Thursday, September 4, 2014

ஈழப் போரின் இறுதி நாட்கள்- புலிகளுக்கு எதிராக, வெளிநாட்டு உளவுத்துறைகள் 19

2009-ம் ஆண்டு இலங்கை, வன்னியில் முடிந்த இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் கடைசியில் தமது கைகளில் வைத்திருந்த ட்ரம்ப் கார்ட்களில் ஒன்று, கரும்புலி தாக்குதல்கள் (மனித வெடிகுண்டு தற்கொலை தாக்குதல்கள்). அந்த ட்ரம்ப் கார்ட், விடுதலைப் புலிகளுக்கு கடைசி நேரத்தில் எப்படி கைகொடுக்காமல் போனது என்பதை, கடந்த சில அத்தியாயங்களில் பார்த்தோம்.

யுத்தத்தின் இறுதி நாட்களில் நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களையும், அப்போது அகப்பட்டுக்கொண்ட சில முக்கிய நபர்கள் பற்றியுமே அதில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், கொழும்புவில் கரும்புலி தாக்குதல்கள் நடத்த அனுப்பப்பட்டவர்கள் 2006-ம் ஆண்டில் இருந்தே சிறிது சிறிதாக அகப்பட தொடங்கி விட்டிருந்தனர்.

இந்த விஷயத்தில், இலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகளின் ஒத்துழைப்பு பூரணமாக கிடைத்திருந்தது. முக்கியமாக ஐரோப்பிய, மற்றும் வட அமெரிக்க (அமெரிக்கா, கனடா) நாட்டு உளவுத்துறைகள், இலங்கைக்கு கொடுத்த உளவுத் தகவல்கள், அதி பெறுமதி வாய்ந்தனவாக இருந்தன.

இதற்கு மூன்று முக்கிய காரணங்கள்.

1) விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயல்பாட்டாளர்கள் பலருக்கு, வெளிநாடுகளில் கொடுக்கப்பட்டு இருந்த ‘ஓவர் சுதந்திரம்’ என்ன என்பது புரியவில்லை. மேலை நாட்டு உளவுத்துறைகளில் ஆபரேஷன் பட்டர்ன் (operation pattern), அவர்களுக்கு சுத்தமாக புரிந்திருக்கவில்லை. அவர்களில் யாரும், வெளிநாட்டு உளவுத்துறைகளுக்குள் ஊடுருவி இருக்கவும் இல்லை.

அவர்கள் தங்கியிருந்து செயல்பட்ட நாடுகள், அவர்கள் செய்த எந்த விஷயத்தையும் கண்டுகொள்ளவில்லை என்பது போன்ற ஒரு தோற்றமே இருந்தது. அந்த தோற்றம் நிஜமானது என்றே அப்பாவித்தனமாக நம்பினார்கள் அவர்கள்.

ஆனால், மேலை நாட்டு உளவுத்துறைகளால், அவர்கள் மீது நீண்ட கயிறு ஒன்று போடப்பட்டிருந்தது. இவர்கள் மீது கட்டப்பட்ட கயிறு மிக நீளமாக இருந்தால், இவர்கள் எங்கு போவதையும் கயிறு இறுக்கி பிடிக்காது. ஆனால், கயிறு இவர்களுடனேயே சென்று கொண்டிருக்கும்.

எங்கே போகிறார்கள், வருகிறார்கள், என்ன போக்குவரத்து என்பதெல்லாம் கயிறுக்கு தெரிந்திருக்கும்.

அவசியம் ஏற்பட்டால், கயிற்றை இழுத்து ஆட்களை பிடிக்கலாம் (அதுதான், பிரான்ஸில் நடந்தது). அல்லது, அப்படியே கயிற்றுடன் நடமாட விட்டு, தொடர்ந்து விபரங்களை அறிந்து கொண்டே இருக்கலாம் (கனடா, பிரிட்டன் உட்பட பல நாடுகளில் தற்போதுகூட நடக்கிறது)

எந்தவொரு நாடும், அது சிறியதோ, பெரியதோ, தீவிரவாத இயக்கம் ஒன்று தமது நாட்டில் வெளிப்படையாக செயல்படுவதை விரும்புவதில்லை என்பது, ராஜதந்திரத்தின் பாலபாடம். ஆனால், அரசியல் காரணங்களுக்காக செயல்பட அனுமதிக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள். அப்படி அனுமதிக்கும்போது, இயக்கத்தின் செயல்பாட்டை முழுமையாக அறிந்து வைத்துக்கொண்டே இருப்பார்கள். அது, அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு இஷ்யூ.

ஒரு உதாரணத்துக்கு கனடாவை எடுத்துக் கொள்ளலாம். இலங்கையில் அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் விடுதலைப் புலிகள் இயக்கம் கனடாவில் செயல்படுவதால், கனடாவில் தேசிய பாதுகாப்பு இஷ்யூ என்ன உள்ளது?

நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்படலாம் என்பதே, கனடாவின் நிலைப்பாடு.

கனடாவின் வெளியுறவு அமைச்சு, வெளிநாடுகளில் இயங்கும் கனேடிய தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்காக ஏற்படுத்தியுள்ள foreign services exam பாடத்திட்டத்தை எத்தனைபேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. அதில் மிக தெளிவாக சொல்லப்படும் ஒரு விஷயம், “பல ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள வெளிநாடு ஒன்றில், ஒற்றை துப்பாக்கி ஒன்றை வைத்து அந்த நாட்டுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத இயக்கம் ஒன்று, கனடாவில் செயல்பட்டால், அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்”

சில சமயங்களில், இந்த பாலிஸியை சரியாக பின்பற்றாமல், சிக்கலுக்குள்ளான நாடுகள் பல உள்ளன. அதற்கு ஒரு உதாரணமாகவும், கனடாவையே எடுத்துக் கொள்ளலாம்.

1980களில் கனடாவில் மிக பலமாக இருந்த சீக்கிய காலிஸ்தான் இயக்கம், ‘பாப்பர் கல்சா’. இந்திரா காந்தியின் உத்தரவுப்படி நடந்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு பின் இந்த இயக்கம் கனடாவில் ஓகோ என்றிருந்தது. அரசியல் காரணங்களுக்காக வெளிப்படையாக செயல்படவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

கனடாவின் கால்கரி நகரில் சீக்கிய கோவிலில் நடந்த கூட்டம் ஒன்றில், பாப்பர் கல்சாவின் தல்விந்தர் சிங் பார்மர், “இந்தியாவுக்கு பாடம் கற்பிக்க, ஏர்-இந்தியாவின் விமானம் வானில் இருந்து உதிர்ந்து தரையில் விழும்” என்று முழக்கம் செய்தபோது, அங்கு கூடியிருந்த 100% சீக்கியர்கள் மத்தியில் கனேடிய உளவுத்துறை CSIS-ன் (சீக்கிய இன) உளவாளிகளும் இருந்தார்கள்.

இவர்கள் வெடிகுண்டு ஒன்றை தயாரித்து, கனடாவின் டங்கன் (பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம்) நகரின் காட்டுப் பகுதியில் அதை வெடிக்க வைத்து பரிசோதித்த போதுகூட, கனேடிய உளவுத்துறை ஆட்கள், அந்த காட்டுக்குள் ஒரு மரத்துக்கு பின்னால் மறைந்திருந்து பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

ஆனால், 1980களில் இதை சீரியசாக எடுக்காத காரணத்தால், டங்கன் நகரில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு, வான்கூவரில் இருந்து டொரன்டோ, மொன்ட்ரியோல் நகரங்கள் ஊடாக ஏர்-இந்தியாவின் ‘கனிஷ்கா’ விமானத்துக்குள் ஏற்றப்பட்டது.

கனிஷ்கா விமானம் அட்லான்டிக் கடலுக்கு மேல், வெடித்துச் சிதறியதில், 329 பேர் கொல்லப்பட்டனர்.

“இந்தியாவில், பிரதமர் இந்திரா காந்தியால் பஞ்சாப்பில் நடத்தப்பட்ட ப்ளூ ஸ்டார் ஆபரேஷனுக்காக, இந்திய அரசை பழிவாங்க, இந்திய அரசுக்கு சொந்தமான ஏர்-இந்தியா விமானத்தை வீழ்த்தினார்கள், இந்தியாவில் காலிஸ்தான் தனிநாடு கோரிய பாப்பர் கல்சா இயக்கத்தினர்” என்ற வாக்கியத்தில், ‘கனடா’ என்ற சொல் எங்காவது வருகிறதா?

வரவில்லை, அல்லவா?

ஆனால், ஏர்-இந்தியாவின் கனிஷ்கா விமானம் வெடித்துச் சிதறியதில், கொல்லப்பட்ட 329 பேரில், 268 பேர் கனேடிய பிரஜைகள்! (இந்திய பிரஜைகளின் எண்ணிக்கை, வெறும் 24)

இப்படி நாம் எழுதியதும், வாசகர்கள் சிலர் சொல்லக்கூடிய காமென்ட், “அதெல்லாம் சீக்கியர்களின் அட்டகாசம். ஈழ விடுதலை போராளிகள் வேறொரு நாட்டில் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்”.

இதே காமென்ட்டை, கனேடிய தேசிய பாதுகாப்பு பாலிஸி மேக்கிங் ஆட்களிடம் யாராவது, சொல்லியிருக்க மாட்டார்களா?

சொல்லியிருப்பார்கள். அதற்கு அவர்கள் என்ன செய்திருப்பார்கள்? கையிலிருந்த பைலை தட்டிப் பார்ப்பார்கள். அதில் கீழ்வரும் டாக்குமென்ட் ஒன்று இருக்கும்:

1984-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சென்னையில் இருந்து கொழும்பு சென்ற ஏர்-லங்கா விமானத்தில் ஏற்றப்பட்டு, கொழும்புவில் வெடிக்க வேண்டிய வெடிகுண்டு ஒன்று, விமானத்தில் ஏற்றப்படாமல், ஏர்-லங்கா விமானம் புறப்பட்டு சென்றது. குண்டு, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வெடித்ததில், விமான நிலைய டேர்மினல் பில்டிங் கடும் சேதமடைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயமடைந்தனர்.

இதற்கும் ஒரு காமென்ட் அடிக்கலாம். “அது விடுதலைப் புலிகள் அல்ல, வேறு இயக்கம் (தமிழீழ ராணுவம் என்ற இயக்கம்)”

சுவாரசியமாக அப்படியே விவாதித்துக் கொண்டு போகலாம். லேசில், முடிவுவராது. அதில் சிக்கல் இல்லை.

சிக்கல் என்னவென்றால், நாம் மேலே குறிப்பிட்ட இரண்டையும் வைத்து, கனேடிய அரசு தமது தேசிய பாதுகாப்பு தொடர்பாக பாலிஸி வைத்திருக்கிறது. கனடாவில் இருந்து செயல்படும் போது, அதை புரிந்து கொண்டு செயல்பட்டால், பாதிப்பு ஏற்படாது.

“இது முட்டாள்தனமான பாலிஸி” என்று ‘முட்டாள் கனடா’வின் பாலிஸியை ஏற்று கொள்ளாமல் செயல்பட்டால், என்ன விளைவு ஏற்படும்?

விளைவு இனித்தான் ஏற்பட வேண்டும் என்றில்லை…,

ஏற்கனவே, 2009-ம் ஆண்டே ஏற்பட்டு விட்டது.

இலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகள் தகவல் கொடுத்ததற்கு நாம் குறிப்பிட்ட மூன்று காரணங்களில் ஒன்று இது. அடுத்த காரணங்களை, அடுத்த அத்தியாயத்தில் படியுங்கள்… (தொடரும்)

No comments:

Post a Comment