)

சில நாடுகள் வெவ்வேறு விதங்களில் உதவின. ஆயுதங்கள் கொடுத்தன. இந்தியா உட்பட சில நாடுகள் தொழில்நுட்ப உதவிகளை செய்தனர். உளவுத் தகவல்களை அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. உட்பட சில உளவுத்துறைகள் கொடுத்தன. இறுதி யுத்த நாட்களில் எப்படி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற ஆலோசனை, வெளிநாடு ஒன்றால் கொடுக்கப்பட்டது. (அதை அந்த நாடு, எந்த காலத்திலும் வெளியே சொல்லாது)

என்ன உதவிகள் கிடைத்தாலும், அவற்றை வைத்துக்கொண்டு, 30 ஆண்டுகள் யுத்த அனுபவம் கொண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிராக  யுத்தம் புரிய திறமை வேண்டும். அப்படியான திறமைசாலிகள் இலங்கை ராணுவத்திலும் இருந்தார்கள் என ஒப்புக்கொள்வது, தமிழ் மீடியாக்கள் மத்தியில் வலியப் போய் துரோகி பட்டம் வாங்குவதற்கு சமம்.

எதிராளியின் திறமையை குறைத்து மதிப்பிடும் யாரும் ஜெயித்ததாக சரித்திரமில்லை. எதிராளியின் திறமையை சரியாக புரிந்து வைத்திருப்பது, பிளஸ் பாயின்டே தவிர, மைனஸ் இல்லை.

இந்த தொடரில், பிளஸ் விரும்பியவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள், மைனஸ் வேண்டுமென்றால், அதை வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த விவகாரத்தை நாம் ஏன் குறிப்பிட்டோம் என்றால், இலங்கை பாதுகாப்பு படைகளில் இருந்த மிகத் திறமைசாலிகளில் ஒருவர், நாம் மேலே குறிப்பிட்ட வசந்த கரணகொட என்பதை கூறுவதற்குதான். இஷ்டமென்றால், ஏற்றுக்கொள்ளுங்கள். ஜீரணிக்க முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்தோனேசிய கடல் பகுதியில் ஒவ்வொன்றாக மூழ்கடித்த ஆபரேஷனின் பிரதான திட்டமிடலாளரே இந்த வசந்த கரணகொட என்று ஏற்கனவே எழுதியிருந்தோம். இலங்கை கடற்படையை ஆழ்கடல் ஆபரேஷனுக்கு ஏற்ற வகையில் மாற்றியவர் இவர்தான். ஒரே ஆண்டில் புலிகளில் 8 கப்பல்களை அழித்தவரும் இவர்தான்.
இறுதி யுத்தத்துக்கு முன் நடந்த ஈழ யுத்தங்களில் விடுதலைப் புலிகள் தரையில் அடைந்த பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவற்றில் முக்கியமானவை இரண்டு. ஒன்று, யுத்தம் நடக்கையில் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த ஆயுத சப்ளை. இரண்டாவது, புலிகளின் கடற்படையான கடல் புலிகள் கொடுத்த பக்க உதவி.

karanagoda-20131028-2இறுதி யுத்தத்தின்போது, இவை இரண்டையும் உடைத்தவர், இந்த வசந்த கரணகொடதான் (அருகே போட்டோவில் உள்ளவர்).

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவத்தின் இறுதி யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி முடிவுக்குவர, அட்மிரல் வசந்த கரணகொட, இரண்டு மாதங்களில் இலங்கை கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஜப்பானில் இலங்கைக்கான தூதராக பணிபுரிகிறார்.

இறுதி யுத்தத்தின்போது நடந்தவற்றை அறியும் முயற்சியில் இவரிடம் தகவல்கள் பெற்றபோது, இவரது ராணுவப் பின்னணி ஆச்சரியமூட்டியது. கல்வித் தகுதியில், ராணுவ கல்வியில் MSc, MBA பட்டதாரி. இவரது MBA பட்டம் எதில் தெரியுமா? Defence Studies பாடத்தில்.

ராணுவ ரீதியான இவரது கல்வித்தகுதிகள் முழுவதுமே வெளிநாடுகளின் இருந்து பெறப்பட்டவை. அமெரிக்கா, வாஷிங்டன் National Defense University, பிரிட்டனின், Royal Naval Staff College, மற்றும், அமெரிக்கா, ஹவாய், Asia-Pacific Center for Security Studies ஆகியவற்றின் ராணுவ பட்டதாரி.

இவரது இந்தப் பின்னணிதான், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வின் உதவியை இலங்கை கடற்படை பெற பெரிதும் காரணமாக இருந்தது.

இனி, தொடரை விட்ட இடத்துக்கு செல்லலாம். இறுதி யுத்தம் நடந்தபோது, திரிகோணமலை பகுதியில் இலங்கை ராணுவத்துக்கும், கடற்படைக்கும் லேசாக முறுகல் நிலை இருந்த காரணத்தால், ராணுவ உளவுத்துறையும், கடற்படையை கண்டுகொள்வதில்லை. அதனால், கடற்படையின் உளவுத்துறை, தாமே சொந்தமாக தகவல்களை திரட்டி வைத்திருந்தது.

மூதூர் கடற்படை தளத்தில் இருந்த (ராணுவத்துக்கு சொந்தமான) மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சரை கடற்படை பயன்படுத்தலாம் என்று தெரியவந்தவுடன், வசந்த கரணகொட, கடற்படை உளவுத்துறையை தொடர்பு கொண்ட காரணம், அப்போது விடுதலைப் புலிகள் நிலைகொண்டிருந்த சம்பூர் பகுதியில், எங்கெல்லாம் அவர்களது ஆட்டிலரி பீரங்கிகள் உள்ளன என்ற தகவல், கடற்படை உளவுப் பிரிவுக்கு தெரிந்திருந்தது.

அந்த விபரங்களை வைத்து, அந்த இடங்களை நோக்கி மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர் தாக்குதல்களை நடத்தியது கடற்படை.

இந்த தாக்குதலை நடத்தாமல் இருந்திருந்தால், புலிகள் மூதூரை தாக்கிய முதல்நாள் இரவே, கடற்படைத் தளம் புலிகளின் கைகளில் விழுந்திருக்கும். அதையடுத்து, மூதூர் முழுவதும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருக்கும். அங்கிருந்து, திரிகோணமலை துறைமுகத்தை புலிகளால் முடக்க முடிந்திருக்கும்.

ஆனால், கடற்படை பயன்படுத்திய இந்த இரவல் (!) மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர், புலிகளின் அனைத்து திட்டங்களையும் சிதறடித்தது.

கடற்படை தளத்தில் இருந்து சம்பூரை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்டுகள், புலிகளின் ஆட்டிலரி பொசிஷன்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. அத்துடன் கடற்படை தளத்தில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை, ஒரு முறை சம்பூர் நோக்கியும், மறுமுறை திரிகோணமலை துறைமுகத்தின் வாய்ப் பகுதியை (the mouth of the harbour) நோக்கியும் என மாறி மாறி ராக்கெட்டுகள் மறுநாள் காலை வரை ஏவப்பட்டு கொண்டிருந்தன.

இதனால், புலிகளால் கடல் மார்க்கமாக மூதூரை அணுக முடியவில்லை. சம்பூரில் இருந்து மூதூர் நோக்கி ஆட்டிலரி தாக்குதல் நடத்தவும் முடியவில்லை.

மறுநாள் காலை கடற்படையை சேர்ந்த 700 பேர் கடல் மார்க்கமாக வந்து சேரும்வரை, இந்த ஒற்றை மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர், கடற்படை தளத்தை காப்பாற்றி விட்டது. இதில், கடற்படையை சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர்.

கடல்வழியாக வந்திறங்கிய 700 கடற்படையினரையும் குறிவைத்து புலிகள் மேற்கொண்ட தாக்குதல் ஒன்று வெற்றிபெறவில்லை. அதற்கு காரணம், சம்பூரில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு வன்னியில் இருந்து வந்த ஒரு உத்தரவு. அந்த விபரம் என்ன என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். (தொடரும்) 

ஈழப் போரின் இறுதி நாட்கள்: பிரபாகரனுக்கு தகவல் போகுமுன் திரும்பியது மல்டி பேரல்..6


ஆகஸ்ட் 3-ம் தேதி, மதியம் 2 மணிக்கு மூதூர் டவுன், முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. மூதூர் ராணுவ முகாம் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. கடற்படை தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். கடற்படை தளத்துட் ஒட்டியிருந்த போலீஸ் நிலையம், அந்த நிமிடம்வரை தாக்குதலுக்கு உள்ளாகவில்லை.

சுமார் 3 மணிக்கு மூதூர் கடற்படை தளத்தின் அதிகாரி கேப்டன் உதய பண்டார, கொழும்புவில் இருந்த கடற்படை தலைமையகத்துக்கு அபாய அறிவிப்பை அனுப்பினார். “எந்த நிமிடமும் கடற்படை தளம் புலிகளிடம் வீழ்ந்துவிடும். உடனடியாக உதவி தேவை”

அந்த எஸ்.ஓ.எஸ். மெசேஜ் அனுப்பப்பட்டு ஒரு மணி நேரத்தில், கொழும்புவில் இருந்து ஒரு தகவல் வந்தது. “ராணுவத்தின் கமாண்டோ படைப்பிரிவு ஒன்று வேகப் படகுகளில் வருகிறார்கள். அவர்கள் தரையிறங்க உதவி செய்யவும்”

இந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் கடற்படை தளத்தை நோக்கி உக்கிரமாக தாக்கிக் கொண்டிருந்தார்கள். கடற்படையினருக்கு கொடுக்கப்படும் பயிற்சிகள் பெரும்பாலும், கடல் தாக்குதல்கள் தொடர்பானவையே. அவர்கள் தரை தாக்குதல்களில் திறமைசாலிகள் அல்ல.

இதனால் புலிகளின் தாக்குதலை ‘ஏதோ சமாளித்தபடி’ ராணுவம் அனுப்பி வைக்கப் போகும் கமாண்டோ படைப் பிரிவுக்காக காத்திருந்தார்கள். கமாண்டோக்கள் வந்து சேரும்வரை தளம் புலிகளின் கைகளில் விழாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்பதே அவர்களது நினைப்பு.

கொழும்பு சொன்ன கமாண்டோ படைப்பிரிவு, மாலை 4.30க்கு மூதூர் ஜெட்டியில் (கடல் இறங்குதளம்) வந்து இறங்கியது. மொத்தம் 65 கமாண்டோ வீரர்கள் அந்த படைப்பிரிவில் இருந்தார்கள்.

இப்படியொரு படைப்பிரிவு வந்து இறங்குவதை கவனித்த புலிகள், மூதூர் ஜெட்டியை நோக்கி ராக்கெட் தாக்குதலை நடத்த தொடங்கவே, தரையிறங்க வந்த கமாண்டோக்களை கரைக்கு கொண்டு வருவதற்கு கடற்படையினர் திணற வேண்டியிருந்தது. ஒரு வழியாக 65 பேரும் கடற்படைத் தளத்துக்கு வந்து சேர்ந்தனர்.

அதன்பின் நடந்ததுதான், கடற்படையினர் எதிர்பாராத திருப்பம்!

வந்திறங்கிய கமாண்டோ படையணியினர், தாம் கடற்படை தளத்துடன் ஒட்டியுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு பாதுகாப்பு கொடுக்கவே அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.

இதனால், கடற்படை தளத்துக்கு பாதுகாப்பு கொடுக்க மறுத்துவிட்டு, போலீஸ் ஸ்டேஷனை சுற்றி பொசிஷன் எடுத்து நின்று விட்டார்கள். (அந்த நிமிடம்வரை, போலீஸ் ஸ்டேஷன் மீது எந்தவொரு தாக்குதலையும் புலிகள் மேற்கொள்ளவில்லை.)

இந்த சூழ்நிலை தமாஷான ஒன்று. கடற்படை தளம்மீது புலிகள் ஏவும் ராக்கெட்டுகள் வந்து பொழிந்து கொண்டிருக்கின்றன. அதை சமாளிக்க கடற்படையினர் திணறுகிறார்கள். ஆனால், புதிதாக வந்திறங்கிய கமாண்டோக்கள், போலீஸ் ஸ்டேஷனை சுற்றி நிற்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷன்மீது ஒரு சிங்கிள் ராக்கெட்கூட வந்து விழவில்லை.

கடற்படையினர் தாம் மீண்டும் ‘ஸ்கொயர் ஒன்’னுக்கு வந்து விட்டதை புரிந்து கொண்டனர். தமது தளம் புலிகளிடம் விழாமல் இருக்க வேண்டுமானால், தாம்தான் சொந்தமாக ஏதாவது செய்தேயாக வேண்டும்!

இப்படி எந்த நிமிடமும் கடற்படை தளம் விடுதலைப் புலிகளின் கரங்களில் விழுந்துவிடும் என்றிருந்த நிலையில், கடற்படை அதிகாரியாக இருந்த கேப்டன் உதய பண்டார, கடற்படை தளத்தின் காம்பவுண்டுக்குள் இருந்த ஒரு பல்குழல் ராக்கெட் லோஞ்சரை (MBRL – Multi Barrel Rocket Launcher) கவனித்தார்.

அந்த ராக்கெட் லோஞ்சர், கடற்படைக்கு சொந்தமானதல்ல. ராணுவம் (தரைப்படை) அங்கே கொண்டு வந்து நிறுத்தியிருந்தது. அதை இயக்குவதற்கு ஒரு ஆபரேட்டரையும், செலுத்தப்பட வேண்டிய ராக்கெட்டுகளையும் அங்கேயே வைத்திருந்தது. கடற்படை தளத்தில் இருந்த இந்த ராக்கெட் லோஞ்சரை, கடற்படையினர் அதுவரை கண்டுகொள்ளவில்லை. காரணம், அவர்களுக்கு அதை இயக்க பயிற்சி கிடையாது.

கடற்படை தலைமைச் செயலகத்தை அவசரமாக தொடர்பு கொண்ட உதய பண்டார, கடற்படை தளபதி வசந்த கரணகொடவிடம் பேசினார். “தரைப்படைக்கு சொந்தமான இந்த பல்குழல் ராக்கெட் லோஞ்சரை கடற்படையினர் பயன்படுத்த முடியுமா?” என்று கேட்டார்.

பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டுவிட்டு பதில் சொல்வதாக கூறினார் கடற்படை தளபதி வசந்த கரணகொட. (இது தொடர்பாக  அவர் தெரிவித்த சில பின்னணி விபரங்கள் சுவாரசியமானவை. அதை தனி பகுதியாக தருகிறோம்)
கடற்படை தரப்பு இப்படி குழப்பத்தில் இருக்க, கடற்படை தளம் மீது தாக்குதல் நடத்திய புலிகளும் குழப்பத்தில்தான் இருந்தார்கள்
மூதூர் மீதான தாக்குதலுக்கான முடிவு, லோக்கல் மட்டத்தில் எடுக்கப்பட்டது என்று கடந்த அத்தியாயத்தில் கூறியிருந்தோம். இந்த தாக்குதல் தொடங்கியபோது, விடுதலைப் புலிகளின் கிழக்கு பகுதி தளபதியாக இருந்த சொர்ணம் அங்கில்லை. மூதூர் ராணுவ முகாம் வீழ்ந்த தகவல் அவருக்கு வாக்கி-டாக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது.

அது கூறப்பட்ட சிறிது நேரத்தில், அடுத்த வாக்கி-டாக்கி மெசேஜ் சொர்ணத்துக்கு சென்றது. “மூதூர் டவுன் முழுமையாக எமது கைகளுக்கு வந்துவிட்டது. கடற்படை தளத்தை நோக்கி தாக்குதல் நடத்துகிறோம். அடுத்து என்ன செய்வது?”

இதற்கு சொர்ணம் சொன்ன பதில், “மேலிடத்தில் (வன்னியில் உள்ள தலைமை) கேட்டுவிட்டு சொல்கிறேன். அதுவரை இப்போது செய்வதையே தொடருங்கள்” என்பதுதான்.

மூதூர் ஜெட்டியில் இலங்கை ராணுவத்தின் கமாண்டோ படைப்பிரிவு வந்து இறங்கியபோது, அந்த தகவல் மீண்டும் சொர்ணத்துக்கு தெரிவிக்கப்பட்டது. “அவர்களை அடிக்கவா?”

இதற்கு சொர்ணத்தின் பதில், “மேலிடத்தில் இருந்து இன்னமும் பதில் வரவில்லை. உங்களுக்கு சரியென்று பட்டதை செய்யுங்கள்”. அதையடுத்து, மூதூர் டவுனை கைப்பற்றி அங்கு நின்றிருந்த புலிகளால் மூதூர் ஜெட்டி மீது லேசான தாக்குதல் நடத்தப்பட்டது. தரையிறங்கிய கமாண்டோ படையை தடுத்து நிறுத்த அந்த தாக்குதல் போதாது. கமாண்டோ படையில் ஒருவர்கூட உயிரிழக்காமல், பத்திரமாக கடற்படை தளத்துக்குள் சென்று விட்டனர்.

அப்போது மூதூரில் நின்று யுத்தம் புரிந்துவிட்டு, யுத்தம் முடிந்தபின் தற்போது இலங்கை தடுப்பு முகாமில் உள்ள விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் ஒருவர், “அந்த நேரத்தில் மூதூர் ஜெட்டியை நோக்கி, சம்பூரில் இருந்து ஷெல் அடித்திருந்தால், கமாண்டோக்கள் அங்கு தரையிறங்கியிருக்கவே முடியாது. ஒருவேளை தரையிறங்கியிருந்தால், பாதிப் பேராவது கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், அப்படியொரு உத்தரவு கொடுக்க யாருமில்லை” என்றார்.

இப்போது நமக்கு கிடைத்த மற்றொரு தகவலின்படி, மூதூர் தாக்குதல் தொடங்கிய தினத்தில் (ஆகஸ்ட் 3-ம் தேதி), புலிகளின் கிழக்கு தளபதி சொர்ணம், புலிகளின் பிரபாகரனுடன் நேரடித் தொடர்பில் இல்லை. புதுக்குடியிருப்பில் (வன்னி) இருந்த மற்றொரு தொடர்பாளர் (அவர் தற்போதும் உயிருடன் உள்ளார், பெயர் வேண்டாம்) ஊடாகவே, சொர்ணத்தின் தகவல்கள் பிரபாகரனுக்கு சென்று கொண்டிருந்தன.

இதனால், மூதூரில் என்ன செய்வது என்று ‘மேலிட உத்தரவை’ சொர்ணம் உடனடியாக பெறுவதற்கு சான்சே இல்லை.

தவிர, இதுதான் இறுதி யுத்தத்தின் தொடக்கம். திரிகோணமலை ஏரியாவை தவிர வேறு எங்கும் புலிகளின் தாக்குதல் நடக்கவில்லை. இதனால், யுத்த முனையில் இருந்து செய்திகளை பெற்று உடனடியாக தெரியப்படுத்த கமாண்ட் சென்டர் போல எதுவும் வன்னியில் செட்டப் பண்ணப்பட்டு இருக்கவில்லை.

புலிகளின் நிலைமை இப்படி குழப்பத்தில் இருக்க, மூதூரில் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்து கிழக்கு தளபதி சொர்ணத்துடன் வாக்கி-டாக்கி தொடர்பில் இருந்தவர், “அடுத்து என்ன செய்வது?” என்று அடிக்கடி கேட்கத் தொடங்க, சொர்ணத்திடம் இருந்து வந்த ஒரே பதில், “மேலிடத்தில் இருந்து இன்னும் மெசேஜ் கிடைக்கவில்லை. நீங்கள் செய்வதை அப்படியே தொடருங்கள்”

இப்படி நேரம் ஓடிக் கொண்டிருக்க, மூதூர் கடற்படை தளத்துக்கு, கொழும்புவில் இருந்து மெசேஜ் வந்தது.

கடற்படை தளபதி வசந்த கரணகொட, கேப்டன் உதய பண்டாரவிடம் போனில் பேசினார். “பாதுகாப்பு அமைச்சிடம் விசாரித்து விட்டோம். தரைப்படைக்கு சொந்தமான அந்த மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர், கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள தளத்தில் இருந்தால், அதை கடற்படை உபயோகிக்க எந்த தடையும் கிடையாது. நீங்கள் உபயோகிக்க விரும்பினால், தாராளமாக உபயோகிக்கலாம்”

வசந்த கரணகொடவின் அனுமதி கிடைத்ததும், மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சரை நோக்கி ஓடிச் சென்ற கேப்டன் உதய பண்டார (அப்போது கேப்டனாக இருந்த இவர், தற்போது பதவி உயர்வு பெற்று, ‘ரியர் அட்மிரல் உதய பண்டார’வாக இன்னமும் இலங்கை கடற்படையில் பணிபுரிகிறார். இலங்கை கடற்படை பயிற்சி மையத்தின் தற்போதைய டைரக்டர் இவர்), ராக்கெட் லோஞ்சரை இயக்கும் ஆட்டிலரி ஆபரேட்டரிடம் பேசினார்.

அடுத்த சில நிமிடங்களில், அந்த மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர் (MBRL) சம்பூரை நோக்கி திருப்பப்பட்டது.(தொடரும்)

ஈழப் போரின் இறுதி நாட்கள்: “சும்மா பயரிங் பயிற்சி எடுக்கிறோம்” என்றார்கள் புலிகள்! 5



(மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப் புலிகள் அடைத்தபின் தொடங்கிய யுத்தத்தில், திருகோணமலை துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளை நோக்கி ஆகஸ்ட் 3-ம் தேதி அதிகாலை புலிகள் ஆட்டிலரி ஷெல் தாக்குதல்களை தொடங்கினார்கள் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம்.)

புலிகள் சம்பூரில் இருந்த தமது தளத்தில் இருந்து ஆட்டிலரி ஷெல்களை கட்டைபறிச்சான், செல்வநகர் ஆகிய இடங்களை நோக்கி அதிகாலை நேரத்தில் ஏவினார்கள். பகல் புலர்ந்ததும், புலிகளின் சிறிய படைப் பிரிவுகள் மூதூர் பகுதியை நோக்கி நகர தொடங்கின. மூதூர் நகரை தாக்கி, கைப்பற்றும் உத்தரவு அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனிடம் இருந்தோ, அல்லது வன்னியில் இருந்தோ கொடுக்கப்பட்டதல்ல. கிழக்கு மாகாணத்தில் அங்குள்ள புலிகளின் லோக்கல் பொறுப்பாளர்களால் கொடுக்கப்பட்ட உத்தரவு இது.

மூதூர் நகரைக் கைப்பற்ற வேண்டும் என்றால், மூதூரில் உள்ள இலங்கை கடற்படைக்கு சொந்தமான தளத்தை முழுமையாக கைப்பற்ற வேண்டும்.

மூதூரில் இலங்கை கடற்படையின் naval detachment இருந்தது. மூதூர் டவுனுக்கு அருகேயிருந்த இந்த கடற்படை தளத்தின் முன் பகுதியில் சுமார் 1 கி.மீ. நீளத்துக்கு கடற்கரை இருந்தது. கடற்படை தளத்தின் முழுமையான பரப்பளவு, சுமார் ஒரு சதுர கி.மீ.

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த தெற்கு கடலோரப் பகுதிகள் கிட்டத்தட்ட முழுமையாகவே விடுதலைப் புலிகளின் வசம் இருந்தன. மூதூர் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகள் மட்டுமே ராணுவத்திடம் இருந்தது. சுருக்கமாக சொன்னால், அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கையே ஓங்கியிருந்தது.

யுத்த நிறுத்த காலத்திலேயே இந்தப் பகுதியில் விடுதலைப் புலிகள் கடற்படையை சீண்டுவது வழக்கம். திருகோணமலை கடல் பகுதியில் துறைமுகத்தை நோக்கி செல்லும் கடற்படை கப்பல்களை நோக்கி, சம்பூரில் இருந்து விடுதலைப் புலிகள் ஓரிரு ராக்கெட்டுகளை அவ்வப்போது ஏவுவது வழக்கம்.

கடற்படை உடனடியாக யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவிடம் புகார் செய்வார்கள். அவர்கள் புலிகளிடம் விளக்கம் கேட்பார்கள். இதற்கு புலிகள் கொடுக்கும் விளக்கம், “நாங்கள் சம்பூரில் எமது பகுதியில் ஃபயரிங் பயிற்சி எடுக்கிறோம். பயிற்சி கொடுக்கும்போது சில புதிய பயிற்சியாளர்கள் தவறுதலாக கடலை நோக்கி சுட்டுவிடுகிறார்கள்” என்பதுதான்.

இதற்கு யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவால் எதுவும் செய்ய முடியாது.

புகார் கொடுத்தும் பலனில்லை என்ற நிலையில் கடற்படை என்ன செய்தது என்றால், திரிகோணமலை கடலில் தமது கப்பல்களை கொண்டுவரும்போது, அவ்வப்போது சம்பூரை நோக்கி சுட்டதுதான். புலிகள் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவிடம் புகார் செய்வார்கள். கடற்படை, “கடலில் ஃபயரிங் பயிற்சி எடுக்கிறோம். சில புதிய பயிற்சியாளர்கள் தவறுதலாக சம்பூரை நோக்கி சுட்டுவிடுகிறார்கள்” என்பார்கள்.

அப்படியான இடத்தில்தான் புலிகளின் சிறிய அணிகள் மூதூரை நோக்கி நகரத் தொடங்கின. மூதூரை முழுமையாக கைப்பற்றினால், திருகோணமலை துறைமுகத்துக்கு வரும் கப்பல்களை தடுக்கலாம். துறைமுகத்துக்கு உள்ளே நிற்கும் கப்பல்களை வெளியே வராமல் முடக்கி விடலாம்.

அந்த துறைமுகத்தில் இருந்தே யாழ்ப்பாணத்துக்கு ராணுவ சப்ளைகள் சென்று கொண்டிருந்தன. சப்ளை நின்றுபோனால், ராணுவம் யாழ்ப்பாணத்துக்குள் முடிக்கப்பட்டுவிடும்.

இதுதான், மூதூரின் முக்கியத்துவம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூதூரில் இருந்த இலங்கை கடற்படையின் naval detachment-ல் அப்போது பணியில் இருந்த கடற்படையினரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 120 பேர். மூதூர் கடற்கரையின் பாதுகாப்பு கடற்படையிடம் இருக்க, மூதூர் டவுனின் பாதுகாப்பு, ராணுவத்தின் (தரைப்படை) வசம் இருந்தது. அவர்களிடமும் பெரிதாக ஆட்பலம் இருக்கவில்லை.

காரணம், அப்போது யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தது.

விடுதலைப் புலிகள் திடீரென மூதூர் மீது தாக்குதல் நடத்தியபோது, ராணுவத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சுமார் 40 நிமிடங்களில், ராணுவத்தின் முதலாவது பாதுகாப்பு வளையம் (first line of defence) உடைந்தது. காலை 10 மணியளவில், கடற்படையின் முதலாவது பாதுகாப்பு வளையத்தை உடைத்தனர் புலிகள்.

இரு தரப்பும் தொடர்ந்து யுத்தம் செய்த நிலையில், மதியம் 2 மணிக்கு, கடற்படையின் 2-வது பாதுகாப்பு வளையத்தின் பாதியளவை புலிகள் உடைத்தனர்.

அதற்கு சிறிது நேரத்துக்கு முன், மூதூரில் இருந்த ராணுவ முகாம் தாக்கப்பட்டு, முழுமையாக புலிகளின் கைகளில் வீழ்ந்தது. அதாவது, மதியம் 2 மணிக்கு மூதூர் டவுன், முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடற்படை தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.

இந்த கடற்படை தளத்தை ஒட்டியபடிதான் இருந்தது, மூதூர் போலீஸ் ஸ்டேஷன். அது அப்போதும் போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருந்தது. போலீஸ் ஸ்டேஷனை நோக்கி தாக்குதல் ஏதும் நடக்கவில்லை.

எந்த நிமிடமும் கடற்படை தளம் விடுதலைப் புலிகளின் கரங்களில் விழுந்துவிடும் என்றிருந்த நிலையில், கடற்படை அதிகாரியாக இருந்த கேப்டன் உதய பண்டார, கடற்படை தளத்தின் காம்பவுண்டுக்குள் இருந்த ஒரு பொருளை கவனித்தார்.

உடனே அவருக்கு உள்ளே ஒரு அலாரம் ஒலித்தது.

கேப்டன் உதய பண்டார கடற்படை காம்பவுண்டுக்குள் பார்த்த பொருள், ஒரு பல்குழல் ராக்கெட் லோஞ்சர் (multi barrel rocket launcher).

இந்த ராக்கெட் லோஞ்சர்தான், மூதூர் போரின் விதியை நிர்ணயிக்க போகிறது என்பது. உதய பண்டாரவுக்கோ, விடுதலை புலிகளுக்கோ அப்போது தெரிந்திருக்க சான்ஸ் இல்லை. (தொடரும்)